Monday, July 28, 2008

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்:

பிறந்த காலம் - 8 ம் நூற்றாண்டு
பிறந்த ஆண்டு - நள ஆண்டு
பிறந்த மாதம் - கார்த்திகை

திருநட்சத்திரம் - கார்த்திகை
திதி - பௌர்ணமி (வியாழக்கிழமை)

அம்சம் - சாரங்கம் (வில்)


சோழப் பேரரசில் உள்ள திருவல்லிநாடு என்னும் நகருக்கு அருகில் உள்ள திருக்குறையலூர் என்னும் கிராமத்தில், ஆலிநாடார் என்னும் சேணைத்தலைவர், வல்லித்திரு என்னும் தம்பதியரிடத்து உதித்தத் தெய்வப்பிறவியே திருமங்கையாழ்வார் ஆவார். அவரது இயற்பெயர் நீலன் ஆகும்.

சிறுவயதிலேயே வில், வாள், வேல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து வீரக்கலைகளிலும் சிறந்து விளங்கினார். வீரத்தோடு வேதங்களும், முறையான கல்வியும் கற்றுத் தேர்ந்தார்.

அவரது வீரத்திற்கும் விவேகத்திற்கும் பரிசாக சோழ மன்னர் திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சிற்றரசை நீலருக்குப் பரிசாக வழங்கினார்.

எதிரிகளுக்கு இவர் காலனாக இருந்ததால் இவரை காலன் என்று அழைத்தனர். சோழ அரசில் பர என்னும் அடைமொழியை பெயருக்கு முன் வைக்கும் முறையால் (வேங்கையின் மைந்தன் என்னும் நூலில் நீங்கள் படித்திருக்கலாம்...பர மற்றும் உடையவர் என்னும் பட்டப்பெயர் மன்னர்களின் பெயருக்கு முன் ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரும் என்று) இவர் பரகாலன் என்னும் பெயருடன் சிற்றரசராக முடிசூட்டப்பட்டார்.

ஒரு முறை, நீலருக்கு.... சுமங்கலி என்னும் தேவகன்னிகையைக் காண நேரிட்டது. என்னாது, தேவகன்னிகையை ஒரு மனிதன் காண்பதா???

அட ஆமாம்பா, மெய்யாலுமேதான், சுமங்கலி என்னும் தேவகன்னிகை கபிலமுனி என்னும் முனிவரின் சாபத்தினால் சாதாரண மானுடப்பெண்ணாகப் பூலோகத்திலே பிறந்து குமுத வல்லி என்னும் பெயர் கொண்டு வளர்ந்தார். தன் பிறவியை பற்றி முழுதும் அறிந்த அந்தப் பெண், தன் தந்தையிடம், மணந்தாள் ஆலிநாடனையே மணப்பேன், என்று கூற, அவள் தந்தையும் அதற்கு சம்மதித்தார்.

விதியும் வந்து விளையாட,
மதியும் அதன் வழியில் தள்ளாட,
காலத்தின் கட்டுப்பாட்டில் கிடக்கும் மானுடர்களான நீலரும், குமுதவல்லியும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் காண நேர்ந்தது.

மங்கையர் கோனின் மனதைத் திருடிய அந்த தேவகன்னிகையைக் கண்ட மாத்திரத்திலேயே, நீலருக்கு அவள் மேல் காதல் அலர்ந்தது.

கண்டதும் காதல்; அவள்
கைப் பிடிக்கவும் ஆவல்;
கண்களெல்லாம் அவளின் தேடல்;
உள்ளமோ அவளிடமே ஓடல்...

தன் விருப்பத்தை அப்பெண்ணிடம் வெளிப்படுத்திய பொழுது, குமுதவல்லியார், அவருக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அதாவது,

1. அவர் பஞ்சசம்ஸ்காரம் செய்துக் கொள்ள வேண்டும்
2. ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பெருமாள் பக்தர்களுக்கு அமுது படைக்க வேண்டும், ஓராண்டு கால அளவிற்கு. அவர்கள் பாதம் கழுவிய நீரால் நம் தலை கழுவ வேண்டும்.

இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார். அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்...

எப்படி நிறைவு செய்தார்??

பஞ்சசம்ஸ்காரம் என்பதை நல்வினை சடங்குகள் என்று தமிழில் சொல்லுவர். அதாவது,

1. தாப சம்ஸ்காரம் - (தாபம் என்றால் சூடு என்று பொருள்) பெருமாளின் திருஅடையாளங்களாகிய சங்கு, சக்கரத்தில், வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கையும் நிரந்தரமாகத் தரிப்பது.

2. புண்ட்ர சம்ஸ்காரம் - (திருமண் காப்புத் தரித்தல்) இறைவனின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, பன்னிரு இடங்களில் திருமண் அணிதல். அதாவது,

கேசவாய நம என்று கூறி நெற்றியில் திருமண் அணிய வேண்டும். இதேபோல், நாராயணாய நம என்று நாபியிலும் மாதவாய நம என்று மார்பிலும் கோவிந்தாய நம என்று நெஞ்சிலும் விஷ்ணுவே நம என்று வலது மார்பிலும் மதுசூதணாய நம என்று வலது புயத்திலும் த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும் வாமனாய நம என்று இடது நாபியிலும் ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும் ரிஷிகேசாய நம என்று இடது தோளிலும் பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும் தாமோதராய நம என்று பிடரியிலும் திருமண் தரிக்க வேண்டும்.
3. நாம சம்ஸ்காரம் - (நாமம் என்றால் பெயர்) அதாவது, பெருமாளின் பெயர் அல்லது அவரது அடியவர்களான ஆசார்யர்களின் பெயர்கள் ஏதாவது ஒன்றை வைத்து, அப்பெயரின் முடிவில் தாசன், அடியவன் என்று வருமாறு குருவால் பெயர் வைக்கப் பெறுதல்.

4. மந்த்ர சம்ஸ்காரம் - (மந்த்ரம் - மந்திரம்) எட்டெழுத்துகளுடைய திருமந்திரத்தையும், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை அதன் மறைபொருளோடு குருவின் மூலம், காதில் உபதேசமாகப் பெறுதல்.

5. யாக சம்ஸ்காரம் - (யாகம் - பூசை, ஆராதணை) திருவாராதணை மற்றும் பூசை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்.

இவை ஐந்தனையும் குருவிடமிருந்து (ஆசார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும். பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட ஒருவர் வேத முறைப்படி வைணவராகிறார். இதன் மூலம் அவரது உடல், மனம், சொல், சிந்தனை அனைத்திலும் வைணவநெறிக்கான நல்வினைகளும், சிந்தனைகளும் அவர் மனத்தில் பதிய ஆரம்பிக்கும்.

அது சரி, நீலர் இந்த பஞ்ச சம்ஸ்காரத்தை எந்த குருவிடமிருந்து பெற்றுக் கொண்டார்??? நீலருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்த அந்த குரு யார்??? யார்?? யார்????

யார் அந்த குரு தெரியுமா???
அவர்தான் குருவுக்கெல்லாம் குருவானவர். குற்றமில்லா குணத்தவர். குறையொன்றும் வைக்கா குறையற்றவர்... எம்பெருமான் திருநறையூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்....

இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர், நம்ம நீலர்தான்.

2. கட்டியவள் பேச்சை மீறலாம், காதலியின் பேச்சை.... அய்யோ! அபச்சாரம், அபச்சாரம்.... மீறவேப் படாது.....

இரண்டாவது வேண்டுகோளையும் இளைக்காமல் ஏற்றுக் கொண்டு, அதன்படி செய்தார்.

நாம என்ன சொன்னாலும் இவர் கேட்குறாருப்பா, இவருதான் உலகத்திலேயே ரொம்ப ரொம்ப நல்லவரு.... நல்லவரு மட்டுமா? நல்லவர், வல்லவர், என் உள்ளக் கள்ளவர் என்று... நீலர், குமுதவல்லியின் திருமணம் இனிதே நடந்தேறியது.

இரண்டாவது கடனை நிறைவேற்றும் போது, அவர் சளைக்காவிட்டாலும், அவரிடமிருந்த செல்வம் இளைத்துவிட்டது. அவரிடம் இருந்த செல்வம் குறைந்ததால், அவரால் கப்பம் செலுத்த இயலவில்லை. அதனால் கோபம் கொண்ட சோழப் பேரரசன் அவரது அரசைக் கைப்பற்றிக் கொண்டார். ஆனால், அவர் அதற்காகக் கவலைப் படவில்லை.

எப்படியாவது அடியவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதிலேயே திண்மையான எண்ணம் கொண்டார். ஆனால், அவர் கையில் தான் பொருள் இல்லையே, பின் வெறும் எண்ணம் மட்டும் எப்படி நிறைவேறும்.... கானல் நீரில் தாகம் எவ்வாறு தீரும்??? வெறுங்கையில் எப்படி முழம் போட முடியும்....? எப்படி? எப்படி?? ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த, ஆழ்ந்த சிந்தனை.....அதன் இறுதியிலே ஒரு ஆச்சரியமான முடிவு...

அதுதான், 'நாலு பேருக்கு நல்லது ன்னா எதுவுமே தப்பில்ல' அப்படின்னு, அவர் தன் முயற்சிக்காக எந்த செயலையும் செய்வதற்குத் துணிந்தார்.

அதாவது, பொருட்தேவைக்காக வழிப்பறி செய்ய ஆரம்பித்தார். அது எப்படிங்க, ஒரு வைணவர், அதுவும் இறைவனிடமே பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டவர், அவர் எப்படி வழிப்பறியெல்லாம் செய்வார் என்று நீங்க கேட்கறது எனக்குப் புரியுது...
காரணமின்றி காரியமில்லை!! ஆனா, அவர் சிந்தை முழுதும் முகுந்தனின் அடியவர்களுக்கு அன்னமிடுவதிலேயே மூழ்கி இருந்தது. என்ன காரியம் செய்தாகிலும், எம்பிரானின் அடியவர்களுக்கு அழிபசி தீர்ப்பதில்தான் கவனம் முழுதும் இருந்தபடியால், அவர் செய்வது சரியா? முறையா? என்று கூட சிந்தை செய்யவில்லை.

ஆனா, நீங்க என்ன சொன்னாலும் தப்பு தப்புதான்?? வழிப்பறிங்கறது எவ்வளவு பெரிய தப்பு.... விதிதான் அவர இப்படி எல்லாம் செய்ய வைக்குதுன்னா, விதியை விதிக்கும் வித்தகன் இதை எல்லாம் பொறுமையா வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தார்?? அவராவது வந்து தன் அடியவர்களுக்கு ஒருவர் தவறான வழியில் அன்னமிடுகிறாரே, என்று அவருக்கு உதவலாம் இல்லையா???

ஆமாம் உதவலாம்...

என்ன ஆமாம் உதவலாம்..??? இறைவன் வந்தாரா? தடம் மாறிய தன்யனைக் காப்பாற்றினாரா?

அமைதியா இருப்பா... ஆண்டவன் வருவான்... அருளுவான்.... அதற்கான காலம் நேரம் வாய்க்க வேண்டாமா???

பாட்டும் அவனே... பாவமும் அவனே..... பாவமும் அவனே... பாவத்திற்கு சம்பளமும் அவனே.... புண்ணியமும் அவனே.... புண்ணும் அவனே... புண்ணுக்கு மருந்தும் அவனே... மருந்தும் அவனே.... விருந்தும் அவனே... எல்லாமும் அவனே... எல்லாவற்றிலும் அவனே.... வினைக்கு வித்திடுபவனும் அவனே.... வினையும் அவனே.... வினையின் விளைவும் அவனே... வினையால் வீழ்த்துபவனும் அவனே... வினையை வீழ்த்துபவனும் அவனே....

அத்தகையவனுக்குத் தெரியாதா?? எதை, எக்காலம் வரைக்கும் செய்ய வைக்க வேண்டும் என்று??? எங்கு முடிச்சு போட வேண்டும், எந்த இடத்தில் முடிச்சியை அவிழ்க்க வேண்டும் என்று...

முடிச்சியை அவிழ்க்கும் காலம் வந்தது... கருணை வெள்ளம் பொங்க ஆரம்பித்தது; இறைவனும் இறைவியும் மணக்கோலம்பூண்டு, திருமங்கையிலுள்ள திருமணங்கொல்லை என்னும் கானகத்தின் வழியே, திருமண ஊர்வலமாய், கல்யாண கானங்கள் இசைக்க சென்று கொண்டிருந்தனர்.

ஏன் அவங்கல்லாம் அந்த பக்கமா போகனும்???

ஏன்னா, பரகாலனும் அவனது, பட்டாளங்களும் பதுங்கியிருக்கும் பகுதி அது... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு தப்பாகலாம், கமலக்கண்ணன் போட்ட கணக்கு தப்பாகுமா??

பரகாலனும் அவனது கூட்டத்தினரும், திருமணக் கூட்டத்தை வழிமறித்து, அங்கிருந்த அனைவரின் பொருட்களையும் கைப்பற்றினர், மணமக்களின் உடைமைகள் உட்பட... எல்லாமும் கவர்ந்த பின்பும், கள்ளழகரின் காலில் ஒரு மெட்டி மட்டும் மீதம் இருந்தது... மீதம் இருந்த மெட்டியையும் கழற்ற முயன்றார், நீலர். எவ்வளவு முயன்றும் இயலவில்லை அந்த காலனால், பர காலனால்.

எவ்வளவு முயன்றும் அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது. சரியென்று, அவர்கள் அந்த மெட்டியை விட்டு விட்டு, மற்ற உடைமை கள் அனைத்தையும் மூட்டையில் கட்டித் தூக்க முயன்றனர். ஆனால், அந்த முயற்சியும் வீணாய் போனது... எவ்வளவு முயன்றும் அவர்களால் முடியவில்லை. ஆனால் முடிந்தது... பரகாலனின், பாவகாலம் முடிந்தது.

அதாவது, முடிவடையும் நேரம் வந்தது... உடனே கோபம் கொண்ட பரகாலன், 'ஏய்! நீ ஏதோ மந்திரம் செய்து விட்டாய் அதனால் தான், என்னால் கழற்றவும் இயலவில்லை, கவர்ந்ததைக் கொள்ளவும் முடியவில்லை. என்ன மாயம் செய்தாய், என்ன மந்திரம் செய்தாய், உண்மையை சொல்' என்று ஆத்திரத்துடன் கல்யாண மாப்பிள்ளையிடம் கத்தியை நீட்டி மிரட்டினார்.

உடனே, மாதவனின், மந்தகாசம் சிந்தும் முகத்தில் தவழ்ந்த மந்திர புன்னகையுடன், நம் கலியா! என்னும் பெயரிட்டு, 'நம்கலியா, வா, என் அருகில் வா, உனக்கு நான் அந்த மந்திரத்தை சொல்கிறேன்,' என்று அருகில் அழைத்து, நம் கலியனின் காதிலே,

தீயவற்றிற்கு எட்டாத, தின்னத் தின்னத் தெவிட்டாத தேனினும் இனியதாய, நூற்றெட்டு திருத்தலத்தின் தலைவனின், பாவங்களனைத்தையும் வெட்டுபவனின் பெயர் கொண்ட அந்த எட்டெழுத்து மந்திரத்தை நம்கலியனின் காதிலே பக்குவமாய் "ஓம் நமோ நாராயணா" என்று ஓத நம் கலியனின் கர்மங்கள் அனைத்தும் கழிந்தன.

எம்பெருமான், பெரிய பிராட்டியுடன் கருட வாகனத்தில் இருந்து அவருக்கு அருள் பாலித்துவிட்டு மறைந்தார். இல்லை, இல்லை... நம் கலியன் அந்த இறைவனைத் தனக்குள்ளே ஆழ்த்திக் கொண்டார், தானும் அந்த இறைவனுக்குள்ளே ஆழ்ந்தார்.

அந்த கணமே, நம் கலியனுக்குள்ளே, கட்டுண்டு கிடந்த கருணை வெள்ளம் கரையை உடைத்து அகிலமெல்லாம் பாய ஆரம்பித்தது. இறைவன் மீதான அன்பும், பக்தியும் மடைதிறந்த வெள்ளமென பாசுரங்களாய் பெருக்கெடுத்தது. ஆழ்வாரின் மீதான ஆண்டவனின் அருள், ஆழ்வாரின் மனத்திற்குள்ளிருந்து உடைந்து கண் வழியே கண்ணீராய், திருவாய் வழியே திவ்யமொழிகளாய் வெளிப்பட்டது.

அதுமுதல், இறைவன் இருக்கும் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று அவரது அருள்கடலிலே ஆழ்ந்து, ஆழமான கருத்துடைய பாடல்களைப் பாடிப் பாடி பரவசம் கொண்டார்.

எப்படி, வில்லும் வாளும் ஏந்திய வீரனின் வாயில் பக்திமயம் பொங்கும் கானங்களா??? ஆமாம் பா ஆமாம்.... ஏன் சந்தேகமா??? அவர் இன்னும் பழைய பரகாலன் இல்ல, புதிய நம் கலியன், திருமங்கையாழ்வார்... அவர் பாடாமல், பின் எவரால் பாட இயலும்?? அதுவும், அவர் பாடின பாடல்கள் ஒன்றா? இரண்டா??

திருமங்கையாழ்வாரின் அருள் ஆக்கங்கள்:

பெரிய திருமொழி 1084
குறுந்தாண்டகம் 20
நெடுந்தாண்டகம் 30
திருவெழுக்கூற்றிருக்கை 1
சிறிய திருமடல் 40
பெரிய திருமடல் 78.

இப்போ புரியுதுங்களா?? ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... ஆம், நன்மைகள் ஆவதும் பெண்ணாலே, தீமைகள் அழிவதும் பெண்ணாலே.... துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்தான்.

நாற்கவி:

1. ஆசுகவி - உடனுக்குடன் பாடுவது
2. சித்திரக்கவி - பாடலும், பாடலின் பொருளும் சித்திர அலங்காரமாய் அமைய பாடுவது
3. விஸ்த்தாரக்கவி - விஸ்த்தாரமாக, விரிவாகப் பாடுவது
4. மதுரகவி - இசை நயத்துடன் பாடுவது

இந்த நான்கு வகை கவிகளிலும், திருமங்கையாழ்வார் திறமையானவராக இருந்ததால், அவரைப் பாராட்டி திருஞான சம்பந்தர் அவர்கள் அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து தன் வேலையும் அவருக்குப் பரிசாக அளித்தார்.

ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

Thursday, July 17, 2008

திருப்பாணாழ்வார்.

திருப்பாணாழ்வார்:

காலம் - 7 ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)
ஆண்டு - பிரசோத்பதி (தவறென்றால் திருத்தவும்)
மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - ரோகிணி
ஊர் - உறையூர்.
அம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இருக்கும் மச்சம்)

திருப்பாணாழ்வார் பிறப்பு பற்றிய முழுமையான தகவல்கள் அறியப்படவில்லை. இவர் உறையூருக்கு அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த, பாணர் என்னும் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்த, ஒரு தம்பதியரால் வளர்க்கப்பட்டார்.

பாணர் என்னும் இனம் உண்மையில் தீண்டத்தகாத இனம் அல்ல. அவர்கள் இறைவன் பேரிலும், மன்னனைப் பற்றியும் பாண் என்னும் இசைக்கருவியினால் இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அத்தகைய இனத்தில் வளர்ந்த நம் திருப்பாணாழ்வாருக்கு பாடல்கள் பாட பயிற்சியும் வேண்டுமோ??

இவர் இறைவனுடன் இரண்டறக் கலந்த அந்த சுவையான தகவலை அறிவோம் வாருங்கள்....

திவ்ய தேசங்களில் தலையாயதாக விளங்கும், திருவரங்கம் காவேரித் தாயின் கரையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில், காவிரியின் மறுகரைக்கு, அதாவது அரங்கன் அருள் பாலிக்கும் திருத்தலத்திற்கு, பாணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை.

அதனால், தினமும் மறுகரையில் நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார்.

ஒருநாள் வழக்கம் போல் ஆழ்வார் தன்னை மறந்து அரங்கனை அந்தரங்கமாய் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், திருவரங்கத்தின் அர்ச்சகர் இலோக சாரங்க முனி என்பவர், திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்பொழுது, திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல், சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக பல முறை, அந்த அர்ச்சகர் அவரை விலகச் சொல்லி கடிந்து கொண்டார்.

ஆனால், திருப்பாணாழ்வார் பக்தியில் மூழ்கியிருந்த படியால் அவர், அந்த அர்ச்சகர் அழைத்ததை அறியவில்லை. எனவே, கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார். உடனே, தன் சுயநினைவுக்கு வந்த திருப்பாணாழ்வார் விலகி நின்றார்.

பிறகு, திருமஞ்சன நீரை எடுத்துக் கொண்டு, ஆலயத்திற்குள் நுழைந்த இலோக சாரங்க முனி, அங்கே திருவரங்கனின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்கு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து பதறிய அர்ச்சகர், மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார்.

இரவு முழுதும், தான் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதாய் பரிதவித்த அர்ச்சகரால் உறங்க முடியவில்லை. அன்று இரவே, திருவரங்கப் பெருமாள் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'திருப்பாணாழ்வாரை உன் தோளில், அவர் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் ஏற்றிக் கொண்டு வா! இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்' என்று கூறினார்.

மறுநாள் காலையிலேயே, திருப்பாணாழ்வாரிடம் சென்று, நடந்தவற்றைக் கூறி அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், திருப்பாணாழ்வாரோ, தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். தங்கள் தோளில் நான் செல்வது சரியாகாது' என்று மிகவும் பிடிவாதமாக மறுத்தார். ஆனாலும் அர்ச்சகர் விடாபிடியாக அவரைத் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார். அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர்.

கோயில் கருவறைக்குள் நுழைந்ததும், தன் தோளில் இருந்து ஆழ்வாரை இறக்கிவிட்ட அர்ச்சகர், ஒரு ஓரமாக பணிவாக நின்று நடப்பதை எல்லாம் கவனித்தார். கோயிலில் முதல் முறையாக கால் வைத்த திருப்பாணாழ்வார், கருவறையில் அவர் முதன் முதலில் கண்டது, இறைவனின் திருப்பாதம் தான்.

அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார். அத்துடன் அவர் நின்று விட வில்லை. தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரான்... என்று துவக்கத்தில் வைத்துப் பாடி பரவசமடைந்து, இறுதியில்.....

அவர் திருவழகைக் கண்ட கண்கள் இனி உலகில் வேறு எதையும் காணாது என்று அக்கணமே, திருவரங்கப் பெருமானின் திருவடியில் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

தீண்டத்தகாதவர் என்று ஊராரால் ஒதிக்கவைக்கப்பட்டவரின் பக்திக்கு மெச்சி, எம்பெருமான் அவருக்கு அளித்த சீரும் சிறப்பும் இவ்வுலகில் வேறு எவருக்கும் கிடைக்காத அரிய பாக்கியம். இதிலிருந்து நாம் அறிவது, இறைவனை முழுமனத்துடன் அறிந்தால், அரி அவன் எவருக்கும் அரியவன் அல்ல. எந்த சாதியாயினும், எம்மதமானாலும், எல்லா உயிருக்கும் எவ்வித வேறுபாடுமில்லாமல் அருள் புரிவான் அந்த பரம்பொருள்.

தன்னை முழுமனத்துடன் தருவதே இறைவனுக்கு சிறந்த காணிக்கை, அது யார் வேண்டுமானாலும் தரலாம், வரையறை இல்லாது...

திருப்பாணாழ்வார், பாண் என்னும் இசைக்கருவியில் வல்லவராயும், எப்பொழுதும் பெருமாளைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பதாலும், அவர் பாண் பெருமாள் எனவும்,
இலோக சாரங்க முனியின் தோளில் ஏற்றிச் சென்றதால், முனிவாகனன் எனவும் அழைக்கப்படுகிறார்.

இவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும்.

அமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.
ஓம் நமோ நாராயணாய நம!!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!

Thursday, July 10, 2008

தொண்டரடிபொடி ஆழ்வார்

தொண்டரடிபொடி ஆழ்வார்:

பிறந்த காலம் - 7 ம் நூற்றாண்டு (740 - 800)
ஆண்டு - பிரபவ
மாதம் - மார்கழி
நட்சத்திரம் - கேட்டை
கிழமை - செவ்வாய்
அம்சம் - வைஜெயந்தி வன மாலை
பிறந்த ஊர் - திருமண்டலங்குடி.

தொண்டரடிபொடி ஆழ்வார், திருமண்டலங்குடி என்னும் ஊரில், 'குடுமி சோழியப் பிராமணர்' என்று அழைக்கப்படும் விப்ர இனத்தில் பிறந்தவர். அவர்களது பணியே எம்பெருமானைப் பற்றியப் புகழினைப் பாடுவதே ஆகும்.

தொண்டரடிபொடி ஆழ்வார் பிறந்த 12 ம் நாள், அவர் 'விப்ரநாராயணர்' என்றுப் பெயரிடப்பட்டார். சிறு வயதிலே அவருக்கு முறையான கல்வியும், வேதமும் போதிக்கப்பட்டு, அவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். அவர் பெரியவரானாலும் சிறு வயதினரானாலும் ஒரே மாதிரியாகவே மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தி வந்தார்.


ஒரு நாள், ஸ்ரீமன் நாராயணனின் சேனைத்தலைவரான, விஸ்வக்சேனன் இப்பூவுலகிற்கு வந்து, விப்ர நாராயணர் இம்மண்ணில் பிறந்த நோக்கத்தையும், அவர் முக்தி அடைவதற்கான வழிமுறையையும் எடுத்துக் கூறினார்.

அதைக் கேட்ட பிறகு, விப்ர நாராயணனுக்கு ஸ்ரீ மன் நாராயணனின் மேல் அன்பும் பக்தியும் மிக ஆரம்பித்தது. அவர், இறைவன் மேல் தாம் கொண்ட பக்தியை, எம்பெருமான் குடி கொண்டிருக்கும் எல்லா திருத்தலங்களுக்கும் சென்று அவரின் சேவையைக் கண்ணாரக் காண்பதன் மூலம் வெளிப்படுத்த முடிவு செய்தார். அதன்படி அவர்,

மூவுலகத்திற்கும் முதல்வனானவனின் திருத்தலங்களில் முதன்மையானது, திருவரங்கம். எனவே, திருவரங்கத்தில் இருந்து துவங்கினார். அங்கே,

மூலவர் சந்நிதியில் திருவரங்கப் பெருமான் ஆதிசேஷனின் மேல் சயனத்திருக்கோலத்தில் வீற்றிருக்கும் திருத்தோற்றத்தைக் கண்டு அந்த அழகிலே மயங்கித் தன்னையும், தரணியில் மற்றுமுள்ள யாவற்றையுமே மறந்தார்.

இனி, இவ்வுலகில் இறைவன் அரங்கனைத் தவிர வேறு எதையும் தன் கண்ணாலும் காணாமல், அரங்கன் ஒருவனுக்கேத் தான் அடிமையாய் இருந்து தன் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்குச் சேவை செய்தே கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன் பிறகு, அவர் திருவரங்கத் திருத்தலத்திலேயேத் தங்கி, இறைவனுக்கு நாள்தோறும் புதுமலர்களைக் கொய்து, பெருமாளுக்குப் பூமாலை அணிவித்து அழகுப் பார்த்துவிட்டுத் தான், தன் பணிகளைத் துவங்குவார்.

அதற்காக அவர், அத்திருத்தலத்திலே ஒரு அழகிய, புது பூங்காவனத்தையே உருவாக்கி, அதன் மத்தியில் தனக்காக ஒரு சிறு குடிலையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும், யாரையும் விரும்பாமல் வாழ்ந்து வந்தார். இவர் இப்படியேதான் தன் வாழ்நாள் முழுவதும் இருந்தாரா???

அதுதான் இல்லை. என்ன இல்லையா? ஆம், ஐயா! அவர் வாழ்விலும் வீசியது வஞ்சியரின் வாடைக் காற்று!

திருக்கரம்பனூர் என்னும் ஊரில் தேவி, தேவதேவி என்று அக்காள், தங்கையர் இருவர் இருந்தனர். அவர்கள் மன்னர்கள் முன் நடனமாடி பரிசில் பெறும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரு முறை உறையூர் மன்னன் முன் ஆடி, பரிசில் பெறுவதற்காக வந்திருந்தனர்.

பரிசில் பெற்றுவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் வழியில், திருவரங்கப் பெருமானை வழிபடலாம் என்று எண்ணி அத்திருத்தலத்திற்குச் சென்றனர். அப்பொழுது, அங்கிருந்த பூங்காவனத்தின் அழகும், அமைதியும் அவர்கள் இருவரையும் மிகவும் கவர்ந்தது. நாம் இப்பொழுது இருப்பது பூலோகத்திலா? இல்லை, இந்திரலோகத்திலா என்று அதிசயித்து, இந்த அழகிய நந்தவனம் எவருக்கு சொந்தமானது? என்று வினவினாள்.

அதற்கு அவள் அக்காள், 'இது விப்ர நாராயணர் என்னும் மிகப்பெரிய விஷ்ணு பக்தன் உருவாக்கியது. அவர் இறைவனுக்கு நாள்தோறும் பூமாலை அணிவிப்பதற்காகவே இதை உருவாக்கினார்,' என்று பதிலளித்தாள்.

'தான் அவரைக் காண வேண்டும்' என்று தன் தமக்கையிடம் கூறினாள். அதனால், இருவரும் அவரைக் காண அவர் குடிலுக்குச் சென்றனர். அங்கே அவரின் அழகைக் கண்டு இருவரும் மயங்கினர். முதல் பார்வையிலேயே, தேவதேவி விப்ர நாராயணரை விரும்ப ஆரம்பித்தாள்.

உடனே தேவதேவி தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். ஆனால், அவர் அவளை உதாசினப்படுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தேவதேவி, தான் இக்குடிலிலேயே தங்கி மிக விரைவில் அவரின் மனத்தை மாற்றுவதாக உறுதிக் கொண்டாள்.

மூத்தவளான தேவி, தேவதேவியை ஆசிர்வதித்து விட்டு, தன் ஊருக்குப் புறப்பட்டார். தேவதேவியும், தன் பொருளையெல்லாம் இறைவனுக்கு அளித்து விட்டு, முனிவர்களைப் போல் உடையணிந்து வந்து, விப்ர நாராயணனிடம், ' தான் இதுவரை எவருக்கும் உபயோகமில்லாமல், ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்ததாகவும், இனியாவது, தான் அவருடன் இணைந்து அவருக்குத் துணையாய் உதவிகள் புரிந்து இறைவனுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினாள்.

இயல்பாகவே அன்புள்ளம் கொண்ட விப்ர நாராயணரும் அவளின் பேச்சுக்கு மனமிரங்கி, தேவதேவியின் விருப்பத்திற்கு சம்மதம் அளித்தார். அன்று முதல் இருவரும் இணைந்து அரங்கநாதனுக்குப் பூசை, தொண்டுகள் செய்தனர்.

தேவதேவியின் அன்பில் மெச்சிய விப்ர நாராயணரின் மனம் மெதுமெதுவாக தேவதேவியின் பக்கம் திரும்பியது. அவள் கூறியபடி, விப்ர நாராயணனை முழுவதுமாக மாற்றி, இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

ஒருநாள், தேவதேவி தான் தன் பெற்றோரையும், தமக்கையையும் பார்க்க விரும்புவதாகக் கூறினாள். உடனே, விப்ர நாராயணனும் உடன் வருவதாகக் கூறினார். இருவரும் திருக்கரம்பனூர் வந்து சேர்ந்தனர்.

தேவதேவியின் தாயார், பொருளில்லாத விப்ரநாராயணனை வீட்டிற்குள் அனுமதிக்க விரும்பவில்லை. உடனே, விப்ர நாராயணனும், மிகவும் மனமுடைந்த நிலையில் நந்தவனத்திற்கு வந்தார். அவர், தேவதேவி இல்லாமல் இனி தன்னால் ஒரு வினாடி கூட வாழ முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டார்.

இக்காட்சியைக் கண்ட எம்பெருமான், விப்ர நாராயணனை அந்த மாயையிலிருந்து விடுவிக்க முடிவு செய்தார்.

உடனே, அருட்பெருஞ்சோதியான பெருமாள், விப்ரநாராயணனின் சீடனைப் போல் உருமாறி, தேவதேவியின் தாயார் வீட்டிற்கு வந்து, ஒரு வெள்ளி வட்டலைக் கொடுத்து, ' இதை என் குரு கொடுத்து வரச் சொன்னார்' என்று கூறி ஒரு வட்டலை அந்த அம்மாவிடம் கொடுத்தார்.

தேவதேவியின் தாயாரும் மிகுந்த மகிழ்வுடன் அதைப் பெற்றுக் கொண்டு, 'உன் குருவை உடனே வரச் சொல், அவர் போனதிலிருந்து என் மகள் உணவு, உறக்கம் இல்லாமல் இருக்கிறாள், என்று கூறி அனுப்பினாள்.

மறுநாள், காலை திருவரங்கக் கோயிலின் அர்ச்சகர், பூசை செய்யும் போது, நாள்தோறும் இறைவனுக்கு பூசை செய்ய உதவும் ஒரு வட்டல் காணாமல் போனதை அறிந்து, மிகப் பதற்றத்துடன் சென்று மன்னனிடம் புகார் செய்தார். உடனே காவலர்கள் சென்று ஊரெங்கும் தேடி, அது தேவதேவியின் வீட்டிலிருப்பதை அறிந்தனர்.

வழக்கு விசாரணையின் போது, தேவதேவியின் தாயார், விப்ர நாராயணனின் சீடன் அளித்தது, என்று கூறினார். அதனால், விப்ர நாராயணன் சிறை வைக்கப்பட்டார். அவர் மிகவும் மன வருத்தத்துடன் தனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்று மனம் நொந்து இறைவனை வேண்டினார்.

அன்று இரவு, திருவரங்கப் பெருமாள், மன்னனின் கனவில் தோன்றி நடந்தவற்றைக் கூறி, விப்ர நாராயணனை விடுவிக்குமாறு கூறினார். அவ்வாறே மன்னனும் செய்தார்.

மறுநாள் காலை, விடுதலை யான விப்ர நாராயணன், தான் இவ்வுலகில் ஏன் வந்தோம் என்னும் உண்மையை உணர்ந்து, திருவரங்கப் பெருமானின் சந்நிதிக்குச் சென்று பெருமாளை முழுமையாகச் சரணடைந்தார்.

அதன் பின், அவர் திருவரங்கத்திலே இருந்த எம்பெருமானின் பக்தர்கள் அனைவரின் காலிலும் விழுந்து வணங்கி, அவர்களின் திருப்பாதம் பட்ட மண்ணை(திருவடிகளின் பொடிகளை) எடுத்து தன் தலையில் இட்டுக் கொண்டு, அரங்கநாதனின் அருமை பெருமைகளை எல்லாம் பாடலாகப் பாடினார்.

அதுமுதலே, விப்ர நாராயணர், தொண்டரடிபொடி ஆழ்வார் என்று அழைக்கப்பெற்றார்.

அவர் பாடிய பாடல்கள்:

. திருப்பள்ளி எழுச்சி
. திருமாலை ஆகியன ஆகும்.

ஓம் நமோ நாராயணயா நம!!
தொண்டரடிபொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

Friday, July 4, 2008

ஆண்டாள்


ஆண்டாள்:

காலம் - ஏழாம் நூற்றாண்டு ( 716 - 732)ஆண்டு - நள
மாதம் - ஆடி
நாள் - செவ்வாயக் கிழமை
நட்சத்திரம் - பூரம்
திதி - பஞ்சமி (சுக்லபட்சம்)

இவை எல்லாம் கோதையின் பிறந்த சாதகக் குறிப்புகள் அல்ல. இவை அனைத்தும் நம்ம விஷ்ணு சித்தர் கோதையைக் கண்டெடுத்த நேரக்குறிப்புகள்.

எவ்வாறு குழந்தை வரம் வேண்டி ஜனகன் யாகம் செய்யும் பொழுது சீதா தேவியைக் கண்டெடுத்தாரோ, அதே மாதிரிதான் கோதையும் நம்ம பெரியாழ்வாருக்குக் கிடைத்தார்.

ஆ! ஆ! அது இல்லங்க, பெரியாழ்வாரும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தாரா என்று குறுக்க நெடுக்க கேள்வி கேட்கப்படாது.

தன் தாயுமான ஆழ்வார் தனியே தவிப்பதைப் பொறுக்காத இறைவன், தன் துணைவியைக் குழந்தையாய் அனுப்பி, அந்த இறைவியை வளர்க்கும் பொறுப்பை பெரியாழ்வாருக்கு அளித்தருளினார்.

பட்டர் பிரான் தன் வழக்கமான மலர்க் கைங்கரிய சேவையைச் செய்ய ஒரு நாள் நந்தவனத்திற்கு சென்று மலர்க் கொய்து கொண்டிருக்கையில், ஒரு துளசிச் செடியின் அடியில் சீதாதேவியின் அம்சமாக, பூதேவியின் புதல்வியாக அந்த குழந்தையைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டு தாயன்போடு, பக்தியையும் ஊட்டி வளர்த்தார்.

கோதையும் ஆழ்வாரின் அரவணைப்பிலும், அங்கு இருந்த பக்திமயமான சூழலிலும் இயல்பு நிலைக்கு அதிகமான பக்தியையும், பாசத்தையும் இறைவன் மேல் வைத்து வளர்ந்தார். கோதை, பெரியாழ்வாருடன் சேர்ந்து இறைவனுக்கு மலர்க்கைங்கரியம் செய்வதிலும், இறைவனுக்குத் தொண்டுகள் புரிவதிலும் துணையாய் இருந்தார்.

பெரியாழ்வார், நாள்தோறும் கோதைக்கு கண்ணனின் குழந்தைப் பருவ குறும்புகள் முதல் அவரது ஒவ்வொரு அருட்செயல்களையும் கதையாய்க் கூறுவார். இதனால் இறைவனைப் பற்றிய சிந்தனையே இறைவியின் உள்ளத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்து, தன் ஒவ்வொரு அசைவிலும் இறைவன் இருப்பதை இதயப்பூர்வமாக உணர்ந்தார்.

cow boy ன் கண்பட்டதும்,
play boyன் கதை கேட்டதும்,
உண்டான love ஆனது,
உள்ளூற பிறை யானது....

காலப்போக்கில், கோதையின் பக்தி, காதலாக மலர்ந்தது. கோதை வளர, வளர, ''தான், அந்த அழகிய கண்ணனுக்கு, தன் காதல் தலைவனுக்கு ஏற்ற துணையாய் இருக்க முடியுமா?'' என்று யோசிக்க ஆரம்பித்தார். 

காதலும் கள்ளத்தனமும் இரட்டைக் குழந்தைகள் இல்லையா! அதுபோலவே கோதையும், இறைவனுக்குச் சூட்டுவதற்காக, பட்டர்பிரான் கோர்த்து வைத்திருந்த பூமாலையை, தன் தந்தைக்குத் தெரியாமலேயே எடுத்து அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்வார்.

கண்ணாடியில் தன் மணக்கோலம் தெரியுமோ? இல்லை, மனத்திற்குள் இருக்கும் மன்னவனின் திருக்கோலம் தெரியுமோ? அவர் கண்ணாடியில் தான் காணும் அழகைக் கண்டு, முகம் சிவந்து மெய் மறந்து நின்றுவிடுவாள். பின் சுய நினைவு வந்தவளாய், தன்னுள்ளே மெல்லியதாய் நகைத்து, மீண்டும் மாலையை எடுத்தது எடுத்தபடி, எவருக்கும் அறியாமல் அப்படியே வைத்துவிடுவாள் அந்த அப்பாவி சிறுமி.

அது சரி, கோதை மட்டும் பூமியிலே பிறந்து, மங்கையாய் மண்ணிலே அந்த மச்சக்காரனை (மச்சாவதாரத்தானை) நினைத்து நினைத்து உருகுகிறாளே, ஆனால் நாராயணனைக் காணோமே! அப்படின்னா, கோதை என்னா, ஒரு தலை ஃபீலரா??? ...

கோதையின் காதலும் வளர்ந்தது; கள்ளத்தனமும் தொடர்ந்தது..... ஒரு நாள், மாதவனுக்கான மாலையில் மங்கையின் முடி ஒன்று இருப்பதைப் பார்த்துப் பதறினார், பெரியாழ்வார்.

இறைவனுக்கான சேவையில் எவ்விதக் குறையும் இருக்கக் கூடாது என்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மலராய் தானே பறித்து, அவற்றைப் பக்குவாய் புணைந்திருந்தும், அதில் எவ்வாறு பிழை ஏற்பட்டது என்று மனம் பதை பதைத்தார்.

உடனே அவர் அதைக் கண்டறிய வழக்கம் போல், தன் வழக்கமான இடத்தில் மாலையை வைத்து விட்டு மறைந்து நின்று கவனிக்கையில் கள்வனின் காதலியின் கள்ளத்தனம் வெளிப்பட்டுவிட்டது.

உடனே அவர், கோதையைக் கடிந்து கொண்டு, மீண்டும் புதியதொரு மாலையை மாளவனுக்கு அணிவித்தார்.ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை....

திருடிய கனிதானே தித்திக்கும்.... திருடியின் திருக்கரம் பட்ட மாலைதான் கள்வனுக்குத் தித்திக்கும். அதனால், அன்று இரவில் கனவிலே, யார் கனவிலே?.....

பெரியாழ்வாரின் கனவிலே பெருமாள் தோன்றி, தனக்குக் கோதையின் மாலையை அணிவித்தாலே பிடி என்று பிடிவாதம் பிடித்தார். பெரியாழ்வாரும் மகிழ்ந்து அதன்படியே நடந்தார்.

'சூடித் தந்த சுடர்க் கொடியான' கோதை, குமரியானதும் பெரியாழ்வாருக்கு வந்தது பெர்ர்ரிய வேலை. சாதாரண மானிடர்கள் யாரையும் தான் கல்யாணம் கட்டிக்க மாட்டேன். மணந்தால், அந்த மாளவனைத்தவிர வேறு யாரையும் தன் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று கோதையும் இங்கு அடம் பிடிக்க..... இப்பொழுதும் பெரியாழ்வாருக்கு பெரிய கவலை....

108 கோயில்ல சீனிவாசன் வாசம் செய்யும் பொழுது, எந்த தலத்திலிருக்கும் தலைவனுக்குத் திருமணம் முடிப்பது என்று....

மீண்டும், நம்ம திருவரங்க நாதர், பெரியாழ்வார் கனவிலே தோன்றி, 'கோதையை மணக்கோலத்துடன் என் சந்நிதிக்கு அழைத்து வரவும். அங்கே நான்
அவளை ஏற்றுக் கொள்வேன்', என்று கூறினார்.

அதன்படியே, பெரியாழ்வாரும் ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் கோதையை மணப்பெண்ணைப் போல் அலங்கரித்து, சுற்றமும் நட்பும் சூழ பல்லக்கிலே ஏற்றி, திருவரங்கப் பெருமானிடத்தில் வந்து சேர்ந்தனர்.

அங்கே திருவரங்கப் பெருமானுடன் ஆண்டவள் சங்கமம் ஆனாள்.

சூடித்தந்த நாச்சியாரான கோதை, இறைவன் மேல் பக்திச் சுவைச் சொட்டச் சொட்ட பாடிய பாசுரங்கள் இரண்டு; அவை,

திருப்பாவை 30 பாசுரங்கள் 
நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள்.

திருப்பாவை:

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

ஐயைந்தும் - 5*5 = 25
ஐந்தும் - 5 (25+5 = 30). இந்த 30 பாசுரங்களும் மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலே பாடப்படுகின்றன.
ஓம் நமோ நாராயணாய நம!!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

பெரியாழ்வார்

பெரியாழ்வார்:காலம் - 7 ம் நூற்றாண்டு ( 700 - 785)
ஆண்டு - உருத்ரோண வருடம்
மாதம் - ஆனி
நட்சத்திரம் - (ஞாயிற்றுக் கிழமை) சுவாதி
திதி - ஏகாதசி
அம்சம் - கருடன்
பெற்றோர் - முகுந்தாச்சார்யார்; பதுமையார்.

பெரியாழ்வாரின் இயற்பெயர் திரு ராம ஆண்டான் என்பதே ஆகும். ஆனால், இவர் எப்பொழுதும் வடபெருங்கோயிலுடைய எம்பெருமான் நாராயணனையே சிந்தையில் கொண்டிருந்ததனால் இவர் விஷ்ணுசித்தர் என்று அழைக்கப்பெற்றார்.

சிறுவயதில் அவர் வேதங்கள் பயில்வதை விட இறைவனுக்குத் தொண்டு புரிவதிலேயே அதிக நாட்டம் கொண்டவராயிருந்தார். அவர் எம்பெருமானுக்கு பூமாலைகள் சூட்டி அழகு பார்ப்பதிலேயே தன் சித்தம் செலுத்தினார்.

அது சரி இவருக்கு சின்ன வயசுலேயே ஒன்னுக்கு ரெண்டு பேரு இருக்கு, அப்புறமும் ஏன் இவர எல்லாரும் பெரியாழ்வார், பெரியாழ்வார் ன்னு அழைக்கிறாங்க?

அதுவும் சரி, அது என்ன பன்னிரண்டு ஆழ்வார்கள் இருக்கும் போது இவருக்கு மட்டும் பெரிய ன்னு அடைமொழி?
கல் தோன்றி மண் தோன்றா காலத்தும் முன் தோன்றிய மூத்த ஆழ்வார்கள் மூவர் உள்ளனர், அந்த முதல் ஆழ்வார்களுக்கும் இல்லாமல்,
கடவுளே ஆழ்வாராக வந்துள்ளார் என்று கருதப்பட்ட நம்மாழ்வாருக்கும் இல்லாமல்,
மண்ணுலக மக்களுக்கு இறைவனாய் இருக்கும் மன்னர் குலத்தோன்றலான குலசேகர ஆழ்வாருக்கும் இல்லாமல்,
சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கும் இல்லாமல் நம் விஷ்ணு சித்தருக்கு மட்டும் ஏன் பெரிய ஆழ்வார் என்று அனைவரிலும் பெரியவராக அழைக்கும் வழக்கம்? அது ஏனென்றால்...

இந்த உலகத்தில ஒவ்வொருத்தரும் ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உடைய மனிதர்கள் வரைக்கும், ஏன் இந்த உலகையே உருவாக்கி, காத்து, தீயனவற்றை அழிக்கும் அந்த கடவுளர்களும் கூட இம்மண்ணுலகில் பிறந்து வளர உறுதுணையாய் அமையும், இம்மண்ணில் நடமாடும் கண் கண்ட தெய்வங்களாக வாழும், நாம் தொழும் தெய்வம் - தாய்!

எந்த உலகத்திலும், எக்காலத்திலும் தாய்க்கும், தாய்ப்பாசத்திற்கும் ஓர் அளவை அறுதியிட்டுக் கூற இயலாது. அத்தகைய தாய்ப்பாசத்தோடும், தன்னலமில்லாத அன்போடும், அவன் நலனை மட்டுமே எப்பொழுதும் இறைவனிடம் வேண்டும் இயல்புடையவர்.

மனம், சொல், சிந்தனை அனைத்திலுமே குழந்தையாய் எம் பிரானை நினைத்து, மிகுந்த அக்கறையோடு இருந்ததால் அவர் மற்ற ஆழ்வார்களை விட உயர்ந்தவராய் கருதப்படுகிறார்.

பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில், பாண்டிய மன்னனான திருவல்லப தேவனுக்கு ஒரு ஐயம் எழுந்தது. அதாவது, நமக்கு இக்காலத்தில் எக்குறையும் இல்லாமல் வாழத் தேவையான செல்வங்கள் அனைத்தும் இருக்கின்றன. அடுத்த பிறவியிலும் நாம் சுகமாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்று தன் குருவிடம் வினவினார்.

அவராலும், அரண்மனையிலிருந்த எவராலும் இக்கேள்விக்கு சரியானதொரு பதிலை அளிக்க இயலவில்லை. எனவே மன்னனின் குலகுருவான செல்வநம்பி, நாம் நாட்டிலுள்ள ஆன்றோர்கள் முன்னிலையில் இக்கேள்வியினை வைப்போம். அவர்களுள் சரியான பதிலை அளிப்பவர்களுக்கு நாம் பொற்காசுகளைப் பரிசாக அளிப்போம் என்று கூறினார்.

அதன்படியே மறுநாளே, போட்டி அறிவிக்கப்பட்டது. அன்று இரவு இறைவன் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி, 'பொற்கிழியை அறுத்து வா' என்று ஆணையிட்டார்.
மறுநாள் இறைவனின் ஆணைப்படி, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார், பெரியாழ்வார். மன்னன் அவர் முகத்தில் தெரிந்த பேரொளியை அறிந்து கொண்டு, இவரே தன் கேள்விக்கு சரியான பதிலை அளிக்கக் கூடியவர் என்று உணர்ந்து கொண்டு அவரை முன் சென்று வரவேற்றார்.

அவரிடம், 'ஐயா, நாம் மறுபிறவியில் துன்பமின்றி வாழ என்ன செய்ய வேண்டும்' என்று வினவினார்.

அப்பொழுது பெரியாழ்வார் கூறிய பதிலாவது, '
ஒருவருக்குப் பிறவி என்பதே துன்பமானது.
நாம் இப்பிறவியில் நன்மைகள் செய்தாலும் சரி, தீமைகள் செய்தாலும் சரி அவற்றை அனுபவிக்க நமக்கு பிறவி என்பது வந்து கொண்டேயிருக்கும்.எனவே துன்பமின்றி வாழ வேண்டுமானால், நாம் பிறவியின்றி வாழ வழி செய்ய வேண்டும்.

பிறவியின்றி வாழ, நாம் செய்வது நன்மையோ, தீமையோ அதை இறைவனின் பெயரால் செய்து அதன் முழுபலனையும் முதலும் முடிவும் இல்லாத யுகம் யுகமாய் அண்டசராசரம் அனைத்தையும் ஆட்சி புரியும் பெருமாளின் பொற்பாதத்திலே ஒப்படைத்துவிட வேண்டும்.

''நம் அனைவரையும் கண் பார்வையாலேயே மயக்குபவன், மாலவன்- திருமால் அவன். அவன் ஒருவனே நம் பாவ, புண்ணியங்களைப் போக்கி, உலகவாழ்வின் மயக்கத்தை நீக்குபவன்'' என்பதை தெள்ளத்தெளிவாய், வேதங்களில் உவமானம் கொண்டு எடுத்துக் கூறினார், பெரியாழ்வார்.

நாம் மட்டும் இறைவனின் திருவடிகளை சரணடைவதைவிட, நம் செயல்களையும் அவன் பொற்பாதம் பணித்துவிட வேண்டும்.' என்று கூறினார். உடனே, அந்த பொற்கிழி வளைந்து வந்து அவர் கைகளை எட்டியது. அங்கிருந்த அனைவரும் ஆழ்ந்த வியப்புடன் ஆழ்வாரைப் பார்த்தனர்.

மன்னர் மிகவும் மகிழ்ந்து, பெரியாழ்வாருக்கு பட்டர்பிரான் என்று பட்டமளித்து, அவரை, மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம், பொன்முடிப்புடன் யானையின் மேலேற்றி, நகர் வலம் வரவழைத்தார். இக்காட்சியைக் காண, கருட வாகனமேறி, சங்கும் சக்கரமும் தன் இரு தோள்களிலும் ஏக, திருமகளைத் தன் வலமார்பிலே தாங்க, தேவர்கள் அனைவரும் துதிக்க எம்பெருமான் காட்சித்தந்தார்.

இவ்வருங்காட்சியை மக்கள் அனைவரும் கண்டனர். அதைப்பார்த்த பெரியாழ்வார், மனம் பதைபதைத்தார். தன் பிள்ளை மேல் கண்ணேறு ஏதும் பட்டுவிடுமோ என்று அஞ்சி, உள்ளம் துடித்தார். உடனே மக்கள் அனைவரின் கவனத்தையும் திருப்பும் வண்ணம் இறைவன் மேல் திருப்பல்லாண்டு, பாடினார். மக்களும் அவருடன் இணைந்து பல்லாண்டு பாடத் துவங்கினர்.

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோமொடும் நின்னொடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ் சன்னியமும் பல்லாண்டே!

அப்பாடா, இந்த பாசுரத்தைப் படிக்கற நமக்கே, பெருமாள் மேல கண்ணு வெச்சுடுற மாதிரி இருக்கே, அப்போ பாக்குறவங்க கண்ணுலாம் எப்படி இருந்து இருக்கும். அதை எல்லாம் நேர்ல பாக்குற ஆழ்வாருக்கு மனசு எப்படி வலிச்சுருக்கும். இந்த வலி தான் அவரை மற்ற ஆழ்வார்கள் கிட்ட இருந்து உயர்த்திக் காட்டுனது.

இவர் இறைவனுக்கு மட்டும் தாயாய் இருக்கவில்லை. அவர் துணைவியாருக்கும் (கோதை) தாயுமானவர்.

பாண்டிய நாட்டில் அவர் பெற்ற பரிசினை வடபெருங்கோயிலுடையானுக்கு (திருப்பதிக்கு) அளித்து விட்டு, வழக்கம் போல் இறைவனுக்கு மலர் கைங்கரியம் செய்வதைத் தொடர்ந்தார், பெரியாழ்வார்.
அன்பும், பக்தியும், பாசமும் சொட்ட சொட்ட பெரியாழ்வார் அருளியவை,

1.திருப்பல்லாண்டு
2.பெரிய ஆழ்வார் திருமொழி ஆகியன ஆகும். அது மட்டுமல்லாமல் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கிய மரபைத் தோற்றுவித்தவர், பெரியாழ்வார்.

பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டுதான் பாசுரங்களில் முதலாவதாகப் பாடப்படுவதாகும்.

ஓம் நமோ நாராயணாய நம!!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!