Wednesday, April 9, 2008

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்

பிறந்த காலம் - கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 - 780)
இடம் - திருவஞ்சிக்களம்(கேரளம், திருச்சூர் அருகில்)
ஆண்டு - பிரபவ
மாதம் - மாசி
திருநட்சத்திரம் - புனர்பூசம்(புனர்வசு, வெள்ளிக்கிழமை)
அம்சம் - கௌஸ்தூபம்(பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்)


குலசேகராழ்வார் இவரை ஆழ்வார் என்று அழைப்பதைவிட குலசேகர பெருமாள் என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது ஆகும்.

'சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்' என்னும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவனும் அவதரித்துள்ளார். யார் அவர்? நம் குலசேகரப் பெருமாள் தான்!

நம் குலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அவர் சிறுக்குழந்தையாய் இருந்த போது.....

என்ன! இவர் வாழ்விலும் ஏதேனும் அதிசயமா...?

ஆமாம்! என்ன அதிசயம்... !அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய் இருந்தோமா, மண்ணைக் கைப்பற்றினோமா.... என்று வாழாமல், அந்த மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர் அல்லவா இவர்! அதுவே மிகப்பெரிய அதிசயம் தானே!

பாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநாடு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.

எல்லா அரசர்களையும் போல் எல்லைக் கைப்பற்றலிலே இவர் வாழ்வும் கழிந்தது. இவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீ ரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரைக் கண்டு பொறாமை கொள்ளாத மன்னர்களே இல்லை எனலாம். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.

மன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.

எம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர். இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார். அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார். அப்பப்பா, எத்துனை பக்தி! எவ்வளவு தூரம் அவர் அந்தக்கதைகளில் ஆழ்ந்திருந்தால் இவற்றை எல்லாம் செய்து இருப்பார் என்று பாருங்கள்.


அவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.


மன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர். என்னவென்றால்,


ஒருநாள், அவர் அணுதினமும் பூசித்து, வணங்கி வழிபடும் ஸ்ரீ ராம பிரானின் திருவுருவ சிலையில் இருந்த நவரத்தின மாலை ஒன்று காணாமல் போய்விட்டது. அதை, விஷ்ணு பக்தர்கள் தான் எடுத்து விட்டனர் என்று, அவரது அமைச்சர் அவரிடம் உரைத்தார்.


இதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார். உடனே அவர், கொடிய விடமுள்ள பாம்பு ஒன்றை ஒரு குடத்திலிடச்சொல்லினார். பின், "எம்பிரான் பக்தர்கள் அந்த மாலையை எடுத்திருந்தால், நானும் அப்பக்தர்களில் ஒருவன், ஆதலால் இக்குடத்திலுள்ள பாம்புத் தன்னைத் தீண்டட்டும்" என்று கூறிக் குடத்தினுள் தன் கையை விட்டார். ஆனால், அப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை.


அப்பொழுது, அவரது அமைச்சர், அந்த மாலையை எடுத்து மறைத்து வைத்தது, நாங்கள்தான்... இராமபிரானின் மீதான உங்கள் பக்தியை நீக்கவே அவ்வாறு செய்தோமென்று கூறி, அந்த மாலையைத் திருப்பிக் கொடுத்து, தம் தவற்றிற்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார்.


இதனால் மனம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடத்து ஒப்படைத்து விட்டு, இராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.

இராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதாலோ என்னவோ, இவரும் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார். குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்டச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.

குலசேகரப் பெருமாள் பாடிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக் கொண்டது ஆகும். அது மட்டுமில்லாமல், அவர் கண்ணபிரானுக்காக, வட மொழியில் முகுந்த மாலை என்னும் பக்திப்பாடல் ஒன்றும் எழுதியுள்ளார். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, வடமொழியில பாட்டு எழுதின ஒரே ஆழ்வார் இவர்தான். ;-))

குலசேகர ஆழ்வார், சென்று வணங்கிய திருத்தலங்கள் எவைஎவை என்றால், திருவரங்கம்,
திருவேங்கடம்,
திருவித்துவக்கோடு,
திருஅயோத்தி,
திருக்கண்ணபுரம்,
திருசித்திரக்கூடம்.

திருச்சித்திரக்கூடம் என்பது எந்த ஊர்னு கேக்குறீங்களா? அது வேற எந்த ஊரும் இல்லை, நம்ம தில்லை நடராச பெருமான் வீற்றிருக்கும் திருச்சிதம்பரமேதான். ;-))

ஓம் நமோ நாராயணாய நம!!
குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

No comments: