Tuesday, June 23, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 10

திருப்பல்லாண்டு - பாடல் 10

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுதப்பட்ட
அந்நாளே* அடியோங்களடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்*
செந்நாள்தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து* ஐந்தலைய
பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே!

பொருள்:

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுதப்பட்ட அந்நாளே - எந்நாளில் எங்களின் இறைவனான உமக்கு நாங்கள் அடியவர்கள் என்று எழுதப்பட்டதோ அந்நாளே,

அடியோங்களடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் - அந்நாளிலேயே இந்த அடியவர்களின் குடிகளும் குலமும்( எங்கள் குலத்தவரும், குடும்பத்தவரும்) வீடு பேறு அடைந்து உய்வு பெற்றுவிட்டோம்! (வீடு - முக்தி)

செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து - கண்ணனின் உண்மையான தாய் தந்தை தேவகியும் வாசுதேவனும்! ஆனால், கம்சனின் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனை அழிக்கும் என்று அசரீரி சொன்னதைக் கேட்டு கம்சன், அவன் தங்கையையும் தங்கையின் கணவனையும் சிறையிலடைத்து வைத்து, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாய்க் கொன்றுவிட்டான்.

தேவகியின் ஏழாவது குழந்தையான பலராமன் கருவிலேயே ரோகிணியின் கருவிற்கு மாற்றப்பட்டது.

எட்டாவது குழந்தையான கண்ணன், ஆவணித்திங்கள், தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் திருஅவதாரம் புரிந்தார். கண்ணன் அவதரித்த நள்ளிரவிலேயே வாசுதேவன் தன் ஆயர் குலத் தோழனான நந்தகோபர் மற்றும் யசோதையிடம் குழந்தையைத் தந்துவிட்டு அவர்களின் பெண்குழந்தையை மாற்றிக் கொண்டு இரவோடு இரவாக சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார்.

கம்சன் அக்குழந்தையை சுவற்றிலடித்துக் கொல்ல முயன்ற பொழுது, ''அது, கம்சா! உன்னை அழிக்கப்போகும் கண்ணன் பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக அறிவித்து விட்டுப் பறந்து சென்றது!''

கோகுலத்தில் நந்தகோபர் யசோதையிடம் கண்ணன் சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்தான். அதனையறிந்த கம்சன், கண்ணனை வடமதுரைக்கு(மதுரா) வரவழைத்து நயவஞ்சகமாகக் கொன்றுவிடவேண்டுமென்று எண்ணினான்.

தனுர்யாகம் என்னும் யாகம் ஒன்றை நடத்தி, அதற்கு சிறுவன் கண்ணன் கண்டிப்பாக வரவேண்டுமென்று அழைப்புவிடுத்தான். ஆனால், கோகுலத்திலுள்ள எவரும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் கண்ணன், அவர்கள் அனைவரையும் சமாதானப் படுத்தி, தான் மதுரைக்குச் செல்வதன் விவரத்தை எடுத்துக் கூறி, அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் மதுரைக்குச் சென்றவுடன், அங்கு யாகத்திற்காக வைக்கப்பட்டிருந்த மிகவும் கனமான வில்லை நோக்கி விரைந்து சென்று அதை தன்இடது கையினால் இறகைத் தூக்குவது போல் தூக்கி உடைத்தான். வில்லொடிந்த ஓசையானது பேரிடி முழக்கம் போல் அகிலமெங்கும் எதிரொலித்தது. யாகத்திற்குரிய வில் உடைந்துவிட்டதால் அது யாகத்தின் காரியகர்த்தாவான கம்சனுக்கு உகந்தது அல்ல, என்னும் செய்தியறிந்து மிரண்டுபோய் விட்டான் கம்சன். அதன் பிறகு கம்சன் ஏவிவிட்ட தடைகளையும் மீறி கம்சனை இறைவன் வதம் புரிந்து, தன் தாய் தந்தையரை மீட்டதோடு, மதுராபுரியின் ஆட்சியையும் கம்சனின் தந்தையான உக்கிரசேனரிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வைத்தான் ''செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து'' அப்படின்னு சொல்றார் பெரியாழ்வார். செம்மையான திருநாளில் பிறந்து (தோன்றி)வடமதுரைக்குச் சென்று வில்லை ஒடித்த கண்ணபிரானே! ( செந்நாள் - செம்மை+நாள்- சிறந்த நாள், தோற்றி - தோன்றி- பிறந்த, சிலை - வில், குனித்து - உடைத்து)

ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே - ஐந்து தலைகளைக் கொண்ட படமெடுத்தாடும் நாகத்தின் தலைமேல் பாய்ந்து நடனம் புரிந்தவனே!

யமுனை நதியின் ஒருபகுதியில் கொடிய விஷத்தைக் கொண்டுள்ள ஐந்து தலை நாகமொன்று இருந்து வந்தது. அதன் பெயர் காளிங்கம் (அ) காளியன். அது தன் விஷத்தை எல்லாம் நதி நீரிலேயே கக்கி கக்கி அப்பகுதி நீர் முழுதும் விஷமாகவே மாறிவிட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் எந்த ஒரு உயிரினமும், தாவரங்களோ, விலங்கினங்களோ உயிர் வாழ முடிவதில்லை. ஒரே ஒரு கடம்ப மரம் மட்டும் கரையில் வளர்ந்திருந்தது.

ஒரு நாள் பிருந்தாவனத்திலே, தன் தோழர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறுவன் கண்ணன். அப்பொழுது திடீரென அப்பந்து காளிங்கன் இருந்த பகுதியில் சென்று விழுந்து விட்டது. அதை எடுக்க கண்ணன் அங்கு சென்றபொழுது ஆயர் குல சிறுவர்கள் அனைவரும் தடுத்தனர். அவர்கள் பேச்சைக் கேளாமல் கண்ணன் அங்கு செல்லவே, அவர்கள் அச்சமுற்று கோபியர்களிடம் சென்றுரைத்தனர்.

கண்ணனோ, கடம்ப மரத்தின் கிளை வழியாக காளிங்கன் இருந்த இடத்திற்குச் சென்றான்.
சிறுவர்கள் அழைத்து வந்த கோபியர்களோ, தங்களின் கண்ணனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று அஞ்சி அவர்களும் கூவி அழைத்துப் பார்த்தனர்; ஆனால் கண்ணன் யார் பேச்சையும் கேட்பதாயில்லை.

நீரின் சலனத்தால் உறக்கம் களைந்த காளிங்கனோ சினமுற்று கண்ணனைப் பின்னிக் கொண்டான்.

இதைக்கண்ட கோபியர்கள் சிலர் மூர்ச்சித்துப் போயினர். கண்ணனைத் தடுக்கச் சென்ற ஆயர்களையும் பலராமன் தடுத்துவிட்டார்.

கண்ணனும் அவன் போக்கிலே விட்டு பின் அதன் தலைமேல் ஏறி நின்று, தன் புல்லாங்குழலை இசைத்தவண்ணம் நடனம்(நர்த்தனம்) புரியத் துவங்கினான். இந்த நடனத்தின் பெயர் ''காளிங்க நர்த்தனம்''.

இறைவனின் கால் காளிங்கனின் தலை மேல் படும் போது, அண்ட சராசரமே திரண்டு வந்து தன் தலையில் உருளுவதைப் போல் உணர்ந்தான். தன் ஆணவத்தால் அவன் தலைத் தூக்கும் போதெலாம், இறைவன் அந்த தலையில் ஒரே மிதியாய் மிதித்து நடனமாடினான். காளிங்கனும் சோர்வுற்று மரணபயம் கொண்டு, செய்வதறியாது திகைத்தான். அவனின் மனைவியர் வந்து இறைவனிடம், தங்களின் கணவரை விட்டுவிடும்படி இறைஞ்சினர். இறைவனும் காளிங்கனைக் கொல்லாது, அதன் ஆணவத்தை மட்டும் கொன்று திருவருள் புரிந்தான்.

கண்ணனின் இந்த விளையாட்டைத்தான் ''ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே'' என்னும் வரியில் குறிப்பிடுகிறார். (ஐந்தலைய - ஐந்து தலைகளை உடைய, பைந்நாகத்தலை - படமெடுக்கும் பாம்பின் தலை).

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே - உனக்குப் பல்லாண்டு கூறுவோமாக!

பதவுரை:

ஆயர்குலக் குழந்தாய் கண்ணனே! எந்த நாளில் நாங்களெல்லாம் உமக்கு அடியவர்கள் என்று எழுதப்பட்டதோ அன்றே, எங்கள் குலத்தினர் அனைவரும் வீடு பேறு பெற்றுவிட்டோம்! மிகவும் உன்னதமான நாளில் மதுரா நகரத்து உதித்தவனே, நீ அன்று கம்சனின் தனுர் யாகத்திற்கான வில்லை ஒடித்ததோடு, காளிங்க நாகத்தின் விஷம் நிறைந்த தலைப்பகுதியில் காளிங்க நடனம் புரிந்தவனே! உனக்குப் பல்லாண்டு கூறுவோமாக!

Sunday, June 21, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 9

திருப்பல்லாண்டு பாடல் - 9

உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு - இறைவா! எம்பெருமானே! நீ உடுத்துக் களைந்த, உன் திருமேனித் தழுவிய பட்டாடைகளையே நாங்கள் உடுத்திக் கொள்வோம்; உனக்குத் திருவமுது செய்தபின், அமுதுக்கிண்ணத்தில் மிஞ்சியிருக்கும் கற்பூரம் மணக்கும, கமலப்பூ மணக்கும் உன் வாய்ச்சுவையையும் நாற்றமும் ஒருங்குக் கொண்ட இறைஉணவையே நாங்கள் உண்ணுவோம்! (பீதகவாடை - பீதகம் + ஆடை - - பீதகம் -பட்டுபீதாம்பரம்;கலத்ததுண்டு - கலத்தது + உண்டு - உணவுக் கலத்தில் உள்ளதனை உட்கொண்டு )

தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் - உனக்கென்றேத் தனியாகத் தோட்டம் வைத்து, அதில் இருக்கும் சிறந்த திருத்துழாய் மலர்களைக் கொண்டு வடிவாய் வணக்கத்துடன் தொடுத்த மலர்மாலைகளை உனக்கு நாங்கள் அணிவிப்போம்! அதை நீ அணிந்து மகிழ்ந்து எங்களுக்குத் திருவருள் புரிவாய்; பின் நீ சூடிக் களைந்த திருத்துளசி மாலைகளையே அணிந்துக் கொள்ளும் உம் அடியவர்கள் நாங்கள்! (துழாய் - துளசி)


விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில் - நீ எந்த திசையில் என்ன வேலை எங்களுக்கு இட்டாலும், அவற்றை எல்லாம் நின் திருவடிப் பெயராலே, விரைந்து, திருத்தமாக முடித்துவிட்டு, திருவரங்கநாதா! திருவோணத் திருநாளில், (கருமம் - பணி, வேலை)

படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் தன்னையே பாயாக விரித்து, படமெடுக்கும் பாம்பினையே பஞ்சணையாகப் பள்ளிக் கொள்ளும் திருவரங்கநாதனுக்கு நாம் பல்லாண்டு கூறுவோமாக! ( பைந்நாகணை - பைந்நாக அணை - படமெடுக்கும் நாகத்தினை பஞ்சணையாகக் கொள்ளுதல்)

பதவுரை:

எங்கள் இறைவனே, திருவரங்கநாதா! நீ உடுத்திக் களைந்துபோட்ட, உன் திருமேனித் தொடர்புடைய பட்டாடையையே நாங்கள் உடுத்தி, நின் திருவமுது சுவைத்தபின், எஞ்சிய உணவையே நாங்களும் உண்டு, நீ களைந்துவிட்ட திருத்துளசி மாலைகளையே நாங்களும் அணிந்து கொண்டு, நீ எத்திசையில் என்ன வேலையிட்டாலும் அவற்றினை விரைந்து முடிக்கும் அடியவர்களான நாங்கள், படமெடுத்தாடும், ஐந்து தலைகளைக் கொண்ட ஆதிசேஷனைப் பஞ்சணையாகக் கொண்டு, அதன் மேல் துயில்கொள்ளும் திருவரங்கப் பெருமானே, உமக்குகந்த திருவோணத் திருநாளில் நாங்கள் பல்லாண்டு பாடுவோமே!

திருப்பல்லாண்டு - பாடல் 8

திருப்பல்லாண்டு பாடல் - 8

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

பொருள்:

நெய்யிடை நல்லதோர் சோறும் - நல்லா சுத்தமான நெய்யில் கலந்திட்ட நல்ல சோறும், ( சாப்பாட்டுல நெய் கலக்கவில்லை, நெய்யில கலந்த சாப்பாடாம்...), நியதமும் அத்தாணிச் சேவகமும் - நித்தமும் அத்தாணி மண்டபத்தில் இறைவனுக்குச் சேவையும் (கைங்கர்யமும்), (நியதமும் - நிதமும், நித்தமும், தினமும்)

கையடைக் காயும் - கை + அடைக் காய்; அடைக்காய் இலை ன்னா கொட்டாப்பாக்கும் கொழுந்து வெத்தலையும்... விருந்துணவு முடித்தபின் நம் கைகளில் தாங்கி விருந்தினரை எடுத்துக் கொள்ளச் சொல்லும் வெற்றிலைப் பாக்கு(அடைக்காய் - தாம்பூலம், பாக்கு)
கழுத்துக்குப் பூணொடு -கழுத்துக்குத் தேவையாண அணிகலன்களொடு (பூண் - அணிகலன்)
காதுக்குக் குண்டலமும் - காதுக்குத் தோடும் (குண்டலம் - காதணி)

மெய்யிட நல்லதோர் சாந்தமும் - தேகத்திலிடுவதற்கு (பூசுவதற்கு) இனிமையான மணமுடைய அரைச்ச சந்தனமும் (மெய் - தேகம், இட - பூச, தடவ; சாந்தம் - சந்தன சாந்து)
தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல - இவற்றை எல்லாம் தந்தருளி என்னை பாவங்களற்ற, தூய எண்ணங்கள் கொண்ட வெள்ளை மனம் உடைய உயிராக்கவல்ல(இறைவனைப் பற்றியே என்றும் நினைக்கவல்ல) மனம் தூயதானால், உயிரும் தூய்மையானதாகும்! (வெள்ளுயிர் - தூய எண்ணங்கள் உடைய உயிர்) உயிர் என்பது இங்கு ஆழ்வாரையேக் குறிக்கிறது!

பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே - படமெடுக்கும் நல்லபாம்பின் பகைவனான கருடனைத் தன் கொடியாகக் கொண்டுள்ள மன்னவனுக்கு நான் எந்நாளும் பல்லாண்டு பாடுவனே!( பையுடை நாகம் - படமெடுக்கும் தேகமுடைய நல்லப் பாம்பு, நாகப் பகை - நல்லப் பாம்பின் பகைவன், கருடன்; கொடியான் - கருடனைத் தன் கொடியில் கொண்டுள்ள இறைவன், ஸ்ரீமன் நாராயணன் )

பதவுரை:

நெய்யில் கலந்திட்ட நல்ல சுவையான உணவும், தினமும் இறைவனின் அத்தாணி மண்டபத்தில் சேவையும், தாம்பூலமும், கழுத்துக்கு மாலை முதலான அணிகலன்களும், காதுக்குக் குண்டலமும், தேகத்தில் பூசுவதற்கு இதமாகக் குழைத்த சந்தனமும் தந்து என்னை பாவங்கள் அற்ற, தூய எண்ணங்களைக் கொண்டவனாக ஆக்க வல்ல, படமெடுத்து ஆடும் நல்லபாம்பின் பகைவனான கருடனைத் தன் கொடியில் கொண்டுள்ள இறைவனுக்கு நான் பல்லாண்டு பாடுவேனே!

Friday, June 19, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 7

திருப்பல்லாண்டு பாடல் 7

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி
பாய* சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின் - (கொழுந்து விட்டெரியும் செழுந்தணல் எவ்வளவு பொலிவா இருக்குமோ அதவிடப் பொலிவானது) அதைத்தான்,தீயிற் பொலிகின்ற - தீயிலிட்டு பொலிவு பெற்ற, சிவந்த சுடரொளி வீசும் ஆழி( சுதர்சன சக்கரம்), தீயிலிட்ட பொன்னைப் போல் மின்னும் திருச்சக்கரத்தின், (தீயிற் பொலிகின்ற - தீயிலிட்டு பொலிவு பெற்ற, செஞ்சுடராழி - சிவந்த சுடருடைய திருச்சக்கரம், திகழ் - மின்னுதல்)

கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் - இறைவனின் திருக்கோயிலிலே தீயிலிட்டுச் சிவந்த திருசங்கு மற்றும் திருசக்கரத்தின் சின்னங்களை எங்கள் தோள்களில் பக்தியுடன் முத்திரையாக ஒற்றிக் கொண்டு தலைமுறை தலைமுறையாக, எங்கள் இல்லங்களில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட மனதுடன் நின்று, தொடர்ந்து திருத்தொண்டு புரிந்து வருகின்றோம்! (கோயிற் பொறி - திருசங்கு, திருசக்கர முத்திரை, ஒற்றுண்டு - அடையாளச் சின்னமாகக் கைகளில் ஒற்றிக் கொண்டு, குடி குடி - குடும்பத்திலுள்ள அனைவரோடும், ஆட்செய்கின்றோம் - திருத்தொண்டு புரிகின்றோம்)

மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய - வாணாசுரன்(பாணாசுரன்) என்னும் அசுரன், பிரகலாதனின் பேரனான மகாபலி என்னும் அசுரவேந்தனின் புதல்வன்தான் இந்த பாணாசுரன். ஆயிரங்கரங்கள் கொண்ட இந்த பாணாசுரன் மாயப்போர் புரிவதில் வல்லவன். இவன் மகளான உஷை, பிரத்யும்னனி்ன் மகனான அநிருத்தனை ( இறைவன் கிருஷ்ணனின் பேரனாவான்)க் கனவில் கண்டு, காதல் வசப்பட்டாள். கனவிலேத் தான் கண்டு ஒருதலையாகக் காதல் கொண்டதை, தன் தோழியான சித்திரலேகா என்பவளிடம் கூற, அவளும் அவன் யாரெனக் கண்டறிந்து, ஒருநாள் இரவில் தன் மாயசக்தியால் அநிருத்தனை துவாரகாவில் இருந்து தூக்க நிலையிலேயேக் கடத்திவந்து, இளவரசியான உஷையிடம் ஒப்புவித்தாள்.

இவர்களின் காதலை அறிந்ததும், பாணாசுரன், அநிருத்தனை சிறையிலடைத்துவிட்டான். இதையறிந்த, கிருட்டினனும், அவன் தந்தையான பிரத்யும்னன், பலராமன் மற்றும் ஏனையோரும் பாணாசுரனின் அரண்மனையை நோக்கி படையெடுத்து வந்தனர். அப்பொழுது நடந்த போரில் இறைவன் கண்ணன் தன் திருச்சக்கரத்தால் பாணாசுரணின் கைகளை எல்லாம் துண்டித்துவிட்டான். இதனால் அந்த அசுரனின் தோள்களிலிருந்து இரத்தம் குபு குபுவெனப் பாய்ந்தோடியது.

அசுரனை வதம் செய்யாமல் அவனுக்கு ஆணவம் தந்த அவனது கைகளை மட்டும் துண்டித்து, அவனுக்குத் திருவருள் புரிந்தார், இறைவன்! அதன்பின், துவாரகாவில் தன் பேரனான அநிருத்தனுக்கும் உஷைக்கும் முறைப்படித் திருமணம் செய்துவைத்தார், கண்ணபெருமான்.

இதுதாங்க கதைச் சுருக்கம்!!

மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய - கிருஷ்ணாவதாரத்தில், மாயப் போர் புரிவதில் வல்லவனான வாணாசுரன் என்னும் அசுரனின் ஆயிரம் கைகளை இரத்தம் பொங்கிவரும் அளவுக்கு திருச்சக்கரத்தால் துண்டித்த, (மாயப் பொருபடை - மாயவித்தைகள் புரியும் பகைவனின் படை, வாணன் - வாணாசுரன் என்னும் அசுரன், பொழிகுருதி - இரத்தம் வழியவழிய, குருதி -இரத்தம்)

சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - இவ்வாறு, மாயப் போர்புரிபவனின் ஆணவக் கைகளை இலாவகமாய் திருசக்கரத்தால் வெட்டிய வீழ்த்திய வல்லவனுக்கு பல்லாண்டு கூறுவோமாக! (வல்லான் - வல்லவன், சிறந்தவன்)

பதவுரை:

மாயப் போர்புரியும், வாணாசுரனின் ஆயிரந்தோள்களையும் இரத்தம் ஆறென வழிந்தோடும் அளவுக்குத் துண்டித்த, திருச்சக்கரத்தைத் தம் கையில் தாங்கிய வல்லவனான கண்ணபிரானுக்கு, நாங்கள், எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் இறைவனின் கோயிலிலே, தீயிலிட்டு பொலிவுபெற்ற சிவந்த சுடரினை உமிழும் திருசங்கு,சக்கரப் பொறிகளை எங்கள் தோள்களில் இறைவனின் அடியோர்கள் என்னும் அடையாள முத்திரையாக ஒற்றிக் கொண்டு அவனுக்குத் திருத்தொண்டுகள் புரிகின்றோம்! அத்தகைய வல்லமைமிக்க இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவோமாக!!

Sunday, June 14, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 6

திருப்பல்லாண்டு பாடல் - 6

எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திருவிழவில்
அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனை*

பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.

பொருள்:

எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் - நான், என் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் பாட்டனார் தொடங்கி முதல் வந்த இந்த ஏழு தலைமுறைகளாக நாங்கள் வழிவழியாக வந்து இறைவனுக்கு திருத்தொண்டுகள் செய்கின்றோம். (எந்தை - என் தந்தை, நான் + என் தந்தை என்று இருவரையும் இங்கு சுட்டுகிறது, மூத்தப்பன் - தந்தையின் தந்தை, தாத்தா)

திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை - திருவோணத் திருநாளன்று அந்தி மாலைப் பொழுதில் ஆளரி (ஆளரி - ஆள்+அரி, மனிதன்+சிங்கம்) வடிவில் திருவவதாரமெடுத்து இரண்யகசிபு என்னும் அசுரனை வதம் செய்தவனை, அதாவது

இது ஒரு பெரிய்ய கதைங்க.... இதச் சொல்லனும்னா நாம இரண்யகசிபு உருவான ஆதி முதல் மூலத்திலிருந்து வரவேணும்....

கதைச் சுருக்கம்:

வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, நம் பெருமான் அவர்கள் இருவரையும் மனிதர்களாகப் பிறக்க சாபம் அளித்துவிட்டார்.

உடனேப் பதறிப்போன, பாலகர்கள் தங்களால், இறைவனைப் பிரிந்து ஒருகாலும் இருக்க இயலாது என்று இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கதறினர். கருணாமூர்த்தியான நம் இறைவனும் அவர்களுக்காக மனமிறங்கி, உங்களுக்கு நான் இரண்டு சந்தர்ப்பங்களைத் தருகிறேன். * நீங்கள் என் அடியவர்களாக ஏழு பிறவிகள் பிறந்து (சிலர் நூறு என்று கூறுகின்றனர்) அதன் பிறகு என்னை வந்து அடைகிறீர்களா? இல்லை, ** மூன்று பிறவிகள் என்னை எதிர்ப்பவர்களாக, கொடிய அசுரர்களாக இருந்து என்னை வந்து அடைகிறீர்களா? என்று வினவினார்.

அதற்கு, அந்த பாலகர்கள், எங்களால் நீண்ட காலம் தங்களைப் பிரிந்து இருக்க இயலாது, எனவே, தங்களை எதிர்ப்பவர்களாகப் பிறந்தாலும் விரைவில் தங்களிடம் வந்து சேர்ந்தால் போதும் இறைவா! என்று வேண்டினர். அதோடு இறைவனிடம், மேலுமொரு வரமும் வேண்டினர், அவர்களின் பிறப்புகளுடைய நிறைவு இறைவனால் அன்றி, வேறு எதனாலும் நிகழக்கூடாது என்று கேட்டனர். இறைவனும் அவ்வாறே திருவுளம் புரிந்தார்.

அந்த துவார பாலகர்கள்தான், கிருத (சத்திய) யுகத்தில் இரண்யாக்ஷ்ன் மற்றும் இரண்யகசிபுவாகவும், திரேதாயுகத்தில் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், துவாபர யுகத்தில் சிசுபாலர் மற்றும் தந்தவக்ரனாகவும் பிறந்தனர்.

''நிழலின் அருமை வெயிலில்,
வெயிலின் அருமை குளிரில்,
அன்பின் அருமை பிரிவில்'' ன்னு சொல்ற மாதிரிஇறைவனின் திருவருளையும், அவனே கருணைக் கடலின் எல்லை என்பதையும் உலக மக்களுக்கு ஏன் தேவர்களுக்கு உணர்த்திய பெருமை இந்த துவார பாலகர்களுக்கு உண்டு.

சரி, இப்ப சங்கதிக்கு வருவோம்.... துவார பாலகர்களின் முதல் பிறவியில் காசியப முனிவருக்கும் அவரது மனைவியருள் ஒருவரான திதி க்கும் இரட்டைக் குழந்தைகளாக இந்த பாலகர்கள் பிறந்தனர். இரட்டையர்களில் மூத்த மகனுக்கு இரணியகசிபு என்றும், இளையவனுக்கு இரண்யாக்ஷன் என்றும் பெயரிட்டனர். இரண்யாக்ஷனை வராக அவதாரம் எடுத்து வதம் செய்தார், மகாவிஷ்ணு. இதனால், மிகவும் கோபமுற்ற அவன் அண்ணன் இரண்யகசிபு, மகாவிஷ்ணுவைத் தன் பரம விரோதியாக நினைத்து, அவனை(ரை) எதிர்த்து சண்டையிடவும், அழிக்கவும் வேண்டி பிரம்மதேவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். தவத்தின் பலனாக, அவன் முன் தோன்றிய பிரம்ம தேவனும், அவன் கேட்ட வரத்தை வேறு வழியின்றி அருளினார்.

அப்படி அவர் என்ன வரம் கேட்டார்??? தனக்கு மரணம் பகலிலோ, இரவிலோ நிகழக்கூடாது. அதுமட்டுமல்லாமல் வீட்டின் உள்ளேயும் நிகழக்கூடாது, வெளியேயும் கூடாது, மனிதனோ, வேறு எந்த விதமான மிருகமோ, நீர்வாழ்உயிரினங்கள், பறவைகள், தேவர்கள், அசுரர் என யாராலும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. ஆயுதங்கள் ஏதும் என்னை தாக்கி அழிக்கக் கூடாது. பூமியிலும் நான் இறந்துபடக் கூடாது, ஆகாயத்திலும் நான் இறக்கக் கூடாது என்று ஏகப்பட்ட 'கூடாது' நிபந்தனைகளை வரமாக வேண்டினான்.

இரண்யகசிபு தவம் புரியச் செல்லும் வேளையில், அவன் மனைவியான கயாது, கருவுற்றிருந்தாள். அதையும் கூட பொருட்படுத்தாமல், அவன் மனைவியைத் தனியே விடுத்து, அரண்மனை வாசம், அரச வாழ்க்கை அனைத்தையும் துறந்து, தவம் புரிய தனிமையான ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டான். அவன் தவம் முடித்து வரும் முன்னமேயே, கயாது ஒரு அழகிய புதல்வனைப் பெற்றெடுத்திருந்தாள். அந்தக் குழந்தைதான், பிரகலாதன்.

பிரகலாதன் சிறுவனானதும், அவனை குருகுலம் அனுப்பி வைத்தனர், பெற்றோர். அங்கே அவர்கள் கற்றுத் தந்த பாடங்களைப் படிக்க மறுத்ததோடல்லாமல், அவர்களையும் நாராயணனின் திருநாமம் சொல்லச் சொன்னான். குருகுலம் முடித்து,அரண்மனைக்குச் சன்ற நாட்களில், இரண்யகசிபு அவனை அன்போடு அணைத்து, குருகுலத்தில் பயின்றவற்றைக் கூறுமாறு கேட்டான். அப்போது, பிரகலாதன் ''ஓம் நமோ நாராயணாய'' என்று அமைதியாகப் பதிலளித்தான்.

இதைக் கேட்டதும் வெகுண்டெழுந்த இரண்யகசிபு, பிரகலாதனையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்த குருவையும் கடிந்துக் கொண்டான். பிரகலாதனை மீண்டும் குருகுலம் அனுப்பி, அவனுக்கு நல்ல முறையில் பாடம் கற்பித்து (அவர்களுக்கு நல்லனவானவற்றை உபதேசிக்குமாறும்) ,முக்கியமாக பிரகலாதன் நாராயணபுராணம் பாடுவதை நிறுத்தச் செய்யுமாறும் கூறினான்.

அவர்களும் மன்னனுக்குப் பயந்து, எவ்வளவோ பிரயத்தப்பட்டுப் பார்த்தனர். ஆனால், ஒரு பயனும் இல்லை. அவனை, அடித்து வதைத்தாலும், அன்பாய் உரைத்தாலும், பாவமாய் கெஞ்சினாலும் அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம் வரலாம், வரவேண்டும். அது எப்படி ஒரு அசுரக் குலத்தில் பிறந்தவனுக்கு சதா சர்வகாலமும் இறைவனைப் பழிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் குலத்தில் இப்படி ஒரு விதிவிலக்கு என்று???

அதாவது, கயாது கருவுற்றிருந்த சமயம் தானே இரண்யகசிபு தவம் புரியத் தனித்துச் சென்றான். அப்போது, அவன் இல்லாத சமயத்தில், கயாதுவைக் கடத்திச் சென்றுவிட்டான், இந்திரன். அவன் கயாதுவின் கருவைக் கொல்ல முயன்ற பொழுது, நாரதர் அவனைத் தடுத்து, கயாதுவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார். அவர் பாதுகாப்பில் இருந்த கயாதுவுக்கு, நாரதர் அடிக்கடி, நாராயணனைப் பற்றியும், எல்லா நல்ல விஷயங்களையும் கதையாகக் கூறினார். அவற்றை எல்லாம் கயாது மட்டுமல்ல, அவள் வயிற்றில் இருந்த கருவும் கேட்டது. கேட்டு, அவற்றை எல்லாம் தனக்குள் பத்திரமாக உள்வாங்கிக் கொள்ளவும் செய்தது. அன்று நாரதர் விதைத்த வித்துதான், இன்று செடியாக வளர்ந்து பிரகலாதனை இவ்வாறெல்லாம் பேசவைக்கிறது.

எப்படி, பெற்றோர் இந்தியராயினும், தாய் கர்ப்பக் காலம் முழுதும்அமெரிக்காவில் இருந்தால், அக்குழந்தைக்குப் பெற்றோரின் சாயல் வந்தாலும், அக்குழந்தையின் நடத்தையில் அமெரிக்க மண்வாசனைக் கலந்திருக்கும், இதை நான் என் மகனிடமே கண்டிருக்கிறேன். ஒரு பெண் கருவுற்றிருக்கும் பொழுது, அவள் நல்ல விசயங்களைக் கேட்பதோடு, படிப்பதோடு அல்லாமல், நல்லனவற்றையே சிந்திக்கவும் வேண்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், கயாதுவும், பிரகலாதனும்!!

சரி சங்கதிக்கு வருவோம், குருகுலத்தில், அவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போகவே, பிரகலாதனை மீண்டும் கொண்டு வந்து அவன் தந்தையிடமே ஒப்புவித்து மன்னிப்புக் கேட்டனர்.

இரண்யகசிபுவும், தன் மகனை சிறையில் அடைத்து கோரப் பசிக்கும், கொடிய தாகத்திற்கும் இரையாக்கினான். அப்பொழுதும், பிரகலாதன், ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தையே திருவமுதாக உண்டான். மெலிந்த தேகத்தோடும், களைப்புற்ற முகத்தோடும் பிரகலாதனை எதிர்பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

அப்பொழுதும் விடாது, அவனை மதம் பிடித்த யானையின் முன் நிறுத்தினர், யானை பிரகலாதனை மிதிக்காமல், வதைக்காமல், மதித்து, வணங்கி நின்றது.

அடுத்து, கொடிய விஷப்பாம்பு, கொழுந்து விட்டெரியும் வெந்தணலினுள் புகுத்துதல் என்று எத்தனை எத்தனையோ சோதனைகள்!! எல்லாம் பயன்றறுப் போகவே, கடைசியாக, பால் அன்னம் ஊட்டிய அன்னையின் கையாலே நச்சுத் தரச் செய்தான் அந்த இரணியகசிபு!!

எத்தனை சோதனைகள் சுட்டாலும், வேதனைகள் வதைத்தாலும் பிரகலாதனின் உள்ளம் நாராயண என்னும் நாமத்தை மறக்க நினைக்கவும் இல்லை, அவன் திருவாய் எட்டெழுத்து மந்திரத்தை ஓதாமல் இருந்ததும் இல்லை. அதுவே, அவனுக்கு உயிராகவும், அவனைக் காக்கும் காப்பாகவும் இருந்தது.

வாழ்வில் எத்தனை அடிகள் விழுந்தாலும், நாராயணனின் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டால் அடிகள் அனைத்தும், இறைவனை அடைய நமக்குக் கிடைத்தப் படிகளாக மாறிவிடும், இது பிரகலாதன் வாழ்வில் மெய்யாயிற்று.

தந்தையே, நாராயணா! என்னும் திருநாமம் சொல்பவர்களுக்கு எந்த குறைவும் என்றும் வாராது!அவனை நினைப்பதும் பேசுவதுமே நமக்கு உய்வினை உண்டாக்கும்! எங்கும், எதிலும், என்றும் இருப்பவன் என் நாராயணனே! என்று பிரகலாதன் சொன்னதும், கோபத்தின் உச்சிக்கேச் சென்றுவிட்டான்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி, அவனை ஆட்கொண்டது! ஏற்கனவே, சினம் இரண்யகசிபுவின் நெருங்கிய பங்காளி!! இன்று, அவனுக்குள்ளேயும் புகுந்துவிட்டான்!! உரத்தக் குரலில் எங்கும் இருக்கும் உன் நாராயணன் அவனை எந்நாளும் எதிரியாக நினைக்கும் என் மாளிகையில் இருக்கிறானா? இங்குள்ள பொருள்கள் எதிலாவது இருக்கிறானா? எங்கு இருக்கிறான், உன் நாராயணன்? என்று முழங்கினான்.

அவன் எங்கும் இருக்கிறான் தந்தையே! இந்த மாளிகையிலும் உள்ளான், இங்குள்ள அனைத்திலும் உள்ளான்; பேசும் என்னிலும் உள்ளான், கேட்கும் உங்களிலும் உள்ளான்; இங்கு உள்ள அனைவரிடத்தும் இருக்கிறான்; அவன் பெரிய தூணிலும் இருப்பவன், சின்னஞ்சிறு தூசியிலும் இருப்பவன்!!

உன் கூற்று மெய்யானால், உன் நாராயணன் எங்கும் இருப்பவனானால், இப்பொழுதே, இதோ இந்த தூணை உடைக்கிறேன், அவன் இருக்கிறானா, இல்லையா? என்று பார்த்துவிடுகிறேன், என்று கூறி தன் கதையால் தூணை வேகமாகத் தாக்கினான், இரணியகசிபு.

அவ்வளவுதான், அந்த தூண் இரண்டாக உடைந்து, அதனுள்ளிருந்து, மகாவிஷ்ணு வந்தார். சாந்த சொருபியாக அல்ல, சாதாரண மனிதராகவும் அல்ல. உலகத்திலே இல்லாத ஒரு உருவத்துடன், வயதான சிங்க உருவத்தில், கிழ சிங்கத்தின் கர்ஜனையுடன், உக்கிரமான முகத்துடன் நரசிம்ம உருவத்தில் வந்தார் மகாவிஷ்ணு!!! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய!! ஓம் நமோ நாராயணாய!!!

--வந்து இப்போ என்னப் பண்ணப் போறார்?? தன்னை அவமானப் படுத்தியதற்குத் தண்டிக்கப் போறாரா?? இல்லை, தன் பக்தனுக்கு சோதனை மேல் சோதனைத் தந்த பாவத்திற்கு அவனைக் கொல்லப்போறாரா?? அவனைத்தான் கொல்ல முடியாதே, விலங்குகளால் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது ன்னு ஏற்கனவே, ஏகப்பட்ட ''கூடாது'' களை அவன் பிரம்மாவிடம் வரமாகப் பெற்றுவிட்டானே??!! அப்படின்னா, பிரம்மா கொடுத்த வரம் பொய்யாகப் போகுதா??


கொஞ்சம் பொறுங்கள், அவர் வயசான சிங்கத்தின் உருவத்தில் தான் வந்தார். அதே நரைத்த பிடரி மயிர், கோரைப் பற்கள், கூரிய நகங்கள், உக்கிரமான கண்கள்... ஆனால், தேகம்? தேகம் எப்படி இருந்தது?? மனித தேகம்...

ஆம் மனித தேகம் கொண்ட சிங்கத்தை எங்கயாவது, யாராவது பார்த்திருக்கோமா? குறைஞ்சபட்சம் அந்தமாதிரி ஒரு குட்டி? சிங்கக் குட்டியாவது கண்டதுண்டா? இல்லையே.. கண்டதே இல்லையே, ஏன்னா அப்படி ஒரு உயிரினம் எங்குமே இருந்ததில்லை...

எத்தனை ''கூடாது'' நிபந்தனைகள் விதித்தாலும், அத்தனைக்கும் மீறிச் செயல்படக்கூடியவன், நம் இறைவன்!! வல்லவனுக்கும் ஒரு வல்லவன் உண்டு!!
ஆனால் , இந்த சீனிவாசனுக்கு வல்லவன், அவன் மட்டுமே!! ஓம் நமோ நாராயணாய!!

--ம்ம்.. சரி அவதாரம் எடுத்தாயிற்று, இனி வதத்தை முடித்து, சாபத்தைத் தீர்த்தருள் புரியவேண்டியதுதானே!

எதற்கும் ஒரு காலம் இருக்கிறதன்றோ! வேளையறிந்துதான் வேலை செய்ய வேண்டும்! இரண்யகசிபு பெற்ற வரத்தின் படி, இரவும் அல்லாத, பகலும் அல்லாத பொழுது வர வேண்டுமே!

--அப்ப அதுவரைக்கும், ஒரு கோப்பைத் தேநீர் குடித்துவிட்டு, நாளிதழ் படிக்கலாமா??

தேநீர் கொடுத்து, குழைந்து குழைந்து குசலம் விசாரிக்க, நாராயணன் என்ன இரண்யகசிபுவின் மாமனா?? மச்சானா?? இரண்யகசிபு, இப்படி ஒரு புதிரான வரம் வாங்கியதே, நாராயணனை துவம்சம் செய்யத்தான்?? பழிக்குப் பழி ஐயா, பழிக்குப் பழி!! அதனால் நாராயணனைக் கண்ட மாத்திரம் துவங்கியது, போர்.

--ஆமாம், போர்!!

அந்தி மாலை மயங்கும் சந்தியா காலம் வரும் வரை, இருவருக்கும் யுத்தம்!! சந்தியா காலமும் வந்தது, கண் இமைக்கும் ஒரு நொடிப் பொழுதில், நரசிங்கம் வாயிற்படிமேல், இரண்யகசிபு, நரசிங்கத்தின் மடிமேல்.... அவ்வளவுதான்....

இரண்யகசிபு எவ்வளவு திமிரினாலும் முடியவில்லை, நரசிம்மத்தின் முகம் அதிஉக்கிரமானது, நரம்புகள் புடைத்தன, விண்ணை முட்டும் கர்ஜணை!!! ஓம் நமோ நாராயணாய!

அங்கிருந்த அனைவரும், பிரம்மா, சிவன், தேவர்கள், முனிவர்கள் தேவலோகத்தினர் உட்பட அனைவரும் நடுநடுங்கி, நாராயண வென்னும் திருநாமம் சொல்லி கண் கொட்டாது, அசைவற்று, மூச்சுவிடவும் மறந்து நடந்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்!!

நரசிம்மர், தன் நகங்களாலேயே இரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்து, குடலை உருவி மாலையாக அணிந்துக் கொண்டு, அவன் இரத்தத்தையும் குடித்தார். அவதாரம் நோக்கம் நிறைவேறியது!! இருந்தாலும் நரசிம்மரின் உக்கிரம் மட்டும் குறையவே இல்லை! அதைக் கண்டு அனைவருக்கும் திகில் இன்னும் விடவில்லை, என்ன செய்வதென்று அறியாமல் பிரம்மனும், சிவனும் திகைக்க, பிரகலாதன் மட்டும் முதலில் இறைவனை நெருங்கிச் சென்றான்!
தந்தை மிகுந்த கோபத்துடன் இருக்கும் போது, மனைவி தரும் குவளைத் தண்ணீரை விட, குழந்தையின் செவ்விதழ் ஓரம் தவழும் புன்சிரிப்பு கோபத்தைத் தணித்துவிடுவது போல்....

குழந்தையின் கோபம் தணிந்தது!

--என்னது?!! இவ்ளோ நடந்தப்புறம் குழந்தையா??!!

ஆமாம், குழந்தைதான்! அவதாரம் பிறந்த ஒரு நாள் கூட ஆகாத சிறு மொட்டு, நரசிங்கம்!! மலரை விட மொட்டு சிறிது கடினமானது :-))

அதன் பிறகு திருமகள் ஐயனிடம் செல்ல, நரசிங்கர் நரசிம்மர்-மகாலெஷ்மி சகிதமாக அனைவருக்கும் காட்சியளித்து திருவருள் புரிந்தனர்!!
பின் பிரகலாதனிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்?

''இறைவா, உன்னை என்றும் மறவாத உள்ளம் வேண்டும். உன்னை அவமதித்த என் தந்தைக்கு எந்த விதமான பாவங்களும் வந்து சேராமல் காத்தருள வேண்டும்!உலக வாழ்வின் மீது ஆசை, பற்று, மோகம் இல்லாத நிலை வேண்டும். என்றும் உன் அடியனாகவே வாழ திருவருள் வேண்டும்!'' என்று வேண்டினான், பிரகலாதன்.

இறைவன், குழந்தையே பிரகலாதா! என்னை மனமார நினைத்து வணங்குபவர்களின் தலைமுறைகளுக்கு எந்தவிதமான துன்பங்களும் வந்து சேர்வதில்லை. என் திருவடிகள் மேல் பற்றுக் கொண்டவர்களை எந்தப் பற்றும் பற்றுவதில்லை! நீயே இந்த பூவுலகில் மன்னனாக என்றும் இருந்து இறுதியில் என் திருவடி வந்து சேர்வாயாக!! என்று ஆசி கூறிச் சென்றார்.

அதன் பிறகு பிரகலாதன் தந்தையின் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு, முறைப்படி, பெரியவர்களால், மன்னவனாக முடிசூட்டப்பட்டான்!!

இந்த நரசிம்ம அவதாரம் எடுத்தது சுவாதி நட்சத்திரத்தில், ஆந்திர மாநிலத்திலுள்ள, அகோபிலம் என்னும் இடமாகும்! அதுமட்டுமல்லாமல், கருடாழ்வாரின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்த திவ்யதேசத்தில் 9 விதமான நரசிம்ம தோற்றங்களுடன் பெருமாள் திருவருள் புரிகிறார்! ...

திருவோணத் திருவிழாவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை - திருவோணத் திருநாளில், பொழுது சாய்ந்தவுடன் காண அரிதான மனித உடல் கொண்ட சிங்கத்தினைப் போல் அவதரித்து, அசுரரான இரண்யனை அழித்தவனை (அந்தியம் - பொழுது சாய்ந்துவிட்ட நேரம், போது - பொழுது, அரியுரு - சிங்க உரு, அரி - பகைவன்)
பந்தனைத் தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே! - இரண்யகசிபு என்னும் அசுரனை அழித்த நரசிங்கத்தின் அசதித்தீரப் பல்லாண்டு பல்லாண்டென்று பாடுவோமாக! (பந்தனை - அசதி,களைப்பு)

பதவுரை:

நான், என்தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரது தாத்தா என்று ஏழு தலைமுறைகளாகத் தொடர்ந்து எந்தவிதக் குறையுமில்லாது இறைவனுக்குத் திருத்தொண்டுகள் புரிந்து வருகிறோம்! திருவோணத் திருநாளன்று, மாலைப் பொழுதில் மிகவும் அரிதான உருவமான ஆளரி (நரசிம்ம அவதாரம்) உருவமெடுத்து, பகைவனான இரண்யகசிபுவை அழித்தவனுக்கு, அந்த களைப்புத் தீரவேண்டுமென்று அவனுக்குப் பல்லாண்டுப் பாடுவோமாக!!

பி.கு - திருவோணத் திருநாளானது, மகாபலி என்னும் மன்னன் நினைவாக, வாமன அவதாரத்தில் இருந்துக் கொண்டாடப்படுவது! அதை ஏன் நரசிம்ம அவதாரத்தோடு இணைத்துக் கூறுகிறார் என்று புரியவில்லை!! தயவுசெய்து தெரிந்தவர்கள் வந்து கூறுங்களேன்! நரசிம்மரானவர், வயதான தோற்றத்துடன் இருந்தாலும், அவர் சிறிது காலம் மட்டுமே இருந்த குழந்தை! சங்கு சக்கரத்துடன், கருடாழ்வாருடன் வந்த திருமகள்நாராயணனுக்கே காப்பிட்டவர்! அதனால, இந்தக் குழந்தைக்கு ஏதும் தீங்கு வந்திடக் கூடாது என்று மறைத்துப் பாடினாரோ??!! -தாய்மைப் பலமாகப் பேசுவது போல் உணர்வு!