Thursday, July 28, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 4

கன்னற்குடம் திறந்தாலொத்தூறிக் கணகண சிரித்துவந்து *
முன்வந்து நின்று முத்தம் தரும் என்முகில் வண்ணன் திருமார்வன்*
தன்னைப் பெற்றேற்குத்தன் வாயமுதம் தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்*
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடைநடவானோ.

பொருள்:

கன்னற்குடம் திறந்தால் ஒத்து ஊறி - கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து சிந்துகின்ற தித்திக்கும் சாறினைப் போன்று, எம்பெருமானின் பவளவாயிலிருந்து ஊறுகின்ற அமுதவூறலானது அவன் செவ்வாய்க் கடந்து வெளியே வழிகின்றது.
குழந்தைகளின் வாயில் சுரக்கின்ற உமிழ்நீரினை அவர்களால் வாயினுள்ளேயே வைத்திருக்கத் தெரிவதில்லை. அது வழிந்து அவர்களின் மேனியெங்கும் பரவும்.

அந்த அமுதஊறலைத்தான் பெரியாழ்வார், கருப்பஞ்சாற்றுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார். (கன்னல் - கரும்பு)

கணகண சிரித்து வந்து, முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில்வண்ணன் - மேனியோ கார்முகில் வண்ணம்! அவனின் சிவந்த திருவாயிலிருந்து வாயமுதம் வழிந்தோட, கணகண என்று வெண்கலம் போல் சிரித்துக் கொண்டே, கொஞ்சிக் கொஞ்சி, குழைந்து என் முன்னே வந்து நின்று முத்தம் தருகிறான், என் அருமை மைந்தன், கார்முகில் வண்ணன், கருணை மன்னன்.

பாத்தீங்களா, இதுதான் பெரியாழ்வாருக்கும், ஆயர்பாடி பெண்களுக்கும் உள்ள வித்தியாசம்!
பாலனென்று தாவி அணைச்சாக்க, மாலையிட்டவன் போல் வாயில் முத்தம் தந்துவிடுகிறானாம். அதைச் சொல்ல அந்தம்மாவுக்கு வெக்கம் வேறு வந்துவிடுகிறதாம்!

குழந்தைங்க முத்தமிட்டா சந்தோஷப்படனும்; வெக்கப்படப்படாது!... பெரியாழ்வார் எம்பெருமானைக், மழலை மாறாக் கண்ணனாகப் பார்க்கிறார்; மற்றவர்கள் மனங்கவர் கண்ணாளனாகப் பார்க்கின்றனர்.

திருமார்வன் - வடிவாய் அவன் வல மார்பினில் எப்போதும் வீற்றிருக்கும் திருமகள்! திருமகள் உறைகின்ற மார்வன், அதுதான் திருமார்வன்.

தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் - திருமார்வனைப் பெற்ற எனக்கு, அவனின் திருவாயமுதினைத் தந்து என்னை உயிர்ப்பிக்கிறான்.

திருமகள் உறைகின்ற திருமார்பை உடையவன், அவனையே நினைந்து உறைந்து போய்விட்ட என்னை, அவனே என்னிடத்து வந்து கரும்பினும் இனிய, பனியினும் தண்மையான வாயமுதம் என் முகத்தில் ஒட்ட முத்தம் தந்து உயிர்ப்பிக்கின்றான்.

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடைநடவானோ - தன் மேல் பகைமை கொண்டு, தன்னை எதிர்க்கும் பகைவர்களின் தலைகள் மீது தளர்நடை நடந்து வருவாயா!

இது வரைக்கும் நல்லாத்தானே போயிட்டு இருந்தது. ஏன் திடீர்ன்னு இப்படி... முள்ளுச்செடியில் இருக்கும் அழகிய மலரினைப் போன்றவன், எம்பெருமான். செடியில் முள்ளாயிருப்பவனும் அவனே! அதே செடியில் மலராய் மலர்பவனும் அவனே! பாலகன் பிரகலாதனை பற்பல தீங்குகளிலிருந்து காத்தவனும் அவனே! அப்பிள்ளையின் அப்பனை, அவன் முன்னேயே வயிற்றைக் கிழித்துக் கொன்று, தன்னுள் கடத்திக் கொண்டவனும் அவனே!

இதுதாங்க தாயுள்ளம்! குட்டிக்கண்ணனே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தளர்நடையிட்டு நடை பழகுகிறான். அந்த நடையையும், தன் பகைவர்களைக் கொன்று அவர்களின் தலைமேல் நடந்து பழகுகிறானாம். வீரம் விளையும் மண்ணு!
(எற்று - எதிர்த்தல், பகை; மாற்றலர் - பகைவர்)

பதவுரை:

கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து, அச்சாறு வழிந்தோடுவதைப் போன்று, கண்ணனின் திருவாயிலிருந்து தித்திக்கும் வாயமுதம் மென்மேலும் ஊறி, மேனியெங்கும் வழிந்தோட, கணகணன்னு (கலீர் கலீர் என்று) வெண்கலப் பாத்திரம் உருளுவதைப் போன்று சிரித்துக் கொண்டே வந்து என் முன் நின்று, திருமகள் உறைகின்ற திருமார்பினை உடையவன்தனைப் பெற்ற எனக்கு முத்தமிட்டு உயிர் கொடுத்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான், அந்த கார்முகில் வண்ணன்! அவன், தன்னை எதிர்க்கும் பகைவர்களை எல்லாம் எதிர்த்து நின்று, வென்று அவர்களின் தலைகளின் மீது தளர்நடை நடந்து வருவானோ!

Sunday, July 24, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 3

மின்னுக்கொடியும் ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்*
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்*
மின்னில் பொலிந்ததோர் கார்முகில்போலக் கழுத்தினில்காறையொடும்*
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடைநடவானோ.

பொருள்:

மின்னுக்கொடியும் ஓர் வெண்திங்களும் சூழ் பரிவேடமுமாய் - கொடி மின்னல், பொன்னிற மின்னுகின்ற மின்னல் கீற்றும், முழுமையான குளிர் வெண்ணிலவும், அந்நிலவினைச் சூழ்ந்திருக்கின்ற பரிவேடமும் ஆகிய இம்மூன்றும் இணைந்திருக்கின்ற வானத்தைக் கற்பனை செய்து பாருங்கள்...

பரிவேடம் ன்னா, பரி ன்னா குதிரை- அப்ப குதிரைக்கு ஏதோ மாறுவேடப்போட்டி வெச்சிருக்காங்கன்னோ, இல்ல, குதிரை வேடமிட்ட மனிதன்னோ நினைச்சுடாதீங்க... இது ஒரு வானியல், ஒளியியல் தொடர்புடைய வார்த்தை.

சூரியனைச் சுற்றியோ, சந்திரனைச் சுற்றியோ ஒரு ஒளிவட்டம் தெரியும். கவனிச்சுருக்கீங்களா?

அதாவது, இரவு நேரத்தில் சந்திரனைச் சுற்றி இருக்கிற மேகங்கள், நல்லா நீரைக் குடிச்சுட்டு, பனிப்படிகங்கள் மாதிரி உறைஞ்சி இருக்கிற போது, அந்த படிகங்கள் எல்லாம் ஒரு முப்பட்டகத்தைப் போல செயல்பட்டு, அதன் மேல் படுகின்ற சந்திரனின் ஒளியைச் சிதறலடிக்கின்றன. அவை சந்திரனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போல் தோன்றுமே அதுதான் பரிவேடம்.

so, இப்ப நீங்களே புரிஞ்சுக்குவீங்க... சில்லென்று குளுமையாக மழை பெய்து ஓய்ந்த இரவு வானம்! ஏற்கெனவே இரவில் வானம் கருப்பா இருக்கும்; இதில் கார்மேகமும் படர்ந்திருக்கு... 1.கருநிறவானம்.

2.பொன்வண்ண மின்னல் கீற்று.
3.பௌர்ணமி நாளின் பால் வெண்ணிலவு.
4.நிலவினைச் சுற்றிலும் பரிவேடம்.


பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும் - பின்னல், துலங்கும் அரசிலை, பீதகச் சிற்றாடை- இடையில் மின்னும் பொன்னாலான அரைஞாண்கயிறு, அதில் கோர்க்கப்பட்ட மிகுந்த பொலிவுடைய தூய வெள்ளியால் செய்த அரசமரத்தின் இலை வடிவிலான ஆபரணம், இடுப்பில் கட்டியுள்ள பட்டுப்பீதாம்பரம் ஆகிய இம்மூன்றனுடன் இணைந்த...

மின்னில் பொலிந்தது ஓர் கார்முகில் போலக் கழுத்தினில் காறையொடும் - மின்னல் ஒளியினால் பொலிவு பெறும் மழைமேகம் போலக், கழுத்தில் அணிந்துள்ள காறை என்னும் அணிகலனுடனும்

தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடை நடவானோ - தனக்கே உரித்தான தன் திருமேனிப் பொலிவுடன், இவ்வாடை, ஆபரணங்களின் பொலிவும் ஒன்றுகூட இருடீகேசா(ரிஷிகேசா) தளர்நடை நடந்துவா என் அப்பனே.

முந்தைய பாடலில் கண்ணனின் திருவாயினை வர்ணித்துப் பாடினார், பெரியாழ்வார். இந்தப் பாடலில் அவரின் ஆடை ஆபரணங்களை வர்ணித்துள்ளார்.

கார்மேகம் - கண்ணன் திருமேனி
மின்னல் - இடையிலுள்ள பொன் அரைஞாண்கயிறு, கழுத்திலுள்ள காறை
வெண்திங்கள் - அரசிலை
பரிவேடம் - பீதகவாடை

பதவுரை:

எங்கள் இறைவனே! இருடீகேசா! பொன்னொளி வீசும் மின்னல் கொடி, முழு வெண்ணிலவு, நிலவினைச் சூழ்ந்துள்ள பரிவேடம் ஆகியவற்றைப் போல பொன் அரைஞாண்கயிறு, வெள்ளியினாலான அரசிலை, இடையில் உடுத்திய பொன்னில் தோய்ந்த பட்டாடை ஆகியவற்றுடன், மின்னல் ஒளியினால் பொலிவுறும் கார்முகிலைப் போல கழுத்தினில் அணிந்துள்ள காறையோடும் சேர்ந்து, உனக்கே உரித்தான உன் திருமேனிப் பொலிவுடன் தளர்நடை நடந்து வாராயோ!