Thursday, November 19, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 2

கோளரியின் னுருவங் கொண்டுஅவுண னுடலம்
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*
மீளஅவன் மகனை மெய்ம்மைக் கொளக்கருதி
மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர*

காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக்
கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*

ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பொருள்:

இப்பாடலில் பெரியாழ்வார், மகாவிஷ்ணுவின் இரண்டு திருவிளையாடல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று, இரணியவதம். மற்றொன்று, குன்றமேந்தி, கல்மழைத் தடுத்தமையும் பற்றிக் கூறியுள்ளார்.



கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் - நரசிம்ம அவதாரத்தில், வலிமை மிகுந்த ஆண் சிங்கத்தினைப் போல் திருவவதாரம் எடுத்து, அசுரனான இரணியனின் உடலில் உள்ள இரத்தம் பொங்கி பொங்கி வெளியில் வருமளவுக்கு, உன் கூரிய நகங்களாலேயே அவன் வயிற்றைக் கிழித்தெடுத்தாய், (கோள் - வலிமை; அரி - ஆண்சிங்கம்; அவுணன் - அசுரன் ~ இரணியன்; உடலம் - உடல்; குருதி - இரத்தம்; குழம்பி - நிலைகுலைதல்; உகிர் - நகம்)

மீள அவன் மகனை மெய்ம்மைக் கொளக் கருதி - இரணியனின் மகனான, பிரகலாதன் கூறிய வார்த்தைகளை மெய்ப்பித்து, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காப்பதற்காக நீ இந்த திருவவதாரம் புரிந்தாய். (மீள - தப்பித்தல், தப்பிக்க)

மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வர - வானுலகத்திலுள்ள தேவர்களின் தலைவனான, இந்திரன் மிகுந்த கோபங்கொண்டு



இந்த சிறுகதையை முன்னமே, ''மத்தமாமலை தாங்கிய மைந்தன்'' 1-1-8 ம் பாடலில் பார்த்திருக்கிறோம். இந்திரனை சிறப்பிப்பதற்காக, ஆயர்கள் ஆண்டுதோறும் இந்திரவிழா எடுப்பது வழக்கம். சிறுவன் கண்ணனோ, ஆநிரைகளுக்கும், ஆயர்களுக்கும் தேவையானவற்றை கோவர்த்தன மலைத்தான் தந்து அவர்களை வாழ்விக்கிறது. எனவே, இந்திரனுக்கு விழா எடுப்பதை விட்டு, கோவர்த்தன மலையைக் கொண்டாடுமாறு கூறினான். மக்களும் கோபலன் கூறியதைப் போல் செய்யவே, இந்திரனுக்கோ, கடுஞ்சினம் வந்தது. வந்து... (மேலை - வானுலகம்; அமரர் - தேவர்; பதி - தலைவன்; வெகுண்டு - சினந்து)

காளநன்மேகம் அவை கல்லொடு கால் பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே - பூமிக்கு மழையைத் தந்து வாழ்விப்பது, கருமேகந்தான். அதனால்தான் காள நன்மேகம் ன்னு அடைமொழியோட சொல்லியிருக்கார் ஆழ்வார். சில்லென்று மழைச்சாரல் சிந்தினால் நல்லாருக்கும்.... கல்லாய் பொழிந்தால்?? இப்ப என்ன செய்வது, எங்கே சென்று ஒண்டுவது? கடவுளே! என்று கோபாலக் கண்ணனிடம் அண்டுவதே சரியென்று ஆநிரைகளொடு, ஆயர்களும், அவன்பால் தஞ்சம் புகுந்தனர். கண்ணனோ, சுடர்வெண் ஆழி சுழன்று கொண்டிருந்த விரலில், கோவர்த்தன மலையைத் தாங்கிநின்று, அனைவரையும் காப்பாற்றினான். (காளமேகம் - கார்மேகம், காளம் - கருமை; கால் - காற்றுமழை; வரை - மலை; காலிகள் - பசுக்கள்)

ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை; ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே - அன்று நரசிங்கனாய் வந்து, பிரகலாதனைக் காத்தவனே! கோவர்த்தனக் குடை கொண்டு, ஆயர்களைக் காத்த எங்கள் குலத் தலைவனே! எனக்கு ஒருமுறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; ஆயர்கள் குலத்துதித்த, போர் செய்ய வல்லமை கொண்ட காளையைப் போன்றவனே செங்கீரை ஆடுவாயாக!

பதவுரை:

உன் பக்தனும், இரணியனின் மைந்தனுமான பிரகலாதனின் வார்த்தைகளை மெய்ப்பிக்கவும், அவனை இரணியனிடமிருந்து மீட்கவும், வலிமையான ஆண் சிங்கத்தின் உருவமெடுத்துவந்து, தன் கூரிய நகங்களாலேயே, இரத்தம் பொங்கி எழுமளவுக்கு அசுரனான இரணியனின் உடலைக் கிழித்தாய்! விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களின் தலைவனான இந்திரன் மிகுந்த சினங்கொண்டு பொழிந்த கல்மழையிலிருந்து, ஆநிரைகளையும், ஆயர்களையும் காப்பதற்காக கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தவனே! என் தலைவனே! உன் அன்னைக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக. ஆயர்கள் குலத்திலுதித்த வலிமைமிக்க காளையைப் போன்றவனே செங்கீரை ஆடுக, ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 1
குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா!
ஊழிதோ றூழிபல ஆலிலை யதன்மேல்*
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே!

பங்கயநீள் நயனத்து அஞ்சன மேனியனே*

செய்யவள் நின்னகலம் சேம மெனக்கருதிச்

செலவுபொலி மகரக் காது திகழ்ந்திலக*
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.



பொருள்:


செங்கீரைப்பருவம் -
குழந்தையின் ஒரு காலை மடக்கி, மறுகாலை நீட்டி, இரு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடச் சொல்லும் பருவம்.


உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா! ஊழிதோறூழி பல - இவ்வுலகம் தோன்றிய காலத்திற்கு முன்னமிருந்தே, எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது, ஊழிப் பேரழிவின் போது அவற்றையெல்லாம் தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாக்கின்ற பரம்பொருளே!

ஆலிலை அதன் மேல் பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே -
சின்னஞ்சிறிய ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளே.

பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே -
வெண்தாமரை இதழ்களைப் போல் நீண்ட கண்களையுடைய கருமேக தேகங்கொண்டவனே


செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதிச் செலவு பொலி மகரக் காது திகழ்ந்திலக - பொலி மகரக்காது திகழ்ந்திலக, செய்யவள் நின் அகலம் சேமமெனக் கருதிச் செலவு -
நின் சின்னஞ்சிறு காதுகளில், விளக்கமாய் அமைந்து, மிகுவாய் பொலிகின்ற அந்த அழகிய குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம், உன் இதயத் தாமரையில், என்றும் நீக்கமற நிறைந்துள்ள திருமகளை எண்ணிக் கொண்டே அசைந்தாடுவாயாக

ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே -
எங்கள் குலத் தலைவனே, எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக. ஆயர் குலத்தில் தோன்றிய, போர் செய்ய வல்ல காளையைப் போன்றவனே ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக!

பதவுரை:


பரம்பொருளே! எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு, ஊழிப் பேரழிவின் போது அவற்றையெல்லாம் தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாத்து, ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளே! வெண்தாமரை மலரின் இதழ்களைப் போல் நீண்ட கண்களையுடைய கருமேக தேகங்கொண்டவனே! நின் சின்னஞ்சிறு காதுகளில், விளக்கமாய் அமைந்து, மிகுவாய் பொலிகின்ற அந்த அழகிய குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம், உன் இதயத் தாமரையில், என்றும் நீக்கமற நிறைந்துள்ள திருமகளை எண்ணிக் கொண்டே, எங்கள் குலத் தலைவனே, எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக. ஆயர் குலத்தில் தோன்றிய, போர் செய்ய வல்ல காளையைப் போன்றவனே ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக!

Monday, November 16, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 10

குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

மைத்தடங்கண்ணி யசோதைதன் மகனுக்கு* இவை
ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம்* ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை*
எத்தனையும் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே.


பொருள்:

மைத்தடங்கண்ணி யசோதைதன் மகனுக்கு - அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின்

இவை ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் - வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாயசக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன, இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம்

ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை - மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விட்டுசித்தன் விரிவாய் உரைத்த, இந்த தீந்தமிழ்ப் பாடல்கள்

எத்தனையும் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே - முழுவதையும் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.

பதவுரை:

அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின் வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாயசக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன, இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம் மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விட்டுசித்தன் விரிவாய் உரைத்த, இந்த தீந்தமிழ்ப் பாடல்கள் முழுவதையும் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 9

தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய*
பேழைவயிற்றெம்பிரான் கண்டாய் உன்னைக்கூவுகின்றான்*
ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண்*
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.


பொருள்:


தன் பிள்ளையை யாரேனும் அவமதித்தால், அப்பிள்ளையை விட அதன் அன்னைக்கு மிகுந்த கோபம் வந்து விடும். யசோதை அன்னையும் இப்பொழுது அந்த நிலையில் தான் இருக்கின்றாள். கைவலிக்க, தொண்டை ஆவி போக யசோதை இளஞ்சிங்கம் அழைத்தும் அம்புலி வாராமையால், அவள் நிலவின் மேல் மிகுந்த கோபங்கொண்டு, ' முழு நிலவே! நீ இப்ப வராவிட்டால், என் மகனே உன்னைக் கொன்றுவிடுவான்' என்று மிரட்டுகிறாள்.




தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய -
மோர்ப் பானையில் வைத்திருந்த வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கைகளால் எடுத்து, ஒரே வாயாக விழுங்கி உண்ட

பேழைவயிற்றெம்பிரான் கண்டாய் உன்னைக்கூவுகின்றான் -
பெரிய வயிறுடைய, என் தெய்வம், அம்புலியே உன்னைக் கூவி அழைக்கிறான் பார்.

ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண் -
தானே எழுந்து, உன்னைத் தாவிப் பிடிக்கவேண்டும் என்று இல்லை. இங்கிருந்தபடியே, தன் சக்கராயுதத்தை ஏவி விட்டாலே போதும். நீ இல்லாமல் போய்விடுவாய். எங்கள் குலதெய்வம் பலமுறை, உரக்கக் கூவி அழைத்தும் நீ வரவில்லை. ஆதலால், சந்தேகமே இல்லை. அவன் தன் சக்கராயுதத்தினால் உன்னைக்
கொல்லப்போகிறான் பார்.

வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா -
இறுதியாக அழைக்கிறேன், உனக்கு வாழ விருப்பம் இருந்தால், மாமதியே மகிழ்ந்தோடி வந்து என் மகனுடன் விளையாடுவாயாக.

பதவுரை:


மோர்ப் பானையில் வைத்திருந்த, வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கையால் எடுத்து, ஒரே வாயில் விழுங்கி உண்ணுமளவினுக்குப் பெரிய வயிறுடையவன்; எங்கள் குல தெய்வம் உன்னைக் கூவி அழைக்கின்றான். அவன் பல முறை அழைத்தும் நீ வராததால், தன் சக்கராயுதத்தை அனுப்பி, நிச்சயமாக உன்னைக் கொல்லப் போகிறான்.இதில் சந்தேகமே இல்லை. உயிர் வாழ விருப்பம் கொண்டாயானால், மாமதியே! மகிழ்ந்தோடிவந்து என்மகனுடன் விளையாடுவாயாக.

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 8

சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்*
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்*
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.




பதவுரை:

சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் - என் சிங்கக்குட்டியை சிறு குழந்தை தானே, இப்பொடியனால் என்ன செய்து விட முடியும் என்று சிறுமையாய் எண்ணிவிடாதே

சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள் - சிறுமையின் வார்த்தைக்கு முழுமையான விளக்கத்தை மாவலி (மகாபலி)ச் சக்கரவர்த்தியிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்.

சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண் - சிறுமதி கொண்ட முழுமதியே! இவனை சிறுவனாக எண்ணி, அவமதித்து, அழிந்துவிடாதே! இப்பிள்ளை மட்டும், விசுவரூபம் கொண்டு எழுந்துவிட்டால், நீ எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவாய். ஆகையால், என் பாலகனுடன் வந்து விளையாடி, நற்பலன் பெற்றுக் கொள்வாயாக.

நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் - முழுநிலவே! என் நெடுமால் வேகமாய், பலமுறை உன்னைக் கூவி அழைக்கின்றான். விரைந்து வருவாயாக!

பதவுரை:


முழுநிலவே! என் மகன், நெடுமால், உற்சாகத்துடன் வேகமாக, பலமுறைக் கூவி அழைக்கின்றான். சிறுமதி கொண்ட முழுமதியே! தோற்றத்தில், சிறிய பாலகனாக இருக்கிறானென்று என் சிங்கக் குட்டியை சிறுமையாய் எண்ணிவிடாதே. இச்சிறுமையின் வலிமையை மாவலிச் சக்கரவர்த்தியிடம் சென்று கேட்டுப்பார், தெரியும். இச்சிறு பிள்ளை மட்டும் விசுவரூபம் கொண்டு எழுந்துவிட்டால், நீ இருக்கும் இடம் தெரியாது போய்விடுவாய். சமரசமாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து, என் பாலகனுடன் விளையாடி நற்பலன் பெற்றுக் கொள்வாயாக! விரைந்து நெடுமாலிடம் வருவாயாக, வெண்ணிலவே!

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 7

பாலகனென்று பரிபவம் செய்யேல்* பண்டொருநாள்
ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன்*

மேலேழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்*
மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.

பொருள்:


பாலகனென்று பரிபவம் செய்யேல் -
தாய்ப்பாலைக் கூட சீரணிக்க இயலாத சிறு பாலகனென்று இப்பிள்ளையை நீ இழிவாய் எண்ணிவிடாதே. (பரிபவம் - இழிவு, எளிமை)

பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன் -
இவன் யாரென்று தெரியுமா?? முன்னொரு காலத்தில், மகாப் பிரளயம் வந்தபோது, அண்டசராசங்களனைத்தையும் தன் வயிற்றினுள் வைத்துக் காத்துக் கொண்டு, ஊழிப் பெருவெள்ளத்தில், தன் பாதவிரலை சூப்பிய வண்ணம் ஆலிலைமேல் பால முகுந்தனாக மிதந்துவந்த அந்த சிறுபிள்ளையை நீ அறிவையோ?? அந்த பாலகன் தான் இவன், தெரிந்துகொள் வெண்ணிலவே! (பண்டு - பழைமை; முற்காலம்; சிறுக்கன் - சிறுபிள்ளை, சிறுக்கி என்ற பெண்பாலுக்கெதிரான ஆண்பால்)

மேலேழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் -
இந்த சிறுக்கனுக்குக் கோபம் வந்துவிட்டால், ஒரே பாய்ச்சலில் உன்னை எட்டிப் பறித்து, எங்கும் நகரவிடாமல் கெட்டியாகப் பிடித்துத் தன்னிடமே வைத்துக் கொள்வான். (வெகுளுமேல் - கோபம் கொண்டால்)

மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா -
உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடிக்கக்கூடிய வல்லமையுடைய திருமாலை, அவமதிக்காமல், மகிழ்ச்சியுடன் அவனோட விளையாட ஓடிவருவாயாக.

பதவுரை:


பௌர்ணமி நாளில் பூத்திருக்கின்ற பூரண நிலவே! என்மகனை சிறிய மழலைதானே என்று எளிமையாய் எண்ணிவிடாதே. முன்னொரு காலத்தில், ஊழிப் பிரளயத்தின் போது, அண்டங்களனைத்தையும் தன் வயிற்றினுள் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, பங்கயப் பாதவிரலை பவள இதழால் சுவைத்துக்கொண்டே பிரளய நீரில் ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன்தான் இவன். இவனுக்குக் கோபம் வந்துவிட்டால், உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பறித்து, எங்கும் அசையவிடாமல் பிடித்துக் கொள்வான். அதற்காக நீ அச்சம் கொள்ளவும் தேவையில்லை; என்மகன் உன்னுடன் அன்பாக விளையாடுவான் அதனால் விரைந்தோடிவா வெண்மதியே!

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை


பாடல் 6

தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்*
கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்*
உண்டமுலைப்பாலறா கண்டாய் உறங்காவிடில்*
விண்தனில் மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.

பொருள்:


வெகு நேரமாகக் குட்டிக் கண்ணன் அழைத்துப் பார்த்தும், குழந்தையுடன் விளையாட அம்புலி வரவே இல்லை. நேரமும் நகர்ந்து கொண்டே இருக்கின்ற படியால், நிலவிடம், 'கண்ணன் தூங்க வேண்டும். அவன் தூங்குவதற்கு முன்னம் வந்துவிடு' என்று சந்திரனை விரைவுபடுத்துகிறாள்.

தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் - இந்த சிறு பிள்ளை, தன்னிடம் விளையாடுவதற்கு ஏதும் இல்லாதபடியால் உன்னை அழைக்கவில்லை; தன் வலிமையான பெரிய பிஞ்சு கைகளில் கௌமோதகி என்ற கதாயுதத்துடன்(கதையுடன்), உன்னினும் பொலிவான சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் வைத்திருக்கின்றான்.

கண்துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் - குட்டிக் கண்ணனுக்குத் தூக்கம் வருகின்றபடியால், அதற்கு அடையாளமாய் கொட்டாவி விடுகின்றான். இத்துனை நேரம் உன்னை அழைத்தும் நீ வரவில்லை வெள்ளி நிலவே! அவனும் உன்னை அழைத்து அழைத்துப் பார்த்துவிட்டு, அயர்ந்து போய்விட்டான். தூக்க மயக்கமும் அவனைத் தழுவிக் கொண்டது; நீயும் இன்னும் வாராமையால் மிகவும் வாட்டத்துடன் அவன் கொட்டாவி விடுவதைப் பார். (கொட்டாவி - தூக்க மயக்கம், பசி மயக்கம் போன்றவற்றால் வாய் வழியாக வெளியிடும் நெட்டுயிர்ப்பு)

உண்ட முலைப்பாலறா கண்டாய் உறங்காவிடில் - உறங்காவிடில் உண்ட முலைப்பால் அறா கண்டாய் -
சரியான நேரத்திற்கு அவன் உறங்காவிட்டால், அவன் உண்ட தாய்ப்பாலும் சரியாக செரிமானமாகாது, பாத்துக்கோ! (அறா - செரிமானம் ஆகாது; அறு - செரிமானமாதல், செரித்தல்)

விண்தனில் மன்னிய மாமதீ! விரைந்தோடிவா -
விண்ணிலே என்றும் நிலைபெற்றிருக்கின்ற முழுமதியே! என்மகன், கண்ணன் கண்ணுறக்கம் கொள்ளவேண்டும் விரைந்தோடிவா. (விண் - வானம்; மன்னிய - நிலைபெற்ற)

பதவுரை:


விண்ணிலே நிலைபெற்ற முழுமதியே! எத்துனை முறைதான் என் மகன் உன்னையேக் கூவி அழைத்துக் கொண்டிருப்பான். தன் வலிமையான பிஞ்சு கைகளில் கௌமோதகி என்கிற கதையுடன், சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் வைத்திருப்பவன், தூக்கமயக்கம் தழுவுவதால் உறங்குவதற்கு நிமித்தமாய் வாய்வழியே நெடுமூச்சு விடுகின்றான். இதோ பார் வெண்மதியே!அவன் சரியான நேரத்திற்கு, உறங்கினால் தான் அவன் நிறைவாய் உண்ட தாய்ப்பாலும் செரிமானமாகும். என் மகன், கண்ணுறக்கம் கொள்ளவேண்டும்; தாமதிக்காமல் விரைந்தோடிவா, வெண்ணிலவே!

Tuesday, November 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து நான்காம் திருமொழி - தன்முகத்து (அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்) கலிநிலைத்துறை
பாடல்5 அழகியவாயில் அமுதவூறல் தெளிவுறா* மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்* குழகன் சிரீதரன் கூவக்கூவ நீபோதியேல்* புழையிலவாகாதே நின்செவிபுகர் மாமதீ!
பொருள்:
அழகியவாயில் அமுதவூறல் தெளிவுறா - குட்டிக் கண்ணனின் அழகிய பவளவாயில் ஊறுகின்ற உமிழ்நீர் அமுதத்துடன் கலந்து தெளிவில்லாமல் வருகின்ற மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் - குழந்தைத்தனம் மாறாத மழலைச் சொற்களால் நிலவே! உன்னைக் கூவிக் கூவி அழைக்கின்றான் குழகன் சிரீதரன் கூவக்கூவ நீபோதியேல் - அழகன், குழந்தையாய் வந்திருக்கின்ற திருமகளைத் தன் உள்ளத்திலேயே என்றும் இருத்தியிருக்கின்ற திருமாலவன் கூவிக் கூவி அழைத்தும் நீ அகன்று செல்கின்றாயே (குழகன் - குழந்தை, அழகன், இளையவன்; குழகு - அழகு, குழந்தை, இளமை ஆகிய மூன்றனையும் குறிக்கும் ஒரு சொல்லாகும்) புழையிலவாகாதே - உனது செவிகள் அடைக்கப்பெற்றுள்ளனவா?? இப்பாலகன் உன்னைக் கூவி அழைப்பது, நின் செவிகளில் விழவில்லையா? அவை கேட்கும் தன்மையை இழந்துவிட்டனவா?? முழு உருவத்துடன், மிகுந்த பொலிவுடன் பூரண சந்திரனாய் விளங்கினாலும், நீ கேளா செவிகளைக் கொண்டிருப்பதால், நீ முழுமையானவன் அல்லன், பௌர்ணமி நிலவே! (புழை - சிறுவழி, துளை) நின் செவி புகர் மாமதீ - உனது செவிகள் கேட்கும் தன்மை கொண்டவையாயிருந்தாலும், நீ இம்மழலையினது குரலைக் கேட்காமல் இருப்பதற்காக, உனது செவிகள் கேட்கும் தன்மையை இழந்து போகட்டும் முழுநிலவே! (புகர் - குறை, குற்றம்) பதவுரை: குழந்தை கண்ணனின் அழகிய பவளவாயில் ஊறுகின்ற எச்சில் அமுதத்துடன் கலந்து, தெளிவுறாத, குழந்தைத்தனம் மாறாமல் வருகின்ற மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கின்றான். அழகன், குழந்தையாயிருக்கின்ற திருமகள் கேள்வன் கொஞ்சிக் கொஞ்சி உன்னை பல முறை அழைத்தும் நீ விலகி விலகிப் போகின்றாயே வட்டநிலவே. முழுநிலவே! உனது செவிகள் அடைக்கப்பெற்றுவிட்டனவோ?? இந்த பௌர்ணமி நாளில் நீ பூரணமாய் ஒளிவீசி, முழுமைப் பெற்றுத் தோன்றினாலும், கேளா செவிகளைக் கொண்டிருப்பதால் நீ குறையுடையவனே. அப்படியே, நினது செவிகள் கேட்கும் தன்மைக் கொண்டவையாயிருந்தாலும், இப்பாலகனின் மழலைக் குரலுக்கு செவிமடுக்காமையால், இனி, அவை செயலிழந்து போகட்டும், சந்திரனே!

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல் 4

சக்கரக்கையன் தடங்கண்ணால் மலரவிழித்து*
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண்*
தக்கதறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே*
மக்கட்பெறாத மலடனல்லையேல்வா கண்டாய்.

பொருள்:

குட்டிக்கண்ணன், தள்ளி நின்று தன் தாயிடம் மேகங்களினின்று கண்ணாமூச்சி ஆடுகின்ற நிலவினைக் காட்டிக் காட்டி அழைத்துப் பார்த்தான். அப்பவும் நிலவு தன்னிடத்து வராததால், இப்போது தாயின் இடுப்பிலே ஏறி நின்று பிடிவாதமாய் நிலவினைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.



சக்கரக்கையன் தடங்கண்ணால் மலரவிழித்து -
உன்னினும் பொலிவுடைய, வடிவான சுதர்சன சக்கரத்தைக் கொண்டிருப்பவன் என் மகன்; தன் பெரிய அழகிய கண்கள் விரிய உன்னையே பார்த்து

ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண் -
வேங்கட மாமலை மேல் வீற்றிருப்பவன், இப்போது என் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, என் தாவாயைத் திருப்பித் திருப்பி, உன்னையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகின்றதைப் பார் சந்திரனே! (ஒக்கலை - இடுப்பு)

தக்கதறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே -
இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லையா சந்திரா! பிடிவாதம் செய்யாமல் இறங்கி வந்து இந்த கார்மேகத்துடன் விளையாடுவாயாக (சலம் - பிடிவாதம்)

மக்கட்பெறாத மலடனல்லையேல் வா கண்டாய் -
ஒரு மழலையின் விருப்பம் உனக்குப் புரியவில்லையா? மக்கட் செல்வம் வாய்க்கப் பெறாத மலடனல்லவே நீ. ஆகவே, உடனடியாக நீ இங்கே, இவ்விடத்தில் வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக.

பதவுரை:


யசோதை அன்னை, 'தன் இறைவனான கண்ணன், சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பவன்; அவன், என் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, தன்னுடைய பெரிய அழகிய கண்களை விரிய விரித்து, உன்னையே சுட்டிக்காட்டுகிறான் பார். மக்களைப் பெற்ற உனக்கு இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லையா? பிடிவாதம் செய்யாமல், உடனடியாக வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக வெண்ணிலவே!,' என்று நிலவினை கண்ணனுடன் விளையாட விளிக்கின்றாள்.

Monday, November 9, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல் 3

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதிபரந்தெங்கும்*
எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே அம்புலீ! கடிதோடிவா.
பொருள்:

எனக்குத் தெய்வமாய் இருக்கின்ற தேனமுது அழைக்கின்றான் அம்புலியே, மஞ்சுக் கூட்டங்களில் மறைந்து கொள்ளாது மகிழ்ந்தோடிவா ன்னு யசோதை அன்னை அன்புடன் அழைத்தும், சந்திரன் வராததால், அவனை சற்று கடுமையாக, என் பிள்ளை அழைத்தும் வரமறுக்கிறாயா? உனக்கு அவ்வளவு மனத்துணிவா? தலைக்கணமா?? என்று சினந்துகொண்டு, நிலவானது அவனுக்கு இணையானதில்லை என்பதை உரைத்து,
தன் மகனின் உயர்வைக் கூறி அம்புலியைக் கண்ணனுடன் ஆட அழைக்கிறாள் அன்னை.



சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் -
ஏ வெண்ணிலவே! உன் முகத்தில் இருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்கள் இவ்வுலகம் முழுதும் பரந்திருந்தாலும்,

எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேரொவ்வாய் - தேய்வதும், வளர்வதும்; ஒரு நாள் முழுமையாய் இருப்பதும், பிரிதொரு நாளில் இல்லாமல் போவதும் போல் பல மாயங்கள் நீ புரிந்தாலும்... மாயக்கண்ணன், என் மழலைச் செல்வன், அடர் வண்ணனவன் முகத்திற்கு முன் நீ எல்லாம் எம்மாத்திரம்.

உன்னிடத்திருந்து சிதறுகின்ற இலட்சனக்கணக்கான குளிர்ந்த வெண்கதிர்களும் என் முகில் வண்ணன் முகத்தின் பொலிவிற்கும், தண்மைக்கும் சிறிதும் ஒப்பாகாது. அண்டம் விழுங்கியவன் தொண்டைக்குள்ளேயே அடங்கிய பொடியன் நீ!

வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற - ஞானத்தின் உருவானவன், வித்தகர்க்கெல்லாம் வித்தகன்; தென்கோடியில் இருக்கும் தமிழகத்திற்கு வடவெல்லையாக அமைகின்ற திரு வேங்கட மலை - கருவுற்ற கார்மேகங்கள் தழுவி நிற்கின்ற ஓங்கிஉயர்ந்த செம்மலை; எம் பாவங்களை எல்லாம் வெம்மித்து விடுகின்ற திருமலையில் வாழ்கின்றவன் உன்னை அன்புடன் அழைக்கின்றான்

(வித்தகன் - அறிஞன்; வேங்கடம் - திருவேங்கட மலை, திருப்பதி மலை; வாணன் - வாழ்பவன், வாழ் + நன்; விளி - அழை)

கைத்தலம் நோவாமே அம்புலி! கடிதோடிவா - சிறுபிள்ளை, எத்துனை நேரமாய் உன்னைக் காட்டி காட்டி, தன் பிஞ்சு கைகளை ஆட்டி ஆட்டி அழைப்பான்; அவனுக்குக் கைவலி வந்து விடும்முன் அம்புலியே, அழகு சந்திரனே விரைந்தோடி வருவாயாக

(கைத்தலம் - கை, கரம்; நோவாமே - துன்புறாமல், நோதல் - துன்புறுதல்; அம்புலி - சந்திரன்; கடிது - விரைந்து)

பதவுரை:

'ஏ வெண்ணிலவே! உன் வட்டமான அழகிய முகத்திலிருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்களின் ஒளியானது, இவ்வுலகம் முழுதும் விரவி ஒளியூட்டினாலும்; நீ வளர்வதும் தேய்வதும் போல் மாயங்கள் பல புரிந்தாலும் அவை எல்லாம் என் மகனின் அழகிய திருமுகத்திற்கு முன் எக்காலத்திலும் ஒப்பாகாது. வித்தகர்க்கெல்லாம் வித்தகன், தூய ஞானத்தின் வடிவானவன்; மலைகளிலே புனிதமான வேங்கடமலையில் வாழ்கின்ற வேங்கடவன் உன்னை எத்துனை காலமாய் அழைக்கின்றான். அச்சிறு பாலகனின் பச்சிளங்கைகளில் வலி தோன்றும் முன்னே விரைந்தோடிவந்து அவனுடன் விளையாடுவாயாக', என்று யசோதை அன்னை நிலவிடம் கூறுகிறாள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 2
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான்*
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்*
அஞ்சனவண்ணனோட ஆடலாட உறுதியேல்*
மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.


பொருள்:

என்சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான் - எவ்வளோ அழகா, யசோதை அம்மா பாடுறாங்க பாருங்க. குட்டன் னாவே சிறு குழந்தை, அதிலும் சிறு குட்டனாம். ரொம்பவே செல்லமா பாடுறாங்க...

என்னோட இந்த சிறு குழந்தை, எனக்கு எப்படிப்பட்டவன் என்றால், அவன் எனக்குக் கிடைக்கப்பெற்ற ஓர் இனிமையான அமிழ்தத்தினைப் போன்றவன்; என் தெய்வமே அவன்தான்.
(குட்டன் - சிறு குழந்தை)

தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான் - எனக்குத் தெய்வமாய், அமிழ்தமாய் இருக்கும் இந்த சிறு பாலகன், தன்னுடைய அழகான சிறிய கைகளால் நிலவினைக் காட்டிக் காட்டித் தன்னுடன் விளையாட அழைக்கின்றான்.

குழந்தைங்க எதையாவது, பிடிவாதமா வேணும்னு கேட்கின்ற அந்த அழகே தனிதான். தன் கால்களை உதைத்துக் கொண்டு, கைகளை உதறிக் கொண்டு, அப்படியே அவர்கள் முகம் செல்லும் போக்கு இருக்கின்றதே எப்பப்பா... ஆனால் கண் மட்டும் அந்த பொருளை விட்டு அசையாது... அப்படியே நம்மளை பார்த்தாலும், அப்ப அவங்க பார்க்கின்ற பார்வைக்கு நம்மால மயங்காம இருக்கவே முடியாது... இவ்வளவையும் ஒரு வரியில சொல்லிருக்காரு பாருங்க ஆழ்வார். அஞ்சனவண்ணனோட ஆடலாட உறுதியேல் - கருமைவண்ணம் கொண்ட என் மைந்தனோட விளையாடி மகிழ்வதற்கு உனக்கும் விருப்பம் உண்டென்றால்

(அஞ்சனம் - கருமை; கண்ணுக்கிடும் மை; இருள்)

மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா -
வெக்கங்கொண்டு மேகத்தினிடையே சென்று ஒளிந்து கொள்ளாதே, இளநிலவே! சொக்க வைக்கும் கொஞ்சலுடன் உன்னை அழைக்கும் என் மகனுடன், மகிழ்ச்சியுடன் ஓடி வந்து விளையாடு.
(மஞ்சு - வெண்மேகம்; மாமதீ - முழு நிலவு)

பதவுரை:

யசோதை அன்னை நிலவினைப்பார்த்துக் கூறுவது போல் அமைந்த பாடல் இது:

என்னுடைய இந்த சிறிய பாலகன், எனக்குக் கிடைக்கப்பெற்ற ஓர் இனிய தெவிட்டாத தெள்ளமிழ்தம் போன்றவன்; என்னுடைய தெய்வம் அவன்; அப்படிப்பட்ட என்னுடைய புதல்வன், தன்னுடைய சிறிய கைகளால் உன்னையேக் காட்டிக் காட்டி மிகுந்த ஆவலுடன் உன்னை விளையாட அழைக்கின்றான். பௌர்ணமி நிலவே! கருமை வண்ணங்கொண்ட என் சுந்தரனோட விளையாடுவதற்கு உனக்கும் விருப்பமுண்டாகில், மேகங்களில் சென்று ஒளிந்து கொள்ளாதே; விரைந்து ஓடிவந்து என்மகனுடன் விளையாடுவாயாக.

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் -
குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல் 1


குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்.

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்*
பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்*
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ!*
நின்முகம் கண்ணுளவாகில் நீஇங்கே நோக்கிப்போ.

அன்னை மடியிலேயே அளவளாவிக் கொண்டு, அவள் மருங்கினையும், உதரத்தினையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்த குறும்பன், இப்பொழுது சிறிது வளர்ந்துவிட்டான்.

மாளிகையில் அங்கும் இங்கும் தானே தவழ்ந்து போகிறான். எங்கெல்லாம் வெண்ணெய் இருக்கின்றதென்பதையும்; அப்படியே வெண்ணெய்த் திருடி அகப்பட்டுக் கொண்டாலும் எங்கெல்லாம் சென்று மறைந்துக்கொள்ளலாம் என்பதையும் அறிந்து கொள்கிறான்... :-))

சித்திரை மாத நிலவு வருது, வழி விடு வழிவிடு மேகமே வழி விடு என்பது போல், மாளிகையின் உள்ளே இண்டு இடுக்குகளில் சென்றுவிடுவதால், கண்ணனை, மாளிகையின் பெரிய முற்றத்தின் பரந்த வெளியில் விளையாட விடுகிறாள். அங்கே கண்ணன் தனியாக விளையாடுவதால், குழந்தையுடன் விளையாட வருமாறு வைகாசி நிலவினையும் துணைக்கு அழைக்கின்றாள், தாய்.

பொருள்:

தன்முகத்துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய் -
என்னப்பா இது, ஒரே நகைச்சுவையா இருக்கு... நெற்றிச்சுட்டிக் கூடத் தூங்குமா? அப்படியே தூங்கினாலும் அது எப்படி தவழ்ந்து போகும் ன்னு ரொம்ப ல்லாம் யோசிக்கவே வேணாம். :-))

குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றது.

(தூங்கல் - ஊசல் ஆடுதல், தொங்குதல் என்பது பொதுவான பொருள். தூக்கணங்குருவி - தொங்குகின்ற கூட்டினையுடைய குருவி, தூக்கணக்கயிறு - உறி -- நினைவில் இருக்கின்றதா)

பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் - அவனது காற் சதங்கைகளில் கோர்த்துள்ள பொன்னாலான கிண்கிணிகள் ஒலியெழுப்ப, தேகமெங்கும் புழுதியாகுமாறு மணலில் விளையாடுகின்றான்.

(கிண்கிணி - சதங்கைகளில் தொங்குகின்ற மணிகள்; புழுதி - மண்துகள்; அளைதல் - கலந்திருத்தல்)

என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ! -
என் மகன் கோவிந்தன், புழுதி மணலில், புரண்டு புரண்டு ஆடுகின்ற, விளையாடுகின்ற அழகினை அந்தி நேரத்தின் அழகிய முழு நிலவேஏஏ!

(இளமாமதி - இளமதி + மாமதி இளமதி - மாலைநேரத்தில் இருக்கின்ற நிலவு; அதாவது காலையில் உதயமாகின்ற இளங்கதிர் வீசுகின்ற சூரியனை இளஞ்சூரியன் என்பது போல் மாலையில் சிறிது சிறிதாகத் தன் ப்ளாட்டின ஒளிக்கதிர்களை வீசுகின்ற நிலா - இளநிலா, மதி - நிலா; மாமதி - வட்டமான முழுநிலவு, பௌர்ணமி நிலா)

நின்முகம் கண்ணுளவாகில் நீஇங்கே நோக்கிப்போ - உன் வட்ட முகத்தில் கண்ணிருக்கின்றதென்றால், நீ என் மகன் கோவிந்தன் விளையாடும் இடம் நோக்கிப் போவாயாக.

பதவுரை:

யசோதை அன்னை, குழந்தை கண்ணன் புழுதிமணலில் விளையாடுவதைப் பற்றி பாடுகிறார்:

குட்டிக் கண்ணனின் நெற்றியில் உள்ள சுட்டி வேகமாய் ஆட, விரைந்து மணற்முற்றத்திற்குத் தவழ்ந்து செல்கின்றான்; அங்கே அவன் கால் சதங்கையில் தொங்குகின்ற பொன்னாலான கிண்கிணிகள் மிகுவாய் ஒலி எழுப்ப, அங்கும் இங்கும் அலைந்து, அவன் தேகம் முழுவதும் புழுதியாகும் வண்ணம் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுகின்றான் என்மகன். தன் மகன் தனியே விளையாடுவதைப்பார்த்த யசோதை அன்னை, நிலவினை நோக்கி, ' மாலைப் பொழுதில் ஞாயிறு மயங்கியதும், வெள்ளொளி வீசுகின்ற வெள்ளிநிலவேஏ! இங்கே என்மகன் கோவிந்தன் புழுதி மணலில் ஆடுகின்ற கூத்தினைப் பார். வட்டமான உன் முகத்தில் எங்கேனும் கண் இருக்குமானால், நீ என் மகன் விளையாடுகின்ற இடம் நோக்கிப் போய் அவனுடன் விளையாடுவாயாக', என்று கூறுகிறாள்.

Monday, November 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 10 வஞ்சனை யால்வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே
பொருள்:
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட - உன்னைக் கொல்லும் தீய எண்ணத்துடன் வந்த பூதகி என்னும் பேயின் முலைப்பால் உண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய - கருமை நிறக் கண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல் - சிறப்பான சொற்களை மறை ஓதுவோர் நிறைந்த சிறீவில்லிபுத்தூர் வாழ் பட்டன் (பெரியாழ்வார்)பாடியதை எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே - ஒன்று விடாமல் படிப்பவர்க்கு இடர் என்றும் இல்லை. பதவுரை: கண்ணனைக் கொல்லும் வஞ்சத்துடன் வந்த பூதகியின் முலைப்பால் உண்ட மைநிறக் கண்ணனை இடையர் குல ஆய்ச்சி தாலாட்டிய சிறப்பினை மறை ஓதுவோர் நிறைந்த திருவில்லிப் புத்தூர் பட்டன் பாடிச் சிறப்பித்த பாடல்களை குறைவின்றி சொல்பவர்களுக்கு துன்பம் என்பது இல்லை. பொதுவாக இது போன்ற பத்துகள் அல்லது தொகுப்புப் பாடல்களின் இறுதியில் நூலாசிரியர் பற்றிய குறிப்பும் இந்தப் பாடல்களைப் பாடுவதால் கிடைக்ககூடிய பயன்கள் பற்றிய குறிப்பும் வருகிறது. பின்னாடி ஒரு ஒப்பீடு செஞ்சு பாக்கணும்.