Saturday, August 6, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 10

திரைநீர்ச் சந்திரமண்டலம் போல் செங்கண்மால் கேசவன்* தன்
திருநீர் முகத்துத் துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர*
பெருநீர்த்திரையெழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம்
தருநீர்* சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடைநடவானோ.

பொருள்:

திரைநீர்ச் சந்திரமண்டலம் போல் செங்கண்மால் கேசவன்* தன்- அலைகடல்நீரில் தெரியும் உதயசந்திரனைப் போல, செந்தாமரை இதழ்களைப் போன்று சிவந்த நிறமுடைய கண்களை உடைய திருமால், கேசவன் தன்னுடைய (திரை -அலைகடல்; சந்திரமண்டலம் -சந்திரன்; செங்கண்மால் - சிவந்த கண்களையுடைய மாலவன்; கேசவன்-தலைவன் )

திருநீர் முகத்துத் துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர- திரு நீர் முகத்தில் துலங்கும் சுட்டியானது, திகழ்ந்து எங்கும் புடை பெயர;

(திரு - அழகு, நீர் - இயல்பு, குணம், நிலை; துலங்குசுட்டி - தொங்கி ஆடும் நெற்றிச்சுட்டி; துலங்குதல் - பிரகாசித்தல்; திகழ்ந்து - மின்னுதல்~ மின்னி, ஒளிவீசி; புடைபெயர- அசைதல், அசைந்தாட)
குட்டிக்கண்ணனின் முகம் இயல்பாகவே பேரழகு மிக்கதாகவும், ஒளிவீசக்கூடியதாகவும் இருக்கின்றது. அலைகடலானது, இரவில் கருமையாக இருந்தாலும், அது அடர் கருமையாக இருக்காது. தன் மேல் வீசும் நிலவொளியினால், அக்கடல் ஒரு விதமான பிரகாசத்துடன் இருக்கும். இரவில் கடலினைப் பிரகாசப்படுத்த, பொலிவான தேஜஸைக் கொடுக்க நிலவொளித் தேவைப்படுகிறது. ஆனால் கண்ணனுக்கு, அவை எதுவும் தேவை இல்லை. அவனுடைய முகம் இயல்பாகவே பொலிவுடன் விளங்கும்.

அத்தகைய திருமுகத்தில் விலையுர்ந்த, நேர்த்தியான மணிகளால் செய்யப்பட்ட நெற்றிச்சுட்டியானது, அவன் அசைந்து அசைந்து நடக்கும் போது, அச்சுட்டியும் சேர்ந்து அசைந்தாடி, எங்கும் தன் ஒளியினைப் பரவச் செய்கின்றது.

உயர்ந்த, தரமான மணிகளானது, இயல்பாகவே பொலிவானதாகும். அவை, திருமாலின் முகத்தில் இருக்கும் போது, அவனுடலின் பிரகாசத்தால் அவை மென்மேலும் பொலிவுபெறுகின்றன. அவ்வொளியானது, எல்லாத்திக்கிலும் பரவுகின்றன.

பெருநீர்த்திரையெழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம் தருநீர் - பெருநீர்த் திரை எழுக்கூடிய கங்கையின் தீர்த்தம் தரக்கூடியதைக்காட்டிலும் மிகப்பெரும் புண்ணியம் தரக்கூடியதான நீர்... எந்த நீர்?

பெரிய, பெரிய அலைகள் எழக்கூடிய கங்கை நீரைக்காட்டிலும், மாபெரும் புண்ணியம் தரக்கூடிய நீரினை

சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடைநடவானோ- குழந்தைக்கண்ணனின் சிறு ஆண்குறியினின்று வெளியேறும் நீரானது சிறுசிறு துளிகளாகச் சிந்தத் தளர்நடை நடவானோ
(சண்ணம் - ஆண்குறி; துள்ளம் - துளி, சொட்டு)

பதவுரை:

அலைகடலின் மத்தியில் இருக்கும் சந்திரனைப் போல, கார்முகில் வண்ணனின் முகத்தில் அமைந்துள்ள நெற்றிச்சுட்டி நாற்புறமும் தன் ஒளியினைப் பரப்பி, கண்ணனுடன் சேர்ந்தாட, கங்கையினும் புனிதமாய, குழந்தைக் கண்ணனின் சிறுநீர் சொட்டு சொட்டாக வீழ சிவந்த கண்களையுடைய மாலவன், கேசவன் தளர்நடை நடப்பானாக!

No comments: