Saturday, August 6, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 11

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 11

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்.

ஆயர்குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை*
தாயர்மகிழ ஒன்னார்தளரத் தளர்நடை நடந்ததனை*
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்*
மாயன் மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப் பெறுவர்களே.

பொருள்:

ஆயர்குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை- மேன்மை மிகுந்த ஆயர் குலத்தில் வந்து வளர்ந்த கரியமை வண்ணனை,

தாயர்மகிழ ஒன்னார்தளரத் தளர்நடை நடந்ததனை- தாயர் மகிழ, ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததை~ ஆயர்குடியில் உள்ள அத்தனைப் பெண்களுக்கும், கண்ணன் அவர்கள் வீட்டுப்பிள்ளை. தாய்மார்கள் மனம் பெருமகிழ்ச்சி அடையவும், பகைவர்கள் அஞ்சி நடுங்கும் வண்ணம் தளர்நடை நடந்த அழகினை

வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்- அந்தணக்குடியில் பிறந்த, புகழ்மிகுந்த விட்டுசித்தன் என்னும் திருநாமமுடைய பெரியாழ்வார் அவர்கள் பெருமையுடன் சொல்லிய இந்த பாடல்களை மனமுவந்த கூறுபவர்கள்

மாயன் மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப் பெறுவர்களே- கரியமாலவன், மணிவண்ணனின் திருத்தாளினை வணங்கக்கூடிய மக்களைப் பெறுவார்கள்.

பக்தியும், அன்பும்:

பக்தி என்கிற உணர்வு மிகவும் பெருமை மிகுந்தது. மரியாதை செலுத்தக் கூடியது. எல்லோர்க்கும் அந்த உணர்வு வந்துவிடாது. இறைவன்பால் பக்தி செலுத்தக்கூட, இறைவனின் திருவருள் வேண்டும். மானுடனாய் பிறந்த நாம் எத்தனையோ கேளிக்கைகளில் மனம் செலுத்துகிறோம். நிலையில்லாதவற்றின் மேல் பற்றுக் கொள்கிறோம். கோபம், பொறாமை, வஞ்சனை, பேராசை,கர்வம் போன்ற தீய எண்ணங்களுக்கு இடமளித்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். முதலில் பேராசை, அது நிறைவேறாத நிலையில் பொறாமை, பொறாமையின் விளைவு கோபக்கனலில் நம்மை நாமே அழித்துக் கொள்ளுதல். நம்முள் இருக்கும் இத்தகைய தீயனவற்றை எல்லாம் வெளியேற்றி, மனத்தைத் தூய்மைப்படுத்த வல்லது, பக்தி.

பக்தியின் சாரம் சாந்தம், கருணை, பணிவு, மனஅடக்கம். சாந்தமும், கருணையும் உள்ளவர்கள் உள்ளம் என்றும் நிம்மதியில் திளைக்கிறது.மனிதர்கள் வாழும் காலம் வரை இன்பமுடன் இருக்க ஆதாரமே மனநிம்மதி தானே. மனம் நிம்மதி அடைய உள்ளத்தில் பக்தி இருக்க வேண்டும். நம்முடைய பக்தியானது உயர்வானதாக இருக்க வேண்டும். பக்தி என்பதே பேரன்புதானே.

அன்பு:

அன்பின் பரிமாணங்கள்தான் ஆசை, நட்பு, நேசம், காதல், பாசம், பக்தி, மரியாதை, இரக்கம். எத்தனைப் பெயர் வைத்தாலும் அன்பு என்பது ஒன்றே. கொள்கலனின் வடிவம் பெறும் திரவம் போல, அன்பு செலுத்தும் பொருளுக்கேற்ப அதன் பரிமாணம் மாறும். ஆனால் அன்பு மாறாது. ஆகவே, சக உயிரினங்கள் பால் அன்பு செலுத்துவோம்; உயர்வானவற்றின் மேல் அன்பு செலுத்துவோம்; உண்மையான அன்பு செலுத்துவோம். என்றென்றும் இன்பமெய்த உள்ளத்தில் அன்பு என்னும் தீபத்தை ஏற்றுவோம். அன்பானது பகிரும் போதுதான் பலமடங்காகப் பெருகும். அன்பு நிறைந்தோர் நெஞ்சில் அமைதி என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.

பதவுரை:

ஆயர்குடியில் வளர்ந்து வந்த அஞ்சனவண்ணன், தன் தாய்மார்கள் மனம் மகிழவும், பகைவர்கள் மனம் அஞ்சும்படியாயும் தளர்நடை நடந்ததை, புகழ்மிகுந்த, அந்தணர் குடியில் பிறந்த விஷ்ணுசித்தன் பெருமையுடன் விவரித்துக்கூறிய பாடல்களை மனமுவந்து கூறுபவர்கள், மாயவன், மணிவண்ணனின் திருத்தாளினைப் பணியக்கூடிய மக்களைப் பெறுவார்கள்.

அடிவரவு:

தொடர் செக்கர் மின்னுக் கன்னல் முன்னல் ஒருகாலில் படர் பக்கம் வெண் திரை ஆயர் பொன்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!