Wednesday, May 27, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 5

திருப்பல்லாண்டு பாடல் - 5

அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.


பொருள்:


அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை - இதை, அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். இப்படி பிரிச்சதுக்குப் பிறகு பொருள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. : ))
அவ்வளவு எளிமையான தமிழ்ச் சொற்கள்!

மூவுலகம், ஏழுலகம் ன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கணக்கு சொல்வாங்க!
பூமியிலேயே எத்தனைப் பிரிவுகள் வட்டம், மாவட்டத்து ல துவங்கி, கண்டம், பெருங்கடல் வரைக்கும் போகும். அதே மாதிரி, பூமி, நிலா, சூரியன் உள்ளிட்ட சூரியக்குடும்பம் முதலாக, அண்டம், அண்டங்களை உள்ளடக்கிய பேரண்டம் வரை உலகில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்திற்கும் -- அண்டக் குலங்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பவனை - அண்டக் குலத்துக் கதிபதியாகி (அண்டம் - உலகம், அதிபதி - தலைவன்)

அசுரரிராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் - (அசுரர் இராக்கதர்) அன்பு, கருணை எதுவுமில்லாமல், மிருகத்தைப் போல் தான் நினைத்தவற்றை எல்லாம் அழிக்கும் கொலைபாதகம் செய்யும் அசுரர்கள், இராட்சதர்கள் மட்டுமில்லாமல் அவர்கள் குலத்தையே வேரோடு களைந்த இருடீகேசன்! (இண்டைக் குலம் - கொலைத் தொழில் புரிபவர்களின் குலம்)

இருடீகேசன் ன்னா - ரிஷிகேசன் என்று பொருள். அதாவது வடமொழி எழுத்துகளைத் தவிர்த்து பெயரைத் தமிழ்ப் படுத்திக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ரிஷி+கேசன் - முனிவர்களின் தலைவன் (முனிவர்கள் ன்னா எப்படிப்பட்டவர்கள் ன்னு உங்களுக்கேத் தெரியும். முற்றும் துறந்தவர்கள்! ஐம்புலன்களின் ஆசைகளைத் துறந்தவர்கள், உயிரின் மேல் பற்றற்றவர்கள், உறவுகளில் பற்றற்றவர்கள்... இப்படிப்பட்ட முற்றும் பற்றற்ற முனிவர்களுக்கேத் தலைவனாக இருந்தால் அவர் எந்த அளவு புலன்களை அடக்கினவராக, ஆசைகளை எல்லாம் துறந்தவராக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமோ?? ''பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றினைப் பற்றுக பற்று விடற்கு'' என்பது வள்ளுவம். இந்த ''பற்றற்றான்'' தான் நம்ம ''இருடீகேசன்''.
(ரிஷி - முனிவர், கேசன் - தலைவன்)

... இருடிகேசன் தனக்கு, தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி - உலகங்களுக்கெல்லாம் தலைவனாகவும், கொலைதொழில் புரியும் அரக்கர்களை எல்லாம் வேரோடு அழித்த, முற்றும் பற்றற்ற முனிவர்களின் தலைவனாக இருப்பவனுக்கு, அடியவர் குலத்திலுள்ள அனைவரும் வந்து, அவனின் திருவடிகளைத் தொழுது, இறைவனின் ஆயிரம் திருநாமங்களை ஓதுவீர்களாக! அதுமட்டுமில்லாமல், (தொண்டக் குலம் - அடியவர்களின் குலம்)

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே - நீங்கள் உங்களின் பழைய மூடநம்பிக்கைகளை எல்லாம் ஒழித்து நம்மோடு என்றென்றும் இருக்கும் இறை அவனுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீ வாழ்வாயாக என்று பாடுவீர்களாக!

பதவுரை:

உலகங்களுக்கெல்லாம் ஒரே தலைவனாக இருப்பவனை, கொலை தொழில் புரியும் அசுரக் குலத்தையே அடியோடு அழித்த, புலன்களை அடக்க வல்ல பற்றற்ற முனிவர்களின் தலைவனுக்கு அடியவர் குலத்திலுள்ள அனைவரும் வந்து, உங்களின் பழைய மூட நம்பிக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு, முழு மனத்துடன் இறைவனின் திருவடிகளை வணங்கி, அவனின் ஆயிரம் திருநாமங்களை ஓதி, இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவீர்களாக!

திருப்பல்லாண்டு - பாடல் 4

திருப்பல்லாண்டு பாடல் - 4

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்து ஒல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோநாராய ணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே.

பொருள்:

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து கூடும் மனமுடையீர்கள் -நாம் என்னதான் முக்தி பெற்றாலும் நமது ஆன்மா மட்டுமே முக்தி நிலையை அடையும். நமது உடலானது இந்த மண்ணையே சென்றடையும். இங்கு ஏடு என்னும் சொல் உடலைக் குறிக்கின்றது. ஆனால், அந்த உயிர் தமக்கு வேண்டிய புண்ணிய காரியங்களைச் செய்ய உடலே கருவியாக அமைகின்றது. ஆகவே, உயிரானது உடலைவிட்டு பிரிவதற்கு முன்னே, எங்கள் குழுவில் வந்து இணையும் எண்ணம் உடையவர்கள், ( ஏடு - உடல், குழாம் - குழு, புகுந்து - இணைந்து)

வரம்பொழிவந்து ஒல்லைக் கூடுமினோ - மனிதர்கள் தங்களுக்குத் தாமே வரைமுறைகள் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். ''இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித நிலை; எப்படியும் வாழலாம் என்பது மிருகநிலை'' என்று வரைமுறையுடன் வாழ்தல் நல்லதே ஆயினும், அவை இறைவனை அடையத் தடையாய் இருத்தலாகாது. ஆகவே, அத்தகைய தடைகளைத் தவிர்த்துவிட்டு, விரைந்து எங்கள் குழுவில் வந்து இணைவீர்களாக!(வரம்பொழி வந்து - வரம்புகளை அழித்து வந்து, வரம்பு - தடை, ஒல்லை - விரைவில்)

நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே - இந்த நாடு, நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் நன்கு அறியும் வண்ணம் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தைப் பாடும் மனமுள்ள பக்தர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் வந்து பல்லாண்டு கூறுங்கள்! (பாடுமனமுடைப் பத்தர் - பாடும் மனம் உடைய பக்தர், பத்தர் - பக்தர், இறைவனடியான்)

பதவுரை:

தமது உடல் பூமிக்குள் செல்லும் முன்னே, எங்கள் குழுவில் வந்து இணைந்து இறைவனை வணங்கும் எண்ணம் கொண்டவர்கள், அவர்களின் தடைகளை எல்லாம் அழித்துவிட்டு விரைந்து வந்து சேர்ந்துகொள்ளுங்கள். இந்த நாடு நகரத்திலுள்ள மக்கள் அனைவரும் அறியுமாறு ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ஓதும் மனமுடைய பக்தர்கள் இருப்பார்களாயின் அவர்களும் வந்து நம்பெருமாளுக்குப் பல்லாண்டு கூறுங்கள்!

Sunday, May 24, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 3

திருப்பல்லாண்டு - பாடல் 3

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர் களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

பெரியாழ்வார், இறைவன் மேல் கண்ணேறு பட்டுவிடாமல் தடுப்பதற்காக, அங்கு குழுமியிருந்த மக்களின் கவனத்தைத் திருப்பவும், இறைவனுக்கு வாழ்த்து கூறவும், அங்கிருந்த மக்களையும் தம்மோடு பல்லாண்டு பாட அழைக்கி்றார். அவர் எத்தகைய மக்களை அழைக்கிறார் என்று பார்ப்போம்!

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் - இறைவனுக்குத் திருத்தொண்டுகள் புரிந்து, அதன் மூலம் இறைவனின் மனதில் நிலையான இடம்பிடித்து, அவன் திருவடியில் பெருவாழ்வு வாழ ஆசை கொண்டுள்ளவர்கள் இங்கு இருப்பார்களேயானால் அவர்கள் அனைவரும் எம்முடன் வந்து சேர்ந்து முழுமனதுடன் பல்லாண்டு பாடி, இறைவனுக்குத் தொண்டுகள் புரிய வாருங்கள். அதன் விளைவாக உங்களுக்குக் கிடைக்கும் மெய்வாழ்வினையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்களாக! (வாழாட்பட்டு - நிலைவாழ்வினுக்கு ஆசைப்பட்டு, மண்ணும் - சேர்ந்துக் கொள்ளும், மணமும் - பலன், கொண்மின் - பெற்றுக் கொள்ளுங்கள்)

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் - ''காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா'' என்பதற்கேற்ப பொய்யான இந்த தேகத்தை வளர்க்கவும், சாண் வயிற்றை நிரப்பவும் நிலையற்ற இந்த தேக நலனை மட்டுமே நினைத்து, அதற்காக கூழுக்கு ஏங்கி மற்ற சாதாரன மனிதரிடம் அடிமைத் தொழில் செய்பவர்கள் யாரும் இங்கு இருப்பார்களானால், அத்தகையவர்களை, எந்நாளும் இறைவனையே நினைத்து, வணங்கி, அவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே கடமையாக நினைப்பவர்கள் நிறைந்த எங்கள் குழுவி்ல் சேர்த்துக் கொள்ள மாட்டோம்! (கூழாட்பட்டு - உணவுக்கு ஆசைப் பட்டு, புகுதலொட்டோம் - சேரவிடமாட்டோம்)

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் - ஏழு தலைமுறைகளாக எந்த பாவ வினைகளும் செய்யாமலிருந்து, ஏதொரு பழிச்சொல்லிற்கும் ஆளாகதவர்கள் நாங்கள்! (ஏழாட்காலும் - ஏழு+ஆள்+கால்--ஏழு தலைமுறை காலங்களாக, பழிப்பு - பழிச்சொல்)

இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - இராவணன் உள்ளிட்ட அசுரர்கள் வாழ்ந்த இலங்காபுரியை வானரப் படையைத் திரட்டிக் கொண்டு சென்று போரிட்டு, அரக்கர்கள் அனைவரையும் அழித்த மாவீரன் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குப் பல்லாண்டு கூறுவோமாக! (இராக்கதர் - இராஷ்சதர்-- அசுரர்கள், பொருதான் - போர்புரிந்தவன்)

பதவுரை:

இப்பாடலில், இராவணன் தலைமையில் இருந்த அசுரர்களை எல்லாம், வானர சேனைக் கொண்டு எதிர்த்துப் போரிட்டு வென்ற இராமபிரானுக்குப் பல்லாண்டு பாடுகிறார், பெரியாழ்வார். அவருடன் இணைந்து பல்லாண்டு பாட, இறைவன்பால் மெய்யான அன்புள்ளவர்களை அழைக்கிறார். அவ்வாறு இறைதொண்டு செய்வதால் கிடைக்கும் மெய்வாழ்வினையும் அவர்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார். இவர்கள் ஏழு தலைமுறைகளாக யாதொரு பழிப்புக்கும் உள்ளாகதவர்கள்! வெறும் கூழு(உணவு)க்கு ஏங்கி ஏனையோரிடம் அடிமைத் தொழில் புரிவோரை, அவர் சேர்த்துக் கொள்ள மறுப்பதாகத் தெரிவிக்கிறார்.

Saturday, May 23, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 2

திருப்பல்லாண்டு - பாடல் 2

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர்புக்கு முழங்கும்அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!

குறிப்பு: இப்பாடலை நாம் இருமுறை சேவிக்க வேணும்.

பொருள்:

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு- உம் அடியார்களாகிய நாங்கள் உன்னோடு எந்நாளும் பிரிவின்றி ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டும் இறைவனே! (நின்னோடும் - உன்னோடும்)
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு- எந்நாளும் பிரிவின்றி உன் வலபக்க மார்பினுள் இதயத்தாமரையில் வீற்றிருக்கும் அழகிய இளநங்கையான திருமகளும் பல்லாண்டு வாழ்வதாக! (வடிவு - அழகு)
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு- நின் வலக்கரத்தில் தாங்கிய பேரழகு பொருந்திய பொன்னொளி வீசும், அதன் செஞ்சுடரே எதிரிகளை எல்லாம் எரித்து சாம்பலாக்கவல்ல சக்கரமும் பல்லாண்டு வாழ்வதாக!

எதிரிகளை அழிப்பதில் மட்டுமல்ல, அடியவர்களுக்குதவுவதிலும், ஆபத்திலிருந்து காப்பதிலும் தாமோதரன் தாமதித்தாலும் இந்த சுதர்சன ஆழ்வார் தாமதிக்கவே மாட்டார்.

திருமால், தானே திருக்கஞ்சனூர் என்னும் ஊரில் வாசுதேவருக்குப் புத்திரராக சுதர்சனராக அவதரித்தார். அவருக்கு சுதர்சனர் என்று பெயரிட்டனர், பெற்றோர். அவரே இந்த சக்கரத்தாழ்வார் ஆவார்.

ஒருநாளும் தவறாமல் கமலக்கண்ணனுக்கு கமலப்பூவினைச் சூட்டிவிடுவான் கஜேந்திரன் என்னும் யானை. ஒரு நாள் அவனை கூகு என்னும் (crocodile) முதலை கவ்விக் கொண்டது. அப்போது முகுந்தனுக்கு முன்னமேயே விரைந்து வந்து முதலையின் தலையை வாங்கியது, இந்த சக்கரத்தாழ்வாரே.

கிருஷ்ணாவதாரத்தில் அசுய யாகம் நடத்த கண்ணனுக்கு முதல் மரியாதை செய்யும் வேளையில் கண்ணன் உட்பட அங்கிருந்த பீஷ்மன், யுதிர்ஷ்டிரன் என்று அனைவரையும் மிகவும் மோசமாக ஏசிக்கொண்டிருந்தான் சிசுபாலன். அதைப் பொறுக்க இயலாத கண்ணனும் தன் சக்கரத்தை ஏவிவிட்டு சிசுபாலைனைக் கொன்று முக்தி அளித்து, தன் துவாரபாலகராக்கிவிட்டார்.(ஆழி -சக்கரம்(சக்கரத்தாழ்வான்) வலத்துறையும் - வலப்பக்கம் உறையும்)


படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!- அனைவரையும் எப்போதும் விழிப்பாய் வைத்திருக்கும், படைகள் போர்க்களத்தில் செல்லும்போது அங்கு முழங்கும் சங்கும் பல்லாண்டு வாழ்வதாக! (புக்கு - புகுந்து, அப்பாஞ்ச சன்னியம் - சங்கு)

பாஞ்ச சன்னியம் என்பது சங்கு வடிவிலிருந்த பாஞ்ச ஜனன் என்னும் அசுரனை, சீனிவாசன் அடக்கி அவருக்கு முக்தி தந்து சங்கு வடிவில் எந்நாளும் தன்னுடன் இருக்கும் படி வைத்துக் கொண்டார்.

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

என்று ஆண்டாள் மாதவனின் திருவாய், பச்சைக் கற்பூரம் போல் இனிதாய் மணக்குமா? இல்லை, கமலப்பூவினைப் போன்று கம கம வென்று மணக்குமா? பவளம் போன்று சிவந்த நிற வாய் இதழ்கள் எப்படி தித்தித்திருக்கும்? அந்த செவ்வாயின் சுவை எவ்விதம் இருக்கும்? என்று பூவராகனின் பூவிதழ்களின் நாற்றமும் மணமும் அறிந்துக் கொள்ள வெண்சங்கிடம் விழைந்து கேட்கிறாள் ஆண்டாள். இறைவனின் திருவாய் சுவை, மணம், திடம் எல்லாம் அறிந்த, அறியக்கூடிய பேறு பெற்றவர் இந்த பஞ்ச சான்னியம் என்னும் சங்கே!


பால்வெண்சங்கும், சுதர்சன சக்கரமும் எக்காலத்தும் இறைவனுடன் இணைபிரியாமல் இறைவனுக்குக் காவலாய் இருப்பவர்கள்! சங்கு எப்போதும் விழிப்பாய் இருக்கவும், சக்கரம் தீமைகளை அழிக்கவல்லதாயும் இருந்து இறைவன் கண்ணயர்ந்தாலும் இவைகள் ஒருகணமும் இமைக்காமல் விழிப்புடன் இறைவனைப் பாதுகாக்க வேண்டுமென பெரியாழ்வார் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்!

ஆபத்பாந்தவனுக்கே ஆபத்தா! காக்கும் கடவுளுக்கே காக்கும் கரங்களா! இங்குதான் நம் விஷ்ணு சித்தர் தாயாய் மாறி தனியாய் தெரிகிறார். ஆளுயர வளர்ந்த பிள்ளை, ஆணைக்கால் குவளையில் அன்னமிட்டாலும் பத்தாதென்று உண்பவனுக்கு, இன்னும் உணவு உண்ணத் தெரியவில்லை என்று இடித்துரைத்து, உணவூட்டம் தாயுள்ளம்! இந்த அக்கறை உணர்வு அன்னையைத் தவிர வேறு எவருக்கும் வராத உணர்வு!

பதவுரை:
பரிவுள்ளம் கொண்ட பரிமள நாதா, எம் பெருமானே! உன்னோடும் உம் அடியவர்களோடும் நாங்கள் எந்நாளும் பிரிவின்றி ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேணும்; எந்நாளும் உன் வலப்பக்கமார்பினில் இதயத்தாமரையில் பூத்திருக்கும் அழகிய திருமகளும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்; உன் வலக்கையில் வீற்றிருக்கும் பேரொளி வீசும் சக்கரத்தாழ்வானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்; படைகள் போர்க்களத்தில் நுழையும் போது அங்கே ஊதப்படும் வெண் சங்கும் பல்லாண்டு் பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்வதாக!