Wednesday, April 9, 2008

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்

பிறந்த காலம் - கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 - 780)
இடம் - திருவஞ்சிக்களம்(கேரளம், திருச்சூர் அருகில்)
ஆண்டு - பிரபவ
மாதம் - மாசி
திருநட்சத்திரம் - புனர்பூசம்(புனர்வசு, வெள்ளிக்கிழமை)
அம்சம் - கௌஸ்தூபம்(பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்)


குலசேகராழ்வார் இவரை ஆழ்வார் என்று அழைப்பதைவிட குலசேகர பெருமாள் என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது ஆகும்.

'சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்' என்னும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவனும் அவதரித்துள்ளார். யார் அவர்? நம் குலசேகரப் பெருமாள் தான்!

நம் குலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அவர் சிறுக்குழந்தையாய் இருந்த போது.....

என்ன! இவர் வாழ்விலும் ஏதேனும் அதிசயமா...?

ஆமாம்! என்ன அதிசயம்... !அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய் இருந்தோமா, மண்ணைக் கைப்பற்றினோமா.... என்று வாழாமல், அந்த மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர் அல்லவா இவர்! அதுவே மிகப்பெரிய அதிசயம் தானே!

பாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநாடு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.

எல்லா அரசர்களையும் போல் எல்லைக் கைப்பற்றலிலே இவர் வாழ்வும் கழிந்தது. இவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீ ரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரைக் கண்டு பொறாமை கொள்ளாத மன்னர்களே இல்லை எனலாம். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.

மன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.

எம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர். இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார். அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார். அப்பப்பா, எத்துனை பக்தி! எவ்வளவு தூரம் அவர் அந்தக்கதைகளில் ஆழ்ந்திருந்தால் இவற்றை எல்லாம் செய்து இருப்பார் என்று பாருங்கள்.


அவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.


மன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர். என்னவென்றால்,


ஒருநாள், அவர் அணுதினமும் பூசித்து, வணங்கி வழிபடும் ஸ்ரீ ராம பிரானின் திருவுருவ சிலையில் இருந்த நவரத்தின மாலை ஒன்று காணாமல் போய்விட்டது. அதை, விஷ்ணு பக்தர்கள் தான் எடுத்து விட்டனர் என்று, அவரது அமைச்சர் அவரிடம் உரைத்தார்.


இதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார். உடனே அவர், கொடிய விடமுள்ள பாம்பு ஒன்றை ஒரு குடத்திலிடச்சொல்லினார். பின், "எம்பிரான் பக்தர்கள் அந்த மாலையை எடுத்திருந்தால், நானும் அப்பக்தர்களில் ஒருவன், ஆதலால் இக்குடத்திலுள்ள பாம்புத் தன்னைத் தீண்டட்டும்" என்று கூறிக் குடத்தினுள் தன் கையை விட்டார். ஆனால், அப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை.


அப்பொழுது, அவரது அமைச்சர், அந்த மாலையை எடுத்து மறைத்து வைத்தது, நாங்கள்தான்... இராமபிரானின் மீதான உங்கள் பக்தியை நீக்கவே அவ்வாறு செய்தோமென்று கூறி, அந்த மாலையைத் திருப்பிக் கொடுத்து, தம் தவற்றிற்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார்.


இதனால் மனம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடத்து ஒப்படைத்து விட்டு, இராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.

இராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதாலோ என்னவோ, இவரும் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார். குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்டச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.

குலசேகரப் பெருமாள் பாடிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக் கொண்டது ஆகும். அது மட்டுமில்லாமல், அவர் கண்ணபிரானுக்காக, வட மொழியில் முகுந்த மாலை என்னும் பக்திப்பாடல் ஒன்றும் எழுதியுள்ளார். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, வடமொழியில பாட்டு எழுதின ஒரே ஆழ்வார் இவர்தான். ;-))

குலசேகர ஆழ்வார், சென்று வணங்கிய திருத்தலங்கள் எவைஎவை என்றால், திருவரங்கம்,
திருவேங்கடம்,
திருவித்துவக்கோடு,
திருஅயோத்தி,
திருக்கண்ணபுரம்,
திருசித்திரக்கூடம்.

திருச்சித்திரக்கூடம் என்பது எந்த ஊர்னு கேக்குறீங்களா? அது வேற எந்த ஊரும் இல்லை, நம்ம தில்லை நடராச பெருமான் வீற்றிருக்கும் திருச்சிதம்பரமேதான். ;-))

ஓம் நமோ நாராயணாய நம!!
குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

Friday, April 4, 2008

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்

நம் மதுரகவியாழ்வார் அவதரித்த காலம் - கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 745 - 805)
இடம் - திருக்கோலூர்
ஆண்டு - ஈசுவர
மாதம் - சித்திரை
நட்சத்திரம் - சித்திரை(வெள்ளிக் கிழமை)
அம்சம் - வினதை (கருடன்)

நம் மதுரகவி ஆழ்வார் யாரென்று உங்களுக்கெல்லாம் நினைவிருக்குமென்று எண்ணுகிறேன். நம்மாழ்வாரின் மாணவன் தான் நம் மதுரகவியாழ்வார்.

'வைத்த மாநிதி பெருமாள்' வீற்றிருக்கும் திருக்கோலூர் என்னும் ஊரில், எந்நாளும், எப்பொழுதும் எம்பெருமானின் திருநாமத்தையே உச்சரித்து, அவர்பாலும், அவர்தம் அடியவர்பாலும் அன்பு செலுத்தும் அந்தணர் குலம் தோன்றிய மாணிக்கமே மதுரகவியாழ்வார் ஆவார்.

இவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர். ஆனால், நிறைகுடம் ததும்பாது என்பதற்கேற்ப, நிரம்ப கற்ற இவருக்கு, நிலையற்ற இப்பூலோக வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் பற்றிக் கொள்ள புனித யாத்திரை மேற்கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.

கயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று ஸ்ரீமன் நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யா வை அடைந்தார். அங்கு அவர்தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்ட போதுதான், நம்மாழ்வாரிடம் அவரை அழைத்துச் சென்ற அந்த பேரொளியைக் கண்டார்.

அதன்பின் நடந்தவை உங்களுக்கே தெரியும். ஆமாம், நம் நம்மாழ்வாரை பார்க்க வைத்தது, அவரை பேச வைத்து அவரிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரத்தை திருவாய்மொழியாய் பெற்று, அவற்றிற்கு இனிய பண் அமைத்து, பாடியது எல்லாம் நம் மதுரகவியாழ்வாரே ஆவார்.

இவர் நம்மாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவர்மேல், கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் 11 பாக்களைக் கொண்ட பாடல் ஒன்றைப் பாடினார். இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பாடல்தான், அந்த 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் என்னும் பொக்கிஷத்திற்கான திறவுகோல் ஆகும். இத்திறவுகோல் இல்லாவிடில், நமக்கு அந்த மகா பெரிய பொக்கிஷமே கிடைச்சிருக்காது, அது எப்படிங்கறத பின்னால சொல்றேன்... 'பின்'னால இல்ல... அப்பாலிக்கா சொல்றேன். ;-)

சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். 'உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று இருந்தவர் நம்மாழ்வார். ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார். மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம். அவர் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று துவங்கும் 11 பாசுரங்களைத் தன் குருமேல் அந்தாதி முறையில் பாடினார். 4000 திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாரைப் பற்றி அமைந்த இந்த 11 பாடல்களும் இறைவனைக் குறிப்பவை அல்ல.

நம்மாழ்வாரை நாம் அழைக்கும், 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே! அதோடு 'அளவில்லா ஞானத்து ஆசிரியர்' என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.

மதுரகவியாழ்வார், நமக்களித்தப் பேரருள் இத்துடன் முடிந்துவிடவில்லை. அவர் இன்னும் பலவும் செய்தருளியிருக்கிறார். நமக்கு நம்மாழ்வாரப் பத்தி ஓரளவுக்குத் தெரியும், ஆனா அவர் எப்படி இருப்பார் ன்னு யாருக்காவது தெரியுமா? அந்த பெரும் பாக்கியத்த நமக்கு அளித்தவர் மதுரகவியாழ்வார் தான்.

எப்படின்னு கேக்குறீங்களா? அதாவது, தம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அணுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார். ஆனால், என்ன நடந்தது என்றால், அந்த விக்ரகம் வேறு ஒருவருடையது. அப்பொழுது, நம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, 'இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரின்(பவிஷ்யத் ஆச்சார்யார்)விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் தனியாகப் புது விக்ரகம் செய்தார். இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.

அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.

எனக்கு ஒரு சந்தேகம், மதுரகவி என்னும் பெயர் மதுரகவியாழ்வாரின் உண்மையான பெயரா? இல்லை வழங்குப் பெயரா? நான்கு வகை(ஆசுகவி, சித்திர கவி, விஸ்தார கவி, மதுரகவி)கவிகளில் ஒன்றுதான் மதுரகவி! அதான் ஒரு சின்ன டவுட்.

அப்படின்னா விகடகவி ன்னா என்னான்னெல்லாம், குறுக்கால கேட்கப்படாது! விகடகவி என்பது கவிஞரைக் குறிக்கும் சொல் அல்ல. அது நகைச்சுவையாய் பேசி, வினையாடுபவரைக் கூட குறிக்கும்.... ;-)

ஓம் நமோ நாராயணாய நம!!
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!

Thursday, April 3, 2008

நம்மாழ்வார்

நம்மாழ்வார்:
அடுத்ததாக நாம பார்க்கப் போறது, நம்ம ஆழ்வார்.
யார்ரா அது நம்ம ஆழ்வார்?

அவர்தாங்க நம்மாழ்வார்.
அது தெரியுது. யாரு அந்த நம்ம ஆழ்வார்?

நான் சொன்னது நம்ம ஆழ்வார் தான், ஆனா நம்மாழ்வார்.
ஏன்டா, காலங்காத்தாலே வந்து கழுத்தறுக்குற. சொல்ல வந்தத ஒழுங்கா சொல்லு.

நான் ஒழுங்காத்தான் சொல்றேன். நம்மாழ்வார்.... நம்மாழ்வார்... நம்மாழ்வார்.... இப்பவாவது புரியுதா?
ம்..... புரிஞ்சு போச்சு, எனக்கு புரிஞ்சு போச்சு... வேதம் தமிழ் செய்த மாறன், சடகோபன் அப்படின்னு ல்லாம் சொல்வாங்களே, அவரைத்தானே சொன்னேன்.

அப்பாடா! ஆமாம் பா, ஆமாம். அவரேதான்...
ம்.. ம்... சொல்லு கேப்போம்!

நம்மாழ்வார்

பிறந்த காலம் - 7 ம் நூற்றாண்டு(765 - 800)
ஆண்டு - பிரமதி
மாதம் - வைகாசி
நட்சத்திரம் - விசாகம் (வெள்ளிக் கிழமை)
அம்சம் - சேணைத்தலைவர் (விஸ்வக் சேணர்)

நம்மாழ்வார், ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டாருப்பா. இல்லாங்காட்டி, அவர் த்வாபர யுகத்துல பிறந்துருப்பார். நம்மாளு கிருஷ்ணன நேர்லயே பாத்து, 'ஹாய்' சொல்லியிருப்பார். அது சரி, அந்த கிருஷ்ணனே இங்க வந்து ஆழ்வாரா பிறக்கும் போது, எப்படி த்வாபர யுகத்திலயே மறுபடியும் பிறக்க முடியும்! ;-)

நம்மாழ்வார், பிறந்தது கலியுகத்தின் ஆரம்ப காலத்தில். கரியர், உடைய நங்கையார் என்போரது திருமகவாய், பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில், அதாவது திருக்குருகூரில் பிறந்தார். இவரது பிறப்பே, ஒரு அதிசய பிறப்பாகும்.

ஆண்டவன் இருக்குற இடத்துல அதிசயம் ந்டக்காம இருந்தாதான் அதிசயம். அப்படி இருக்கும் போது, ஆண்டவனின் அவதாரங்களாக, அவதரித்த ஆழ்வார்கள் வாழ்வில் அதிசயம் நடப்பது என்பது சகஜம் தானே.

நம்மாழ்வார் வாழ்க்கையில் என்ன அதிசயம் நடந்தது ன்னா, அவர் பிறந்த கணம் முதல், ஒருமுறை கூட, கண்ணைத்திறக்கவும் இல்லை, உணவும் உண்ணவில்லை, வாய் திறந்த அழக்கூட இல்லையாம். சமத்துப் பையன் இல்ல... ;-)

இதனால் கலக்கமுற்ற அவர்தம் பெற்றோர், அவரை திருக்குருகூரில் வீற்றிருக்கும், ஆதிநாதர் திருக்கோயிலிலுள்ள, இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டனர். இயல்பான நிலையிலிருந்து மாறி பிறந்ததனால், அக்குழந்தையை மாறன் என்று அழைத்தனர்.

அதன்பிறகு, அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.

அந்த புளியமரம் யாருன்னு யோசிச்சீங்களா? அம்மரம் வேறு யாருமில்லை. நம் ஆதிசேஷனேதான்.

பதினாறு ஆண்டு காலம், நம்மாழ்வார் இந்த மோன நிலையிலேயே தான் இருந்தார்.

அதன்பிறகு, வட நாட்டில், அதாவது அயோத்தியில், மதுர கவியாழ்வார் - இவரும் நம் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரே! தங்கி இருக்கையில் ஒரு புது விதமான பேரொளியைக் கண்டார். அவ்வொளி, தென்திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து, தென்னகத்தை நோக்கிப் பயணித்தார்.

அவர், தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்திலுள்ள கோவிலிலிருந்து அந்த ஒளி வருகிறது என்று எண்ணி, மதுரகவியாழ்வார், திருவரங்கத்தை அடைந்தார். ஆனால், அந்த ஒளி மேலும் தென்திசையில் இருந்து வந்தது. எனவே, அவ்வொளி வந்த திசையை நோக்கிச் சென்ற போது, அது நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது.

வயோதிகரான மதுர கவியாழ்வார், அச்சிறுவனைப் பார்த்த மாத்திரத்திலே, அவனை இறைவனின் அவதாரமாகக் கண்டுவிட்டார். அவர், நம்மாழ்வாரைப் பேச வைப்பதற்காக, அவரிடத்தில் இவர் ஒரு புதிர் போட்டார்.

அந்த புதிர் என்னவென்றால்,

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?


இக்கேள்வியைக் கேட்டவுடன், ஞானக் கொழுந்தான நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை பகன்றார்.

அவருரைத்த பதிலாவது,

அதைத் தின்று; அங்கே கிடக்கும்.

அதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்.

என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

இதுவே, அந்த புதிரில் பொதிந்திருந்த பொருள். பாத்தீங்களா, எவ்வளவு அழகா, ரெண்டே வார்த்தையில, தெள்ளத் தெளிவா தெளிய வெச்சுட்டார், நம்மாழ்வார். அதுக்காத்தான் ஞானம் வேணும் கிறது.

ம்... சரி நம்ம சங்கதிக்கு வருவோம். இந்த பதில கேட்டதும், நம்ம மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கிப் போனது. அப்பதிலால் ஈர்க்கப்பட்ட மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கி, 'என்னைத் தங்கள் சீடனாக ஏற்று, இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க அருள் புரிவாய், ஐயனே' என்று வேண்டினார்.

நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். அது மட்டுமல்லாது, நம்மாழ்வார் பாடும் பாசுரங்களை எல்லாம் ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே. ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

அது சரி, நம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே போனதில்லை. பின்ன எப்படி பாசுரங்கள் ல்லாம் பாடினாரு? பாசுரம் ங்கறது, எம்பெருமானின் 108 திவ்ய தேசங்கள பத்தினதாச்சே!

எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன? நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின. என்ன ஒரு மகிமை பாருங்கள்!

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,

திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும. அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.

இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.

நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து, நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

ஓம் நமோ நாராயணாய நம!!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!!