Sunday, October 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 4
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ

பொருள்:

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் -
சங்கில் வலம்புரிச் சங்கையும் அருள் தரும் திருவடிகளுக்கு கொலுசும்

சங்கின் வலம்புரி - சங்கிற் சிறந்த வலம்புரி
சேவடிக் கிண்கிணி - போன பாட்டில் ஏற்பட்ட குழப்பம் இந்தப் பட்டில் தான் தீர்ந்தது. கிண்கிணி கொலுசு தான்.

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் - உள்ளங்கையில் ஏந்தும் சரிவளையும், தோளில் அணியும் காப்பும் , அரைஞான் கொடியும்

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் - உயர்நிலையாம் வானுலகின் அமரர்கள் தந்தனுப்பி இருக்கிறார்கள்

அங்கண் - சிறந்த இடம்
விசும்பு - வானுலகம்

செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ - சிவந்த கண்கள் கொண்ட கருமுகில் வண்ணனே. தேவகி பெற்ற சிங்கமே உனக்குத் தாலாட்டுப் பாடுகின்றேன்.

பதவுரை:

சிறப்பு மிகுந்த வானுலகத்தில் இருந்து அமரர்கள் உனக்கு மாற்று அணிகலணாக வலம்புரிச் சங்கையும், திருவடிக் கொலுசுகளும், சரிகையும், தோள்காப்பும், அரைஞான் கொடியும் தந்திருக்கிறார்கள். சிவந்த கண்களை உடைய தேவகி பெற்ற சிங்கமே உனக்குத் தாலாட்டுப் பாடுகின்றேன். குழந்தைக்கு கண்கள் சிவந்திருக்காதே! சிங்கத் திருவுருவால் சிவந்த கண்களையுடைய தேவகியின் மைந்தனேன்னு படிச்சா சரியா வரும் ;-).

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாட்டு அப்படியே இசையோடு, உம் உம் என்று ஆற்றொழுக்கா வருது!

//தேவகி சிங்கமே தாலேலோ//

இவரு "தேவகி சிங்கம்"-ன்னு பாடுறாரு!
இவரு பொண்ணு "ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்" என்று பாடுவாள்!

ரெண்டு மாமியாருக்கும் அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து பாடிட்டாங்க! :)

முகவை மைந்தன் said...

மாமியார் வீட்டுக் கவனிப்புன்னா சும்மாவா!! அதான் மாமியார்களையும் கவனிக்குது ;-)))