Monday, January 18, 2021

பெரியாழ்வார் திருமொழி 1- 9 - 9

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 9

 கற்பகக் காவு கருதிய காதலிக்கு *

இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில் *

நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள் *

உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.


பதவுரை:

(இந்திரன் காவினில்) கற்பகக் காவு கருதிய காதலிக்கு  - தேவலோகத்தில், இந்திரனின் அரண்மனை நந்தவனத்தில் இருந்த கற்பகச் சோலையின் அழகைக் கண்டு அதன்பால் ஆர்வம் கொண்டார், கண்ணனின் மனைவியான சத்தியபாமா. 

அவ்வண்ணமே, தன்னுடைய அந்தப்புர நந்தவனமும் அரிய வகை மரங்களுடன் அழகுற அமைய வேண்டுமென்று எண்ணிய சத்தியபாமாவின் விருப்பத்தை மனத்தினாலேயே அறிந்த கண்ணபெருமான், 

(கா - சோலை ~ Flower garden, grove)

இப்பொழுது ஈவதென்று (இந்திரன்) (காவினில்)  - அக்கணமே, தன் மனைவியின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்காக, 

(ஈவதென்று - நிறைவேற்றுவதென்று ~ மனைவியின் விருப்பப் பொருளை அளிப்பதென்று), 

நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்  - பூலோகத்தில் சத்தியபாமா வின் அரண்மனை நிலா முற்றத்துள் அக் கற்பகச் சோலையவே நிலைக்கச் செய்து, 

நிற்கச் செய்து என்று குறிப்பிட்டிருந்தால், கண்ணபிரான் ஒரு மரத்தைக் கொண்டு வந்தார் என்று அறியலாம். ஆனால்,

'நிற்பன' என்று பன்மையில் குறிப்பிட்டமையினால், கண்ணன் அந்த கற்பகச் சோலையில் இருந்து பல வகையான மரங்களையும் கொணர்ந்ததாக அறியலாம். 

உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் - எப்படி சத்தியபாமாவின் எண்ணத்தை வார்த்தைகளால் அல்லாது,  எண்ண ஓட்டத்திலேயே அறிந்து, அவ்வாவினை நிறைவேற்றினானோ, அவ்வண்ணமே வந்து நான் அழைக்காமலேயே, நான் எதிர்பார்க்காத வண்ணம் ஓடி வந்து என்னைப் புறம் புல்குவான்; தேவர்களுக்கெல்லாம் தலைவனான என் கண்ணபெருமான் என்னைப் புறம்புல்குவான்.

(உம்பர்கோன் - தேவர்களை வென்று கற்பகக் காவினைக் கொணர்ந்தமையால்)



குறிப்பு:

    அன்பர்கள் யாரேனும் கற்பக மரம் என்றால் என்ன என்று தெளிவாக எடுத்துரைத்தால், அடியேன் வணக்கத்துடன் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். 

கூகுளில் தேடினால், தமிழில் தேடும் பொழுது ஒரு விதமான பதிலும், ஆங்கிலத்தில் தேடும் பொழுது வேறு விதமான பதிலும் கிடைக்கின்றன. 

பின்வருவன wikipedia-வில் இருந்து...... 

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது கற்பக மரம்பாரிஜாதம்ஹரிசந்தனம்சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை பஞ்ச தருக்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.

https://en.wikipedia.org/wiki/Kalpavriksha

Kalpavriksha is also identified with many trees such as parijata (Erythrina variegata), Ficus benghalensisAcaciaMadhuca longifoliaProsopis cinerariaDiploknema butyracea, and mulberry tree (Morus nigra tree). 

Erythrina variegata - இதற்கு கல்யாண முருங்கை முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு போன்ற பெயர்கள் உண்டு. (மந்தாரம்)

Ficus benghalensis - ஆல் அல்லது ஆலமரம்.

Madhuca longifolia - இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம்

Prosopis cineraria - வன்னிமரம்

Diploknema butyracea - The Indian butter tree

mulberry tree -  முசுக்கட்டை

மேலும்,

பூலோகக் கற்பக விருட்சம் என்று பனை மரம் அழைக்கப்படுகிறது, 

தென்னை மரம் -  இப்படியாகப் பல மரங்கள் 'கற்பகம்' என்று தமிழில் தேடினால் கிடைக்கின்றன. 

பொருளுரை:

இந்திரனின் நந்தவனத்தின் அழகைக் கண்டு வியந்த சத்தியபாமாவின் விருப்பத்தை அறிந்து கண்ணபெருமான், உடனடியாக அக்கற்பக சோலையையேக் கொண்டு வந்து தன் காதல் மனைவியான சத்தியபாமாவின் அந்தப்புர நந்தவனத்தில் வைத்துத் தழைக்கச் செய்தவன் என்னைப் புறம்புல்குவான். தேவாதி தேவன் என்னைப் புறம்புல்குவான்!

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய!



Friday, January 15, 2021

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 8

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 8

 மூத்தவை காண முதுமணற் குன்றேறி *

கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி *

வாய்த்த மறையோர் வணங்க * இமையவர்

ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.


பதவுரை:

மூத்தவை காண முதுமணற் குன்றேறி * - மூத்தவை காண, முதுமணற் குன்று ஏறி - 

மூத்தவை காண - வயதான கால்நடைகள், தம்மை எளிதில் காணும் படியாக, 

முதுமணற் குன்று ஏறி ~ முது மணற்குன்று ஏறி - நீண்ட நாட்களாய்க் குவிந்து, உயரமான மணற் மேடு - பாறையான இடங்களிலும், புது மணலிலும் புல் அவ்வளவாக வளர்ந்து இருக்காது.  

கண்ணனுக்கு மாடுகளை மேய்த்து வருவதில் ஏராளமான ஆனந்தம். அவரோ சிறுவன். கண்ணனுடன், கன்றுகுட்டிகள் துள்ளிக் குதித்து விளையாட்டாக அவருடன் எல்லா இடங்களுக்கும் சென்றுவிடும். 

ஆனால், வயதான கால்நடைகளால் மேடான இடங்களுக்கு அவ்வளவு எளிதாகச் செல்ல இயலாது.

அத்தகைய, வயதான கால்நடைகளும் தம்மைக் காண வசதியாகவும், தாமும் அனைத்து கால்நடைகளையும் கண்காணிப்பதற்கு ஏதுவாக மேடான இடத்தில் ஏறி ... 

(மூத்தவை - வயதான கால்நடைகள்; 

முது மணற் குன்று - நீண்ட நாட்களாய்க் குவிந்திருந்த மணற் மேடு)



கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி * -  கூத்து உவந்து ஆடிக் குழலால் இசைபாடி - 

ஆனந்தமாக நடனமாடிக் கொண்டும், புல்லாங்குழலில் இனிமையான கீதங்களைப் பாடிக் கொண்டும் மிகுந்த மகிழ்ச்சியோடு கண்ணன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். 

இங்கு இரண்டு காரணங்கள் சுட்டப்படுகின்றன: 

1) கண்ணனின் மகிழ்ச்சி,

2) புல் மேய்ந்து கொண்டே, எங்காவது வேறு திசையில் சென்று விட்டக் கால்நடைகளுக்குத் தாம் இருக்குமிடத்தை இன்னிசையால் உண்ர்த்துகிறார் கண்ணன்.

வாய்த்த மறையோர் வணங்க * இமையவர் - வாய்த்த மறையோர் வணங்க, இமையவர் ஏத்த - 

 (வாய்த்தல் - சித்தித்தல் - To be obtained; 

மறையோர் - முனிவர்கள்; 

இமையவர் - தேவர்கள்; 

ஏத்த - புகழ, துதிக்க: ஏத்துதல் - புகழ்தல், துதித்தல்.)

ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான். - இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்; எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.


பொருளுரை:

ஆயர்பாடியில் கண்ணனுக்கு ஆநிரைகளை மேய்த்து வருவதில் அளவிலா ஆனந்தம். நெடுங்காலமாய்க் குவிந்து, குன்று போல் உயர்ந்திருந்த மணற் மேட்டிற்கு ஆநிரைகளை ஓட்டி வருகிறார் கண்ணபெருமான். ஏனெனில் அத்தகைய இடத்தில் தான் புற்கள் செழிப்பாகவும் செறிவாகவும் வளர்ந்திருக்கும். பார்ப்பதற்கே மிகவும் பசுமையாகவும் இருக்கும். 

ஆநிரைகளை பசுமையான மணற்மேட்டிற்கு மேய்ச்சலுக்காக ஓட்டி வந்துவிட்டு, மேட்டின் உச்சியில் தான் ஏறிக் கொள்கிறார். இதனால் குன்றின் மேல் ஏற இயலாத வயதான கால்நடைகளால் எளிதில் மணற் குன்றின் அடிவாரத்தில் நின்றபடியே நன்றாக கண்ணனைக் காண இயலும். 

குன்றின் மேல் நின்று ஆனந்தமாய் நடனம் ஆடியும், புல்லாங்குழல் இசைத்தும் கன்றுகுட்டிகளுடன் விளையாடிக் கொண்டும் குதூகலமாய் இருக்கிறார், குட்டிக் கண்ணன்.  

விண்ணுலகில் இருந்து, இந்தக் காட்சியைக் காண சித்திக்கப்பெற்ற முனிவர்கள் வணங்குகிறார்கள்; தேவர்களோ உயர்வாகப் புகழ்கிறார்கள். 

ஆனந்தக் கண்ணனின் ஆனந்த வெள்ளம் ஆநிரைகளைக் கடந்து, ஆயர்பாடியைக் கடந்து, மண்ணிறைந்து, விண்ணிறைந்து எங்கெங்கும் பரவுகிறது.

ஆநிரைகளுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் பேரின்பத்தையும் பேரருளினையும் ஒன்றாக அளிப்பவன் ஓடி வந்து என்னைப் புறம் புல்குவான்; என் தேவாதி தேவன் என்னைப் புறம் புல்குவான்.

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய!