Tuesday, August 2, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் 5
முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோட*
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்*
பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்*
தன் நம்பியோடப்பின் கூடச் செல்வான் தளர்நடைநடவானோ.


பொருள்:

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோட-
முன்னே ஒரு குட்டிப்பையன் குடுகுடுவென்று விரைந்தோடுகிறான். யாரு கண்ணன் தானே? அதுதான் இல்ல. அந்த குட்டிப்பையன் எப்படி இருக்கான் னா... வெள்ளிப் பனிமலை வார்த்தெடுத்தவாறு இருக்கானாம் அந்த பையன்.

பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்- அவனைத் தொடர்ந்து பின்னாடியே போறான் இன்னொரு குட்டிப்பையன். இந்த பையன் எப்படி இருக்கான்னா.. கரிய மலையினைப் போன்று இருக்கின்றான். ஓ! அப்ப இதுதான் கண்ணன்.

அது சரி! இப்போ புரிஞ்சுடுச்சு... முன்னாடி போனது, கம்சன் அனுப்பின ஆளா இருப்பான். அவனைப் புடிச்சு துவம்சம் பன்றதுக்காக இச்சிறு பாலகனும் அடிமேல் அடி வைத்துப் போகிறான்.

கொஞ்சம் பொறுத்திருந்து கேள்! ஏன் இந்த அவசரம்! பாடலை முழுசா படி! முன்னாடி ஒரு பையன் வெள்ளிப்பனி மலை போல விரைந்தோடுகிறான்; அவனைத் தொடர்ந்து மற்றொரு குட்டிபையன் கரியகுன்று பெயர்ந்து நகர்வது போல் போகிறான். கருங்குன்று போன்றவன் கண்ணன் என்றால், முன்னால் ஓடுகிற பாலகனைப் பற்றி பின்னால் சொல்கிறார் பாரும்.

பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்-
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப் பலதேவன் என்னும்- தன்னுடைய வீரத்தாலும், புத்தி சாமர்த்தியத்தாலும் அரிய செயல்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக் கூடியவன் என்று உலகத்தார் அனைவராலும் போற்றப்படக்கூடியவனும், அழியாப் புகழினை உடையவனுமான பலதேவன் என்னும் (ஓவாப் புகழ் - அழியாப்புகழ்)

so, இப்ப புரிகிறதா! யார் அந்தக் குட்டிப்பையன் என்று. குட்டிக்கண்ணனின் சுட்டி அண்ணன் -பலதேவன்

தன் நம்பியோடப்பின் கூடச் செல்வான் தளர்நடைநடவானோ -
பலதேவன் என்னும் திருப்பெயருடைய தன் தமையனின் பின்னே செல்பவனே, என் செல்வனே தளர்நடை நடவாயோ! (நம்பி - அண்ணன்)
வீட்டில் குழந்தைச் செல்வம் விளையாடுவதே தனி அழகு! அதிலும் அவை ஒன்றையொன்று அனுசரித்து ஒருநேரம் விளையாடுவதும், பின் அவற்றுக்குள் மகாயுத்தம் வந்து வீடே அதகளப் படுவதும் கொள்ளை அழகு!

கண்ணனும், அவன் அண்ணன் பலதேவனும் ஓடுவார், விழுவார் உகந்தாலிப்பார், நாடுவார் நம்பி நானென்று... அண்ணன் ஓட, அவன் பின்னே தம்பி ஓட... தளர்நடை நடக்கும் தம்பி கால் இடறி விழும் வேளையில் அவனைத் தூக்கித் தழுவி, சமாதானம் செய்ய; அஞ்சாதே, உன்னோடு நானிருக்கிறேன் என்று அவனுக்குத் தோள் கொடுத்து உடன் கூட்டிச் செல்ல... எத்துனை அழகிய காட்சி அது. கொள்ளை இன்பம் கொடுக்கும் நிகழ்ச்சி இது.

பதவுரை:


தன் அறிவுக்கூர்மையினாலும், உடல் வலிமையினாலும் அரிய செயல்களை எல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடிக்கக் கூடியவன் என்று உலகத்தாரால் போற்றப்படுபவனும், அழியாப் புகழினை உடையவனுமான பலதேவன் என்னும் திருநாமம் உடைய தன் அண்ணன் முன்னே பெரிய வெள்ளிமலையினை போன்று மொடு மொடுவென்று விரைந்தோட, பின்னே அவனைத் தொடர்ந்து கரியமலைப் பெயர்ந்து நகர்வதைப் போன்று அடி வைத்து நடப்பவனே அருளாளா, தளர்நடை நடவாயோ!

2 comments:

குமரன் (Kumaran) said...

பெரியாழ்வார் சொன்னதற்கும் மேலாகச் சொல்லி அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். :-)

தமிழ் said...

மிக்க நன்றி!