Wednesday, October 28, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 7

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 7

 பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி *

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் *

மெத்தத் திருவயி றார விழுங்கிய *

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.


பதவுரை:

பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி * ~ பொத்தை உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி - 

(பொத்த ~ பொத்தை - Anything large, or bulky; பருமையானது

உரல் - Mortar )

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் * - 

(தித்தித்த ~ தித்தித்தல் - To be sweet, savoury, delicious, pleasing; இனித்தல்

தித்தித்த பால் - இனிமையான பால், சுவைமிகுந்த பால்

தடா ~ மிடா - பானை, மிடா - பெரிய பானை,  Pot

வெண்ணெய் - Butter, தயிரைக் கடைந்த பின் கிடைக்கும் திடப்பொருள் - வெண்ணெய், திரவப்பொருள் - மோர்)

மெத்தத் திருவயி றார விழுங்கிய * - மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய - இவ்வடியில் மிகுதி என்னும் பொருள் தரும் மெத்த என்னும் சொல்லும, ஆர என்னும் சொல்லும் வருகிறதை கவனித்தீர்களா?

மெத்த என்னும் சொல்லை, முந்தைய அடியிலுள்ள, பாலையும் வெண்ணெயையும், 

ஆர என்னும் சொல், திருவயிறு ஆர என்று வயிறு நிறைவையும் குறிக்கிறது

(மெத்த -  மிகவும், Much, abundantly, greatly;

திருவயிறு -  உதரம், Belly, stomach, paunch;

ஆர -  மிக, Fully, abundantly;

விழுங்கிய - உண்ட, விழுங்குதல் - கவளீகரித்தல், To devour, consume; to absorb; to exhaust;)

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான். 

(அத்தன் - தலைவன்;

ஆழியான் - திருவாழிச் சக்கரத்தைக் கையில் ஏந்தியவன்)

பொருளுரை:

இப்பாடல் மிகவும் எளிமையான, மிக மிகச் சுவையான ஒரு பாசுரம்! பாலும் வெண்ணெயும் வருவதால் மட்டுமல்ல... :-)

நம் அனைவரின் வீட்டிலும், குழந்தை கண்ணன் மண்டியிட்டு, பானையில் உள்ள வெண்ணெயை உண்பது போல் படம் வைத்திருப்போம். நமக்கு, குழந்தை கண்ணன் வெண்ணெய் உண்பது மட்டும் தெரியும்....

ஆனால், அந்த வெண்ணெய் எடுக்க கண்ணன் பட்ட பாடு... பெரியாழ்வாருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது!! 



பருத்த, பெரிய உரலைக் கவிழ்த்து... ஏன் கவிழ்க்க வேண்டும்?.... உரலின் மேல்பாகத்தில்  குழிவான பகுதி இருக்கும்... அதில் தான் தானியத்தை போட்டு இடிப்பர். ஆனால், உரலின் அடிப்பாகம் சமமாக இருக்கும்.  உரலைக் கவிழ்க்காமல், அப்படியே அதன் மேல் ஏறினால், கண்ணனோ சிறு பிள்ளை... அவன் மேலே எக்கும் பொழுது, தன் கால்கள் உரலின் மேல்பாகத்தில் உள்ள குழிக்குள் சென்றால், தன் சமநிலைப் பாதிக்கப்படுமல்லவா.... ஆகையினால்தான், உரலைக் கவிழ்த்துப் போட்டு, தன் கடமையைச் செய்கிறார்! :-)) 

உருட்டி அதை வெண்ணெய் பானை இருக்கும் இடத்திற்கு நகர்த்தி சென்று, அதன் மேலேறி, எக்கித் தாவி, பானைகளில் வைத்திருந்த இனிமையான பாலையும், சுவையான வெண்ணெயையும்... வயிறு முட்ட உண்டாராம்! 

எவ்வளவு பாலையும் வெண்ணெயையும் உண்டார்? - மெத்த ~  நிறைய, நிறைய பாலையும், வெண்ணெயையும் உண்டாராம்...

எந்த அளவுக்கு உண்டார்? திருவயிறு ஆர ~ தன் திருவயிறு முட்ட முட்ட உண்டாராம்....

இப்பாசுரத்தில், யசோதை அன்னைக் கவனிக்காத ஒன்றையும் பெரியாழ்வார் கவனித்திருக்கிறார்... 

பருத்த உரல் எப்படி வெண்ணெய் பானையின் அடியில் வந்தது என்று!

 .... '' பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி '' .... 

இதை, யசோதை அன்னை கவனித்திருந்தால், அந்த உரலிலேயே கண்ணனைக் கட்டிப் போட்டிருப்பாரா??!!

பெரிய, பருத்த உரலைக் கவிழ்த்து, அவ்வுரலின் மேல் ஏறி, பானைகளில் வைத்திருந்த இனிமையான பாலையும், வெண்ணெயையும் மிகுதியாகத் தன் திருவயிறு நிறைய, நிறைய  உண்ட தலைவன் வந்து என்னைப் புறம் புல்குவான்! தன் திருக்கைகளில் திருவாழிச்சக்கரத்தை ஏந்திய எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்!

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! 

Tuesday, October 27, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 6

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 6

 சத்திர மேந்தித் தனியொரு மாணியாய் *

உத்தர வேதியில் நின்ற ஒருவனை *

கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட *

பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.



பதவுரை: 

சத்திர மேந்தித் தனியொரு மாணியாய் * - பனங்குடையை ஏந்திக் கொண்டு, தனி ஒரு (பிரம்மசரியனாய்) அந்தண சிறுவனாய், 

 (சத்திரம் - Umbrella; குடை;

மாணி - Student; bachelor; பிரமசாரி; Dwarf; குறள்வடிவம்)

உத்தர வேதியில் நின்ற ஒருவனை * - யாகத்தில் இருந்த மாவலிச்சக்கரவர்த்தியை

(உத்தரவேதி - வேள்வி, யாகசாலை; Northern altar made for the sacred fire; யாக அக்கினி இருக்கும் இடம்; 

ஒருவனை - மாவலிச் சக்கரவர்த்தி யை)

 

கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட * - சக்கரவர்த்தியின் கீழ் உள்ள அனைவரின் கண்முன்னே, மாவலிச்சக்கரவத்தியிடம் கேட்ட காணிக்கை முழுவதையும் ஏற்றுக் கொண்ட 

(கத்திரியர் - சத்திரியர்கள்;

காணி - காணிக்கை - Voluntary offering, present to a guru or other great person; 

காணி - நிலம்(மூவுலகம்) என்றும் பொருள் கொள்வர். காணி என்பதை நிலத்தை அளவிடும் ஒரு அளவீடு என்பதனால் மூவுலகம் என்றும் பொருள் கொள்வர்)

பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான். - பேரழகன் என்னை புறம் புல்குவான்; மூவுலகையும் ஈரடியில் அளந்த எம்பெருமான் என்னை புறம்புல்குவான்

(பத்திராகாரன் - Well-built handsome man; அழகிய வடிவினன்; பத்திரம் -  Beauty, grace; அழகு

பார் - உலகம்

**நினைவு கூர்க: முந்தைய பாசுரத்தில், பத்திரம் என்னும் சொல் 'இலை' என்னும் பொருளில் வந்தது )

பொருளுரை:

பெரிய பனங்குடையை ஏந்திக் கொண்டு அந்தண சிறுவனாய்த் தான் மட்டும் தனியே சென்று, யாகத்திலிருந்த மாவலிச்சக்கரவர்த்தியிடம், அவரது அரசுப் பரிவாரங்கள் மற்றும் படை வீரர்களின் கண் முன்னேயே, தான் கேட்ட யாசகம் அனைத்தையும் முழுவதுமாகப் பெற்றுக் கொண்ட பேரழகன் என்னைப் புறம் புல்குவான்; வையமனைத்தும் அளந்த திரிவிக்கிரவாமனன் என்னைப் புறம்புல்குவான்.

** பின்குறிப்பு:

தனியொரு மாணியாய் - மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியிடம் தனியொருவனாய் சிறுவன் உருவில் செல்கிறார்;

சத்திரியர் காண -  தானத்தை, வஞ்சகமாய், ஒளித்து, யாரும் அறியா வண்ணம் கேட்கவில்லை. ஆள், அம்பு, சேனை என்று சக்கரவர்த்தியின் படை முன்னே வெளிப்படையாக யாசிக்கிறார்,

காணி முற்றும் கொண்ட - தனியொருவனாய் சிறிய வடிவில் சென்ற பொழுதும் முழு காணிக்கையையும் ஏற்றுக் கொள்கிறார். 

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! 

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 5

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 5

 வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி *

கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ் *

பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப * பண்டு

மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.

(~ செய்த - பெய்த அல்லது பெய்து)


பதவுரை:

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி * - பண்டு வெண்கலப் பத்திரம் கட்டி, விளையாடி 

(பண்டு - Former time, previous time; முற்காலம், 

வெண்கலம் - Bell-metal, bronze, an alloy of copper and tin; செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கி யுண்டாக்கும் கலப்பு உலோகம்; 

பத்திரம் - இலை,)

கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ் * - பல கண் செய்த கருந்தழைக் காவின் கீழ் ~ பெரிய பனங்குடையின் கீழ்; இவ்வடி மிகவும் இரசனை மிகுந்த ஒன்று; 

உருவமோ குறுகிய அந்தண சிறுவன், ஆனால் அவர் கையில் உள்ள பனங்குடை எப்படிப்பட்டது எனில் ....

பலக் கண் செய்த - பீலி - The first leaf or shoot of a palmyra; பனங்குருத்து 

கருந்தழை - தழை என்பதனால், அது காய்ந்த பனை மரம் அல்ல, பசுமையானது

பல குருத்துகள் விட்ட பனை மரச்சோலையவே குடையாக ஏந்திக் கொண்டு அதன் கீழ்... 

அப்பாடி, நினைத்துப் பார்க்கும் போது எவ்வளவு பிரமிப்பாக உள்ளது; 

.... பசுமையான, பல குருத்துகளை விட்ட, நுனியில் அதன் ஓலைகள் பெரும் சோலைகளாக இருக்க, அதனைக் குடையாக ஏந்திக் கொண்டு அதன் கீழ்  

(கண் பல செய்த கருந்தழைக் கா - பசுமையான பனைமரம்

தழை - Sprout, shoot; தளிர்,  Leaf, foliage; இலை )

பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப * பண்டு - பண் பல பாடி, பல்லாண்டு இசைப்ப, ~ 

(பண் - இசை, 

பல்லாண்டு - மங்களாசசனம்,)




மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான். - மூன்று உலகையும் பெற்றவன் புறம் புல்குவான்; வாமனன் என்னைப் புறம் புல்குவான் 

(மண் பல - மூன்று உலகம்)

பொருளுரை:

பெரியாழ்வார் கண்ணபெருமானின், மழலையாய் எவ்வாறு இரசித்திருக்கிறார், அதில் எந்த அளவு இலயித்திருக்கிறார் என்பதற்கு இப்பாடல் மற்றுமொரு சான்று... 

வீட்டில் சிறு பிள்ளைகள், சில சமயம் தந்தையின் சட்டை, செருப்பை அணிந்து கொண்டு தந்தையைப் போல் அதிகாரத் தொனியில் பேசுவர்...  சில சமயம் வீட்டில் உள்ள திருமணமாகாத அத்தைமார்களின் தாவணியைத் தன் ஆடை மேல் பொருத்தமே இல்லாமல் அணிந்து கொள்வர், சில சமயம் அன்னையின் புடவையை தன் மேல் பல்வேறு சுற்றுகள் சுற்றி அணிந்து கொண்டு வெக்கத்தோடு நகைப்பர்.... இப்படி தன் வயதுக்கு மீறிய சேட்டைகளைப் பிள்ளைகள் செய்வது எவ்வளவு அலாதியானதோ... அதை அப்படியே இங்கு எடுத்துக் காட்டுகிறார்.... 

சிறு குழந்தையாய் ஆடை கூட அணியாமல், தன் இடையில் வெறும் அரைஞாண் கயிற்றில் ஒரு இலையை மட்டும் அணிந்து பால்மணம் மாறாத பச்சிளங்குழந்தையாய் விளையாடிக் கொண்டிருந்த கண்ணன், ஏராளமான குருத்துகளைக் கொண்ட, சோலைகள் நுனியில் இருந்து நிழல் தர, பசுமையான பனைமரத்தையே குடையாய் ஏந்திக் கொண்டு... அப்பனங்குடையின் கீழ் நடந்து சென்று ... தேவர்கள், பல்வேறு இன்னிசைக் கருவிகளின் இன்னிசையோடு, பல்லாண்டு பாடி வாழ்த்த .... மாவலிச்சக்கரவர்த்தியிடம் சென்று தன் காலால் அளந்த மூவடி மண்ணே போதும் என்று கூறி, மூவுலகையும் ஈரடியிலே அளந்த பெருமான் என்னைப் புறம் புல்குவான்.... வாமனன் என்னைப் புறம் புல்குவான்.... 

** குறிப்பு:

பீலி என்பது மயில்தோகையையும் குறித்தாலும், ஈற்றடியில் வாமனன் என்று குறிப்பிடுவதன் மூலம் அது நிச்சயம் பனைமரக் குருத்தையே குறிக்கிறது என்று அறியலாம். 

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! 

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 4

நாந்தக மேந்திய நம்பி சரணென்று *

தாழ்ந்த தனஞ்சயற் காகி * தரணியில் 

வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர் *

ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.

பொருளுரை:

நாந்தக மேந்திய நம்பி சரணென்று * - நாந்தகம் ஏந்திய நம்பி! நீயே சரண்! - என்று (நாந்தகம் ~ நந்தகம் என்பது நீண்டு நாந்தகம் ஆனது; வாள், 

பஞ்சாயுதம்:திருமாலின் ஐந்து ஆயுதங்கள்: வில், வாள், தண்டு, சங்கு, சக்கரம்;

சார்ங்கம் (வில்)~ சாரங்கபாணி,

கட்கம் (நந்தகம், வாள்)~ கட்கபாணி, 

கௌமோதகி (கதை),

 பாஞ்ச சன்யம் (சங்கு),

சுதர்சனம் (சக்கரம்)~ சக்கரபாணி;

நம்பி -  The elite among men, used as a term of respect; ஆணிற் சிறந்தோன்; சரண் - அடைக்கலம், புகலிடம்)

தாழ்ந்த தனஞ்சயற் காகி * தரணியில் - தாழ்ந்த தனஞ்சயனுக்காக, தரணியில் (போர்க்களத்தில்)  (தாழ்ந்த - பணிந்த, தனஞ்சயன் - அர்ச்சுணன், தரணி - புவியில் (குருசேத்திரத்தில்))

வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர் * ஊர்ந்தவன் - வேந்தர்கள் உட்க விசயன் மணித்திண் தேர் ஊர்ந்தவன் ~ கௌரவர்கள் தரப்பில் உள்ள மன்னர்கள் அனைவரும் அஞ்சி, மனம் கலக்கமுறும் வண்ணம், விசயனின் மணித்திண் தேர் ஊர்ந்தவன் (வேந்தர்கள் - மன்னர்கள், உட்க -உள்ளழிய; உள்ளம் கலக்கமுற ~ உள்குதல் ~ உட்குதல் - To be disheartened, dispirited; விசயன் - அர்ச்சுணன், மணித் திண் தேர் - மணி போன்ற அழகும், உறுதியும் கொண்ட மிகவும் திண்மையான தேர்)



என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான். - விசயனின் மணித்திண் தேரை ஓட்டிய பார்த்த சாரதி என்னைப் புறம்புல்குவான்; தேவாதி தேவன் என்னைப் புறம்புல்குவான் (ஊர்ந்தவன் - விசயனின் மணித்திண் தேரைத் திறமாக ஓட்டிய பாரத்தனின் சாரதி; உம்பர் கோன் - தேவாதி தேவன், உம்பர் - மேலுலகம், விண்ணுலகம், தேவலோகம்; கோன் - அரசன், தேவன் )


பொருளுரை:

நாந்தகம் என்னும் வாளினை ஏந்திய நம்பி! நீயே சரண்! - என்று சிரம் தாழ்ந்து, பணிந்து அன்புடன் வேண்டிய தனஞ்செயனுக்காக, குருசேத்திரத்தில் நடைபெற்ற மகாபாரதப் போர்க்களத்தில், எதிர்த் தரப்பில் நின்ற மன்னர்கள் அனைவரும் உள்ளம் கலங்க, விசயனின் மணித் திண்தேர் ஊர்ந்த பார்த்தசாரதி என்னைப் புறம் புல்குவான், தேவர்களின் தேவன் என்னைப் புறம் புல்குவான். 

** பின்குறிப்பு:

நாந்தகம் ஏந்திய நம்பி - திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் இருந்தபோதும், இப்பாசுரத்தில் நாந்தகம் என்று வாளினைக் குறிப்பிட்டுள்ளது, ஆயர்களின் கோன் என்பதை அறிய வைக்கிறார் பெரியாழ்வார்.

தரணி - தரணி என்னும் சொல் புவி என்பது நேரடியான பொருள் என்றாலும், இங்கு தரணி என்னும் சொல், மகாபாரதப் போர் நடைபெற்ற குருசேத்திர போர்க்களத்தையே குறிக்கிறது.

மணித் திண் தேர் - (மணிப் போன்ற திண்மை )மணியை உடைக்க இயலாது, ஆகையால், மணியைப் போல் அழகும், உறுதியும் உடைய திண்மையான தேர்





பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 3

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை
பாடல் - 3


கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் *

ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான் *

கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய *

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.




பொருளுரை:

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்  -  அளவுக்கு அதிகமாக நிறைந்திருந்த பெரும் செல்வம்; , உறவினர்கள், சுற்றத்தவர், சகோதரர்கள், நண்பர்கள், நிலம், பொன், பொருள், அரசு, அரண்மணை என்று எதற்கும் குறை பட முடியாத அளவுக்கு நிறைந்திருந்த பெருஞ்செல்வத்தை (கத்தக் கதித்து - நிறைந்து மிகுந்த; கத்தக்கதித்தல் - நிரம்பமிகுதல்)

ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான் - ஒருவருக்கொருவர் உடன்பட்டு, ஒற்றுமையுடன் இயைந்து ஒழுகி,  அனுபவிக்காமல் தான் மட்டும் அரசாள வேண்டும் என்னும் சுயநல எண்ணம் கொண்ட (ஒத்துப் பொருந்திக் கொண்டு - To act agreeably to the wishes of another, live in harmony; இசைந்தொழுகுதல். {பொருந்துதல் - To agree, consent; உடன்படுதல்.}; உண்ணாது - அனுபவிக்காது)

கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய - நூறு கௌரவ சகோதரர்களில் மூத்தவனான துரியோதனனின் கூட்டத்திலுள்ள அனைவரையும் (நூறு சகோதரர்கள் மற்றும் அவனுடன் இணைந்து போரிட்ட அனைவரும்) தோற்கடித்து, பேராசையும், சுயநலமும் கொண்ட துரியோதனனை அவன் அரசாங்கத்தோடு அழிக்கத் தோன்றிய (கொத்து - குலை ~ குலம் ~ சுற்றமும் நட்பும்; தலைவன் - முதல்வன்; குடி - அரசு, ஊர்; )

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான். - தலைவன் வந்து என்னை  அணைத்துக் கொள்வான்! ஆயர் குலத்தின் ஆண் இடபம் போன்ற என் அத்தன் என்னைப் புறம்புல்குவான். (அத்தன் - தந்தை, தலைவன், குரு; ஏறு - இடபம், ரிஷபம், காளைமாடு)

பதவுரை:

எல்லா செல்வமும் நிறைந்து, மிகுந்திருந்த போதும், நல்ல மனச்செல்வம் தன்னிடத்து இல்லாத படியால், தன் உறவினர்களான பஞ்ச பாண்டவர்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து அவற்றை அனுபவிக்காது சுயநல ஆட்சி புரிந்த நூறு கௌரவர்களின் மூத்தவனான துரியோதனனின், சகோதரர்களையும், அவனுடைய சேனைகளையும் தோற்கடித்து அவனது அதர்ம அரசாட்சியை  அடியோடு அழித்துத் தர்மத்தைக் காத்த  தர்மத்தின் தலைவன் என்னைப் புறம்புல்குவான்! ஆயர்கள் ஏறு என்னை வந்து அணைத்துக் கொள்வான்!


Friday, October 2, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே
(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 2

கிங்கிணி கட்டிக் கிறிகட்டி * கையினில்

கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி *

தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து *

என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.

(~ கிங்கிணி - கிண்கிணி)



பொருளுரை:

கிங்கிணி கட்டிக் கிறிகட்டி * கையினில் - காலில் கிண்கிணி சதங்கை கட்டி, முன்கையினில் பவள வடம் அணிந்து கொண்டு (கிண்கிணி - பாதச் சதங்கை; கிறி - பவள வடம், wristlet;)

கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி * - பவள வடம் மட்டுமல்லாது, காப்பும் தரித்து, கழுத்தில் பொன் சங்கிலி அணிந்து (கங்கணம் - {தங்கக் காப்பு}காப்பு; தொடர் - சங்கிலித் தொடர், chain)

தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து * - பொன்னாலும் மணியினாலும் ஆன பல்வேறு திருவாபரணங்களின் கணத்தினாலே, ஆடி ஆடி நடந்து வந்து (கணம் - கூட்டம், collections, )

என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான். - என் கண்ணன் என்னைப் புறத்தே அணைத்துக் கொள்வான்; என் தெய்வம் என்னை அணைத்துக் கொள்வான். 

பதவுரை:

என் கண்ண பெருமான், தன் திருப்பாதத்தில் கிண்கிணிச்சதங்கை கட்டிக் கொண்டும், கையில் பவளவடமும், பொன்னாலான காப்பும் (கங்கணம்) அணிந்து கொண்டு, கழுத்தில் பொன்னாலும் மணியாலும் செய்த சங்கிலிகளை அணிந்து கொண்டும்,  அந்த திருவாபரணங்களின் கூட்டத்தில் தானும் ஒரு விலைமதிப்பற்ற மணியான என் முகில்வண்ணன், அணிகலன் ஒரு புறம் ஆட ஆட, தன் திருப்பாதம் ஒரு புறம் ஓட ஓட, கண்கள் என்னைத் தேட தேட, தேனினும் இனிய தன் குரலில் 'அம்மா, அம்மா' என்று பாட பாட, ஓடி வந்து என்னைப் புறம் புல்குவான்! என் தெய்வமான என் பிள்ளைக் கண்ணனும் என்னிடத்து ஓடி வந்து என்னை அணைத்துக் கொள்வான்!

Wednesday, September 16, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 1



பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே
(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
பாடல் - 1

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்

வட்டு நடுவே வளர்கின்ற* மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்*
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க* என்
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.
(~ நுனையில் - நுனியில்)


பதவுரை:

வட்டு நடுவே வளர்கின்ற* மாணிக்க - வட்டுவின் நடுவில் வளர்கின்ற மாணிக்க மொட்டு (வட்டு -  பந்து, உருண்ட, திரட்சி, round; வட்டுக்கருப்பட்டி - கருப்பட்டி வெல்ல உருண்டை, jaggery ball;)
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்* - மாணிக்க மொட்டுவின் நுனியில் (நவரத்தினங்கள், நவமணிகள்: 

கோமேதகம் - Hessonite,

முத்து - Pearl,                 பவளம் - Coral,

வைரம் - Diamond,         வைடூரியம் - Lapis Lazuli; Cat’s Eye,

மரகதம் - Emerald,         மாணிக்கம் - Ruby,

நீலம் - Blue Sapphire,     புட்பராகம் - Yellow Sapphire; Topaz.)


சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க* என் - சிறு சிறு துளிகளாய்த் துளிக்கத் துளிக்க (சொட்டு - துளி)
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான். - என் மகன் வந்து என்னைப் பின்புறமாக வந்து அணைத்துக் கொள்வான், கோவிந்தன் என்னை அணைத்துக் கொள்வான்.   (குட்டன் - சிறுவன்; புறம் புல்குதல் - பின்புறமாக கட்டித் தழுவுதல்)

இங்கு புறம் புல்குவான் என்பதை, அணைத்துக் கொண்டான் என்று இறந்த காலத்தைக் குறிக்கிறதா அல்லது அணைத்துக் கொள்வான் என்று எதிர்காலத்தைக் குறிப்பதாய் வருகிறதா என்று குழப்பம் வரலாம். குழந்தைத் தன் தாயை ஒரு முறை மட்டும் அணைத்துக் கொள்வதில்லை. அதாவது, தன்னை எப்படியெல்லாம் முன்பு அணைத்துக் கொண்டானோ, அதுபோல இனிமேலும் என்னை வந்து என் குழந்தை அணைத்துக் கொள்வான் என்று உரைப்பது போல் புறம்புல்குவான் என்கிறார் பெரியாழ்வார்.

பொருளுரை:

இப்பாசுரத்தில் குழந்தை கண்ணனின் திருவுறுப்பை நேரடியாகக் குறிப்பிடாமல், உவமானப் பொருள்களை மட்டும் கூறி  பொருளைக் குறிப்பால் உணரவைக்கிறார். 

உருண்டு திரண்ட வட்டு (பந்து) நடுவில் வளர்கின்ற மாணிக்க(திருவுறுப்பு) மொட்டின் நுனியில், முளைக்கின்ற முத்தைப் போல் சிறு சிறுத் துளிகளாய் சிறுநீர் (முத்துத் துளிகள்) துளிகள், துளிக்கத்துளிக்க ஓடி வந்து என் பிள்ளை என்னை அணைத்துக் கொள்வான். கோவிந்தன் என்னை அணைத்துக் கொள்வான். 

Wednesday, September 9, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 11

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
தரவு கொச்சகக் கலிப்பா

பாடல் - 11

குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை*
அச்சோ வருகவென்று ஆய்ச்சி யுரைத்தன*
மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்*
நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.




பதவுரை:

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை* - நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை (நச்சுவார் - விரும்புவர், நச்சுதல் - விரும்புதல்)
அச்சோ வருகவென்று ஆய்ச்சி யுரைத்தன* -  அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்* - மச்சணி மாடப் புதுவைக் கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே. - நிச்சலும் பாடுவார் நீள்விசும்பு ஆள்வரே. (நிச்சலும் - எப்பொழுதும்; விசும்பு - வைகுந்தம், சுவர்க்கம், விண்ணுலகம்)

பொருளுரை:

தன்னை விரும்பி நினைப்பவர் முன் தோன்றி நிற்கும் பரம்பொருளான நாராயணனை அணைத்துக் கொள்ள வருமாறு ஆய்ச்சியான யசோதை அன்னை அழைத்தமையை அழகிய மாடங்கள் நிறைந்த புதுவை நகர் வேந்தரான பட்டர்பிரான்  பாசுரங்களாய்  அருளியுள்ளார். அப்பாசுரங்களை நித்தமும் பாடுபவர் விண்ணுலகை ஆள்வரே!


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை

பாடல் - 10

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகைமூட*
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட*
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க* அன்று
அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ.
(அருமறை - ஆர்மறை என்று பாடம்)




பதவுரை:

மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட* - இம்மண்ணில் என்றும் நிலைபெற்ற, உயர்ந்த வேதங்கள் நான்கும் முற்றிலும் மறைந்திட (மன்னிய - நிலைபெற்ற, உயர்வான; நான்மறை - நான்கு மறை; முற்றும் - முழுவதும் )

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகைமூட* - வேதங்கள் நான்கும் மறைந்துவிட்டமையால் அடர்ந்து, செறிந்த பேரிருள் சூழ்ந்து உலகை மூட (துன்னிய - நெருங்கிய )

பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க* அன்று - இவ்வுலகில் பேரிருள் சூழ்ந்தபின் அவ்விருளை நீக்குவதற்காக அன்று (பின்னிவ்வுலகினில் - பின் இவ்வுலகினில், பேரிருள் - அடர்ந்த இருள்; நீங்க - விலக்க, அன்று - அன்றைய நாளில்)

அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ. (அருமறை - ஆர்மறை என்று பாடம்) - அன்னமாய் திருவவதாரம் புரிந்தவனே அச்சோவச்சோ! வேதங்களை மீட்டு, இவ்வுலகிற்கு ஒளியை அளித்தவனே அச்சோவச்சோ (அன்னமதானானே - அன்னம் அது ஆனானே - அன்னமாகத் திருவவதாரம் புரிந்தவனே; அருமறை - அரிதான வேதம்)

பொருளுரை:

உயர்ந்த வேதங்கள் நான்கும் மறைந்திட்டமையால், அடர்ந்த பேரிருள் எங்கும் சூழ்ந்து இவ்வுலகை மூட, பின்னர், இந்த உலகின் இருளை அகற்றி ஞான ஒளியைத தருவதற்காக அன்று அன்னமாகத் திருவவதாரம் புரிந்தவனே அணைத்துக் கொள்ள வருவாயாக! அரிய வேதங்களை மீட்டு அகிலத்திற்கு ஒளியைத் தந்தவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!



Tuesday, September 8, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் - 9

கண்ட கடலும் மலையும் உலகேழும்*
முண்டத்துக் காற்றா முகில்வண்ணாவோ! என்று*
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள*
மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ.





பதவுரை:

கண்ட கடலும் மலையும் உலகேழும்* - கண்ணில் தென்பட்ட அலைகடல் முதல் வானுயர்ந்த மலைகள் உட்பட ஏழு உலகும் (கண்ட - கண்ணில் தென்பட்ட)

முண்டத்துக் காற்றா முகில்வண்ணாவோ! என்று* - என் கையில் உள்ள இந்த பிரம்மக் கபாலத்திற்குப் போதவில்லையே முகில் வண்ணனே நாராயணா! ஓ! என்று  (முண்டத்துக்கு - கபாலத்திற்கு முண்டம்~தலை; ஆற்றா - ஆற்றவில்லை, போதவில்லை; முகில்வண்ணா, ஓ! என்று - ஓ! முகில் வண்ணா என்று அழைக்கிறார் சிவபெருமான்)

இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள* - சடைமுடியில் மாலையணிந்த ஈசன் இரந்துக் கேட்க (இண்டை - மாலை, பூமாலை; ஈசன் - சிவபெருமான்; இரக் கொள்ள - யாசிக்க, பிச்சைக் கேட்க )



மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ. - சிவபெருமானின் கையிலிருந்த பிரம்ம கபாலத்தை நிறைத்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! தன் திருமார்பில் ஸ்ரீவத்சம் என்று அழைக்கப்படும் திருமகளின் அடையாளமான மருவினை உடையவனே அச்சோவச்சோ!  (மண்டை நிறைத்தானே - சிவபெருமான் கையில் திருவோடாயிருந்த பிரம்மகபாலத்தை நிறைத்த மகாவிஷ்ணு; மார்வில் - மார்பில்; மறுவனே - மறு, மச்சமுடையவனே )

பொருளுரை:

! முகில்வண்ணா! அண்டமுழுவதும் கண்ணில் தென்பட்ட இடமெங்கும், ஆழ்கடலும் வானளாவிய மலைகளும் அனைத்து உலகங்களும் என் கையில் திருவோடாய் உள்ள இந்த பிரம்ம கபாலத்திற்குப் போதவில்லையே என்று இரந்து கேட்ட சிவபெருமானின் கையிலிருந்த பிரம்ம கபாலத்தை நிறைத்தவனே என்னை அனணைத்துக் கொள்ள வருவாயாக! தன் திருமார்பில்  திருமகளின் வடிவமான ஸ்ரீவத்சம் என்னும் மறுவினை உடையவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் - 8

என்னிது மாயம்? என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன*
மன்னு நமுசியை வானில் சுழற்றிய*
மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ.




பதவுரை:

என்னிது மாயம்? என்னப்பன் அறிந்திலன்* - இது என்ன மாயம்? என் தந்தை இதைப் பற்றி முன்பே அறியவில்லை. மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தியிடம் தானம் கேட்க வந்த பொழுது மூன்றடி உயரத்தில் வாமனனாய் வந்தார். தானம் தருவதாக வாக்கு அளித்த பின், விண்ணும் மண்ணும் அடங்க நீண்டு உயர்ந்து வளர்ந்த திரிவிக்கிரமனாய் உருவத்தை மாற்றிய உடன், மகாபலிச்சக்கரவர்த்தியின் மகன் நமுசி என்பவன் குறுக்கிட்டு மகாவிஷ்ணுவிடம் தருக்கம் புரியத் துவங்கினான். (என்னிது - என்ன இது; என்னப்பன் - என் அப்பன்~ என் தந்தை; அறிந்திலன் - அறிந்து இலன் )

முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன* - முன் என்ன உருவத்தில் நீ வந்தாயோ அவ்வுருவிலேயே இருந்து நீ அளக்க வேண்டும் என்று கூறி  (முன்னைய - முன்பு; வண்ணம் - வடிவம்; அளவாயென்ன - அளவாய் என்ற)

மன்னு நமுசியை வானில் சுழற்றிய* - அளக்கவிடாமல், திரிவிக்கிரமனனின் காலைப் பிடித்துக்கொண்டான் நமுசி. அப்பொழுது இறைவன் அளப்பதற்காக தன் திருப்பாதத்தை ஓங்கிய பொழுது காலைப்பிடித்துக் கொண்டிருந்த நமுசி, விண்ணில் பறந்து சுழன்றினான்.  (மன்னு - பிடி; நமுசி - மகாபலியின் புதல்வன்)

மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ. - அவண்ணம் நமுசியை வானில் சுழற்றிய மின்னல் ஒளிப் போன்ற பொலிவான திருமுடியை அணிந்தவனே அணைத்துக் கொள்வாயாக! திருவேங்கடம் என்னும் திவ்விய தேசத்தில் வாழ்பவனே அணைத்துக் கொள்வாயாக!  (மின்னுமுடியனே - மின்னல் போன்ற ஒளி பொருந்திய திருமுடியை அணிந்தவனே; வேங்கடவாணனே - திருவேங்கடத்தில் வாழ்பவனே)

பொருளுரை:

மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தியின் யாகத்திற்கு மூன்றடி உயரமுடைய வாமனனாக வந்து தன் காலால் அளந்த மூன்றடி நிலம் வேண்டும் என்று கூறினார். மகாபலிச்சக்கரவர்த்தியும் தானமளிப்பதாய் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, மூன்றடி உயர வாமனனோ, விண்ணும் மண்ணும் அடங்க உயர்ந்து வளர்ந்த திரிவிக்கிரமனாய் மாறியதைக் கண்டதும் மகாபலியின் புதல்வன் நமுசி என்பவன் இது என்ன மாயம்? என் தந்தை இதைப்பற்றி முன்பு அறியவில்லை. தானம் கேட்ட பொழுது என்ன உருவத்தில் வந்தாயோ, அவ்வுருவிலேயே இருந்து நீ மூன்றடி நிலம் அளந்து கொள்ளவேண்டும் என்று வாதிட்டு, மகாவிஷ்ணுவை அளக்க விடாமல், அவரின் திருப்பாதத்தைப் பற்றிக் கொண்டான். 

மகாவிஷ்ணு அளப்பதற்காகத் தன் திருப்பாதத்தை விண்ணில் ஓங்கிய பொழுது, பாதத்தைப் பிடித்துக் கொண்டிருந்த நமுசியும் விண்ணில் உயரப் பறந்து வானில் சுழன்றான். அவ்வண்ணம் நமுசியை வானில் சுழற்றிய மிகவும் ஒளிபொருந்திய திருமுடியை அணிந்தவனே அணைத்துக் கொள்வாயாக! திருவேங்கடம் என்னும் திவ்விய தேசத்தில் வாழ்பவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!

Sunday, September 6, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் 7



மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்*
தக்க திதன்றென்று தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய*
சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.

பதவுரை:

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்* - மூவுலகையும் வென்று பெரும் புகழ் பெற்ற மகாபலிச்சக்கரவர்த்தியின் வேள்விக்கு அந்தண சிறுவனாய் வந்த வாமனனுக்கு பலிச்சக்கரவர்த்தி, அவ்வந்தண சிறுவனின் வேண்டுகோளின் படி மூன்றடி நிலத்தைத் தானமளிக்க முயன்ற போது, (மாவலி - மகாபலிச் சக்கரவர்த்தி, பிரகலாதனின் பேரன்; வேள்வி - யாகம்)

தக்க திதன்றென்று தானம் விலக்கிய* - மகாபலி அளிக்கப் போகும் தானம் சரியானது அல்ல. மகாவிஷ்ணுவே தேவர்களுக்காக இந்திரலோகத்தை மீட்க வந்திருக்கிறார் என்று அசுரகுரு எச்சரித்த பின்னும் பலிச்சக்கரவர்த்தி தானம் அளிக்க முயன்ற போது, வண்டு உருவில் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துத் தானத்தைத் தடுத்த, (தக்கது இது அன்று என்று - இது சரியான செயல் அல்ல என்று; தானம் விலக்கிய - தானத்தைத் தடுத்த)

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய* சக்கரக்கையனே!  அச்சோவச்சோ- வாமனனிடத்து மகாபலியின் தானத்தைத் தடுத்த அசுரகுருவான  சுக்கிராச்சாரியாரின் கண்ணைத் தன் வலக்கரத்திலிருந்த தர்ப்பைப் புல்லால் கிளறிய, வலக்கரத்தில் சக்கராயுதம் தரித்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! (சுக்கிரன் - அசுரர்களின் குலகுருவான சுக்கிராச்சாரியார்; துரும்பு - தர்ப்பைப் புல், சக்கரக்கையன் - திருச்சக்கரத்தைக் கரத்தில் ஏந்தியவன்)

சங்கமிடத்தானே! அச்சோவச்சோ. - இடக்கரத்தில் திருச்சக்கரம் தரித்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! (சங்கம் இடத்தானே - இடக்கரத்தில் திருச்சங்கைத் தரித்தவனே)




வாமனாவதாரம்: 


மாபெரும் கிருஷ்ண பக்தனாகிய பிரகலாதனின் பேரனான, மகாபலிச் சக்கரவர்த்தி இம்மண்ணுலகிற்கு மட்டுமல்லாது, இந்திரலோகத்தையும் கைப்பற்றி மூவுலகிற்கும் தன்னிகரில்லாத பேரரசராய் தானமும், தவமும் தவறாத தர்ம ஆட்சி புரிந்து வந்தான். 


இந்திரலோகத்தை, மகாபலியிடம் இழந்த தேவர்கள், தங்களின் குலகுருவான பிருஹஸ்பதியிடம்(குரு பகவானிடம்) அடைக்கலம் தேடினர். அவரும் இந்திரன் முதலாய தேவர்களைச் சென்று திருமாலின் திருவடியில் சரண் அடையுமாறு அறிவுரை கூறினார். இந்திரனும் திருமால் திருப்பாதம் சென்று தங்கள் இந்திரலோகத்தை மீட்டத் தருமாறு முறையிடவே, திருமாலும் தேவர்களின் துயர் தீர்க்க கசியப முனிவருக்கும், அதிதி முனி பத்தினிக்கும் புத்திரராக திருவவதாரம் புரிந்தார். 


இந்திரலோகத்தைக் கைப்பற்றிய மாவலிச்சக்கரவர்த்தி, மூவுலகையும் எவ்வித குறையுமின்றி நல்லாட்சி புரிந்து வந்தான். மாவலி உலக நலனுக்காகவும், தான் பெற்ற இந்திரபதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு யாகங்களும், யாகத்தின் நிறைவில் தான தர்மங்களும் புரிந்தான்.


ஒருமுறை மகாபலியின் யாகத்திற்கு, அந்தண சிறுவனான வாமனன் எழுந்தருளினார். வாமனரை மகாபலி பணிவன்போடு வரவேற்று, உபசரித்தார். பின் வாமனருக்குத் தன்னால் அளிக்கவல்லது யாது என்று வினவினார். 


வாமனரோ, தன் திருப்பாதத்தால் அளந்த மூன்றடி நிலம் மட்டும் போதும் என்று கூறவே, மகாபலியோ அது தமக்குப் போதாது இன்னும் வேறு ஏதாவது தரக்கூடுமோ என்று கேட்டார்.


வாமனரும் தன் பாதத்தால் அளந்த மூன்றடி நிலம் மட்டும் போதும் என்று உறுதியாகக் கூறினார். வாமனரின் கோரிக்கைப்படி, அவர் கேட்டதை தானமளிக்க மகாபலிச் சக்கரவர்த்தித் தயாரானார். 


வாமனராய் வந்திருப்பவர் யார் என்பதை அறிந்து கொண்ட அசுரகுருவான சுக்கிராச்சாரியார் மகாபலியை எச்சரித்தார். இந்த அந்தண சிறுவன் யார் என்பதை அறியாது நீ தானமளிக்கப் போகிறாய். இவர் மகாவிஷ்ணு, தேவர்களுக்கான இந்திரலோகத்தை மீட்க வாமன உருவில் வந்திருக்கிறார். ஆகவே நீ செய்யப்போவது உமக்கு உகந்த காரியமல்ல என்று அறிவுரை கூறி மகாபலிச் சக்கரவர்த்தியைத் தடுத்து நிறுத்தினார்.


குருவின் வார்த்தையைக் கேட்ட பின்னும் மகாபலிச் சக்கரவர்த்தி, தம்மால் கொடுத்த வாக்கை மீற இயலாது. மேலும் வந்திருப்பது மகாவிஷ்ணு என்றால், அதைவிட பெரும் பேறு தமக்கு வேறு இல்லை, ஆகவே பின்விளைவு யாதாயினும் வாமனரிடத்துத் தன் வாக்கை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறி, கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து தானமளிக்கத் துவங்கினார்.


அசுர குலகுருவான சுக்கிராச்சாரியார், சிறு வண்டாக உருமாறி கமண்டலத்தின் துவாரத்தை அடைத்து, தானத்தைத் தடுக்க முயற்சித்தார். வாமனரோ, தன் வலக்கையிலிருந்த தர்ப்பைப் புல்லைக் கொண்டு துவாரத்தை சரி செய்வது போல் வண்டு உருவிலிருந்த சுக்கிராச்சாரியாரின்  கண்ணைக் கிளறிவிட்டார். வலி பொறுக்காத சுக்கிராச்சாரியாரும் கமண்டலத்திலிருந்து வெளிவந்தார். 


பின் மகாபலி, வாமனர் கேட்ட மூன்றடி நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுமாறு கமண்டலத்திலிருந்து நீரை வார்த்துக் கொண்டிருந்த போது, வாமனரோ, திரிவிக்கிரமனாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நீண்டு உயர்ந்தார். குறுமாலவனாய் வந்த திருமால் பெருமாள் ஆனார்.


திரிவிக்கிரமனான பெருமாள், முதலடியில் பாதாளஉலகம் உள்ளிட்ட மண்ணுலகையும், இரண்டாமடியில் விண்ணுலகையும் அளந்துவிட்டார். மகாபலிச் சக்கரவர்த்தியின் மூவுலகையும் இரண்டே அடியில் அளந்துவிட்ட பெருமாள், வாயினுள்ளே அண்டசராசரத்தை அன்னைக்குக் காட்டிய வைகுந்த பிரான், மூன்றாமடியை எங்கு வைத்து அளப்பது என்று மகாபலியிடம் வினவினார். 


மகாபலி, தன்னையே பெருமாளுக்கு அர்ப்பணித்து, மூன்றாமடியைத் தன் சிரசில் வைத்து அளந்தருளுமாறு வேண்டினார். அதன்படியே திரிவிக்கிரமனும், தன் மூன்றாமடியை மகாபலிச்சக்கரவர்த்தியின் தலைமேல் வைத்து அளந்துகொண்டார்


இந்திரலோகத்தை தேவர்களுக்கும், பாதாள லோகத்தை மகாபலிக்கும் அளித்தார் மகாவிஷ்ணு, அதுமட்டுமல்லாது, மகாபலியின் கொடைத் தன்மைக்கும், பேரன்புக்கும், உயிர்கள் பால் கொண்ட பெருங்கருணைக்கும், பெருந்துன்பம் வரும் என்று அறிந்த பின்னும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் மனத்திண்மைக்கும் அசுரகுலச் சக்கரவர்த்தியான மகாபலிக்கு அடுத்து வரும் சாவர்ணி மனுவந்திரத்திலே இந்திரபதவியையும் அளித்தருளினார். 


நீதி:


 இக்கதையில், என்ன இது மகாவிஷ்ணுவே இப்படி வஞ்சகமாக உருமாறி வந்து இந்திரலோகத்தை பலிச்சக்கரவர்த்தியிடமிருந்து பறிக்கலாமா? இது சரியா என்று எண்ணலாம். 


மகாபலியின் பெருமையை நம் அனைவருக்கும் எடுத்துக் காட்டவே இந்த திருவவதாரம். நாம் இறைவனை தேடி, ஓடி ஓடிச் சென்று சரணாகதி அடைய முயல்வோம். ஆனால், இறைவன் தானே அவதாரம் புரிந்து வந்து தன் திருவடியை ஒருவரிடத்து அளிக்க வந்துள்ளார் என்றால் இப்பெரும் பேறு மகாபலியன்றி வேறு எவருக்கும் கிட்டியதில்லை. 


பரம்பொருளான இறைவன், நம்மிடம் வேண்டுவது சொத்தையோ, செல்வத்தையோ அல்ல. பூரண சரணாகதி. தன்னை இறைவனிடம் ஒப்புவிப்பதையே அவர் எதிர்பார்க்கிறார். குலம், கோத்திரம் போன்ற பிறவி சாயங்களைத் தாண்டி, தூய உள்ளமும், பூரண சரணாகதியுமுமே ஒருவருக்கு முக்தியை அளிக்கவல்லது. அத்தகையோரின் உள்ளத்து மலர்மிசை இறைவன் ஏகுவான்.


பொருளுரை:


இந்திரலோகம் உட்பட மூவுலகத்தையும் வென்று, தானத்திலும் தவத்திலும் சிறந்து பெரும் புகழ் பெற்ற மாவலிச் சக்கரவர்த்தியின் வேள்வியில் அந்தண சிறுவனாய் வாமனாவதாரம் புரிந்து சென்று, மாவலியிடம் தான் கேட்ட மூன்றடி நிலத்தைத் தானமளிக்க முயன்ற மாவலிச் சக்கரவர்த்தியை எச்சரித்து, பின்னும் வண்டாக உருமாறி கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துத் தானத்தைத் தடுக்க முயன்ற அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் கண்ணை, வலக்கரத்திலிருந்த தர்ப்பையால் கிளறிய சக்கரக்கையனே என்னை அணைத்துக் கொள்ள வருவாயாக! இடக்கரத்தில் திருச்சங்கைத் தரித்தவனே என்னை அணைத்துக் கொள்ள வருவாயாக!