Tuesday, June 11, 2019

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

எட்டாம் திருமொழி - பொன்னியல்

(அச்சோப்பருவம் - அணைத்துக்கொள்ள அழைத்தல்)

கலித்தாழிசை

பாடல் 4



நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன*
தேறிஅவளும் திருவுடம் பில்பூச*
ஊறிய கூனினை உள்ளே யொடுங்க* அன்று
ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ. 

பதவுரை:

நறுமணமிகுந்த சந்தனத்தை, தங்களுக்கு சிறிதளவுத் தருமாறு, கண்ணன் கேட்க, மனம் துணிந்த கூனியும், அவர்களின் திருவுடலில் பூசிவிட்டதனால், அவளின் நெடுங்காலமான கூனினை உடலினுள்ளே மறையும்படி, அவள் உடலை நிமிர்த்துமாறு உருவினவனே அணைத்துக் கொள்வாயாக! எம்பெருமானே, கண்ணனே ஓடி வந்து அணைத்துக் கொள்வாயாக!!

நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன - நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்ன -
கிருஷ்ணாவதாரத்தில், தேவகியின் எட்டாவது குழந்தையான கண்ணன், கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்து வருகிறான் என்ற உண்மையை அறிந்த கம்சன், கோகுலத்திலேயேக் கொல்வதற்காகப் பலவிதமான அசுரர்களை அனுப்பினான். அனைத்து அசுரர்களையும் குழந்தை கண்ணன் அழித்து, வெற்றிக் கொண்டு, ஆனந்தமாய் வளர்ந்து வந்தான். கோகுலத்தில் கண்ணனைக் கொல்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்தான் கம்சன். மேலும் கண்ணன் தன் கண்முன்னால் கொல்லப்பட வேண்டுமென்னும் ஆவல் கொண்டு, வஞ்சகமாக மதுரா நகருக்கு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பது போல் வரவழைத்தான்.

அவ்வழைப்பை ஏற்று மதுரா நகருக்கு வந்த பதின்மவயது சிறுவர்களான, அண்ணன் பலராமனும், கண்ணனும் மதுரா நகரின் இராஜவீதியில் உலா வந்தனர். அப்போது எதிரே,  சந்தனம் முதலான நறுமணத்திரவியங்களையும், பூச்சுகளையும் அரசனான கம்சனுக்காகக் கொண்டு வந்துக் கொண்டிருந்தாள், ஓர் பெண். அப்பெண்ணின் முதுகில் கூனும், கால்கள் வளைந்தும், ஒருவிதமான சமச்சீரற்ற தோற்றத்தில் இருந்தாள்.

அப்பெண்ணிடம், நறுமணமிகுந்த, மிகவும் நேர்த்தியான அச்சந்தனப் பூச்சைத் தமக்கும், தம் தமையனார் பலராமருக்கும் கொஞ்சம் தர இயலுமோ? என்று குறும்புத்தனமாகக் கேட்டான், கண்ணன்.
(நாறிய- நறுமணம் மிகுந்த, சாந்தம்- சந்தனக்குழம்பு; நமக்கு- கண்ணன் மற்றும் பலராமன்; இறை - கொஞ்சம், சிறிதளவு; நல்கு- கொடு, தா; என்ன- என்று கேட்க)
தேறி அவளும் திருவுடம்பில் பூச - கண்ணனின், அழகிலும், குறும்புத்தனத்தாலும் ஈர்க்கப்பட்ட அக்கூனிப் பெண்ணும், கம்சனின் சினத்திற்கு ஆளாக நேரிடுமே என்று அஞ்சாமல், மனம் துணிந்து அவர்களின் திருவுடம்பில் பூசினாள்! (தேறி- மனம் துணிந்து)

ஊறிய கூனினை உள்ளே யொடுங்க 
அன்று ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ- 
- ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று ஏற உருவினாய்! - கம்சனுக்காகக் கொண்டு சென்ற சந்தனாதிப் பூச்சுகளக் கூனி, கண்ணனுக்கும், பலராமனுக்கும் பூசிவிட்டபடியால், அதற்கு நன்றி கூறும் விதமாக, கண்ணன் அப்பெண்ணுக்கு பதிலுதவி செய்ய விரும்பினார். பிறவி முதல் அவளுடைய உடலில் ஊறி, ஊன்றி வளர்ந்திருந்த கூனையும், வளைந்த காலையும், முகத்தில் இருந்த கோணலையும் சரி செய்ய விரும்பினார். கூனிப்பெண்ணின் கால்கள் மேல் தன் காலை வைத்து அழுத்தி, அவள் முகத்தில் மோவாயைத் தன் கைகளால் பிடித்துத் திருப்பி, முதுகிலிருந்த கூன், அவள் உடலினுள்ளே ஒடுங்கும் படி நிமிர்த்தினார். இதனால், அக்கூனிப் பெண்ணும் தன் இளமையான உடலின் கூனும், கோணலும் மறைந்து அழகிய வடிவம் பெற்றாள்! அவளது அகத்தோற்றத்தின் அழகும், பண்பும், துணிவும், அவளது புறத்தோற்றத்திலும் தோன்றியது!! (ஊறிய-வளர்ந்த, பெருகிய; கூன்- வளைவு; ஒடுங்கு- குறுகு, முடிவு;ஏற -  முழுவதும்)

பொருளுரை:

நறுமணமிகுந்த, உயர்ரக சந்தனக் குழம்பைத் தனக்கும், தன் தமையனுக்கும் சிறிதளவு தருமாறு கண்ணன் கேட்க, கண்ணனின் அழகால் ஈர்க்கப்பட்ட கூனியும், கம்சனின் தண்டனைக்கு அஞ்சாமல், மனம் துணிந்து அவர்களிருவரின் திருவுடம்பில் பூசினாள். அவ்வன்பிற்கு நன்றியாக, கண்ணன், பிறவிலேயே அவள் உடலில் ஊறியிருந்த கூனையும், வளைந்த காலையும், கோணலான முகத்தையும் சரிசெய்ய எண்ணி, அவளது கூன் உள்ளே ஒடுங்கி மறையும் வண்ணம், அவள் கால் மேல் உன் காலை வைத்து அழுத்தி, முகத்தையும் திருப்பி, அவளது உடல் சமச்சீர் தன்மையை அடையும் வண்ணம் உருவினாயே! என் கண்ணே, ஓடி வந்து என்னை அணைத்துக் கொள்வாயாக! எம்பெருமானே என்னை அணைத்துக் கொள்வாயாக!!


Thursday, March 21, 2019

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அச்சோப்பருவம் - அணைத்துக்கொள்ள அழைத்தல்)
கலித்தாழிசை

பாடல் - 3

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து*
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு*
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சன வண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே அச்சோவச்சோ.

பதவுரை:

இந்த பாடலில் பெரியாழ்வார், பெருமாளின் கிருஷ்ணாவதாரத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார்.

ஒன்று, மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியாக இருந்தமை
இரண்டு, கண்ணன், சிறுவனாக இருந்தபோது யமுனை நதியையும், அங்குள்ள காற்றையும் கூட நஞ்சாக்கிக் கொண்டு இருந்த காளிங்கன் என்னும் ஐந்து தலை நாகத்தை அடக்கி அதன் ஐந்து தலைகளின் மேல் நடனமாடி அதற்கு அருள் புரிந்தமையும் ஆகிய இரண்டு நிகழ்வுகள்.



பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து- பஞ்ச(ஐந்து) பாண்டவர்களின் தூதுவனாய் சென்று, மகாபாரதப் போரில் இருபுறமும் அணிவகுத்து நடத்திச் சென்று, (பஞ்சவர் - பஞ்ச பாண்டவர்கள்; பாரதம் - மகாபாரதப் போர்; கை செய்து - உதவி செய்து)

மகாபாரதத்தில், பாண்டவர்கள் ஐவருக்கும் நாட்டில் இடமளிக்க விரும்பாத துரியோதனனிடம், பாண்டவர்களின் தூதுவனாய் சென்று தர்ம நியாயத்தை எடுத்துரைத்தும் கூட அவன் அதை ஏற்காமையால், இறுதியாக மகாபாரதப் போர் நடக்க வேண்டிய நிலை உருவானது.

அப்போது போரில் தங்களுக்கு உதவும்படி துரியோதனன் மற்றும் அர்சுணன் இருவரும் வேண்ட, அவர்களுக்கு உதவும் பொருட்டு கண்ணன் ஒரு புறமும், கண்ணனின் படைகள் ஒரு புறமும் இருப்பார்கள் என்று பதிலுரைத்தார்.
முதலில் அர்ச்சுணன், தனக்கு கண்ணன் மட்டுமே போதுமெனவும், துரியோதனன், தான் கண்ணனின் படையினை எடுத்துக்கொள்வதாகவும் பதிலுரைத்தனர். அவ்வண்ணமே இருவரின் மனத்திற்கேற்ப அருளினார் கண்ணபிரான்.

அர்ச்சுணனின் படையில் கண்ணபிரான் ஆயுதமேந்தாமல் எளிய தேரோட்டியாகவே இருந்தார்.

தூதுவனாய், தேரோட்டியாய், அடியாருக்கு அடியாராய், எளியாருக்கு எளியாராய் என்றென்றும், எங்கெங்கும் நீக்கமற நிறைந்தவர் எம்பிரான்.

நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கை புக்கு- யமுனை ஆற்றின் மடுவில், வாழ்ந்து வந்த காளியன் என்னும் ஐந்து தலை நாகம், தன் கொடிய நஞ்சை யமுனையாற்றின் நீரிலும் காற்றிலும் கலந்து அங்கு உயிர்கள் நீர் அருந்தவோ ஆற்றை அணுகவோ முடியாத படி செய்திருந்தது. எவரும் நெருங்க முடியாத அப்பொய்கையில் புகுந்து, (பொய்கை- நீர்நிலை, மடு; புக்கு - புகுந்து; கிடந்த - வாழ்ந்த)

அஞ்சு அப்பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த- கண்ணன் யமுனையினுள் சென்றதைக்கண்டு ஆயர்கள் அனைவரும் பேரச்சமும் பெருங்கவலையுமுற்றனர். ஆனால் கண்ணனோ மடுவில் புகுந்து காளியனை வம்பு செய்து, களைப்படையச் செய்து அச்சுறுத்தும் அதன் ஐந்து தலைகளின் மேல் நடனமாடி காளியனின் கர்வத்தையும், குரோதத்தையும் அழித்து, காளியனைக் கொல்லாமல் அவன் குரோதத்தை மட்டும் அழித்து அருள்செய்த அருட்பெருங்கடலே (அஞ்சு - அச்சம்; பணம் -பாம்பின் படம்)

அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே அச்சோஅச்சோ- கண் மை வண்ணத்தனே அச்சோ அச்சோ! ஆயர் குல நாயகனே அச்சோவச்சோ!! (அஞ்சனம் - கண்ணிலிடும் மை )

பொருளுரை:

பஞ்சப் பாண்டவர்களின் தூதுவனாய், மகாபாரதப் போரில் தேரோட்டியாய் தன்னையும் ஈந்து, தன் படையையும் ஈந்து பேருதவி செய்து,
தன் கொடிய நஞ்சை, ஆற்றிலும், காற்றிலும் கலந்து நச்சாக்கிய ஐந்து தலை நாகம் வாழ்ந்து வந்த பொய்கையினுள் புகுந்து, அச்சுறுத்தும் அதன் ஐந்து படங்களின் மீது நடனமாடி அந்த நாகத்தைக் கொல்லாது, அதன் கோபத்தையுத் குரோதத்தையும் மட்டும் அழித்துஅருள்புரிந்தவனே, அஞ்சன வண்ணனே, ஆயர்கள் நாயகனே அச்சோவச்சோ!