Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 8
குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!*
என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.

பதவுரை:

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி - என்னாஆது தமில் லா?? பெரியாழ்வாரே ஃபெல்லிங் மிஷ்டேக் செய்கிறாரா?? ன்னு யோசிக்க வேணாம்... தம்+இல் - ன்னு பிரிச்சி மேயணும்... ம்ச் பிரிச்சி பொருள் அறியணும்...

ஒக்கலை - முன்னாடியே படிச்சிருக்கோமே! ம் சரியான பதில். இடை ன்னு அர்த்தம்.

ஆயர்பாடியில, அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் ல்லாம், இந்த ச்ச்சின்னப் பையன், குட்டி நந்தனோட அவன் வீட்டில விளையாடிட்டு இருக்கும்போது, அவங்க அப்பா, அம்மா யாராவது வீட்டுக்கு ஏதாவது வேலை செய்யணும், சாப்பிடனும்னு கூப்டும் போது எப்படி இந்த குட்டி வால விட்டுப் பிரிஞ்சுப் போறதுன்னு... அவங்க போம்போதே, இவனையும் அவங்களோட வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடுவாங்க... அதத்தான் ஆழ்வார் சொல்றாரு...

குட்டிக் கண்ணா! உன்னைத் தங்கள் இடைமேல் இருக்க வைத்துத் தங்கள் வீட்டுக்குச் சென்று

உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழக் - அவங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை உன்னோடு விளையாடியும், உனக்குத் தேவையானவற்றை உனக்கு அளித்து, உன்னை மகிழ்ச்சியாய் விளையாடச் செய்து மகிழ்வித்து, மகிழ்ந்தனர்.

கண்டவர் கண் குளிர, கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கு அருளி மன்னு - சிறுபிள்ளைகளுடன் கண்ணன் சிரித்து விளையாடுவதையும், தன் மழலை மொழியால் கொஞ்சுவதையும் கண்டவர்கள் கண் குளிரப் பெற்றனர்; கற்றவர்களோ, மிகுந்த மகிழ்ச்சியால் வார்த்தைகளை மறந்து மெய்சிலிர்த்து நின்றனர்; அத்தகைய ஒரு பேரானந்த களிப்பை, என் அப்பனே உன்னைப் பெற்ற எனக்கு அருள்வாயாக!

குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ் சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே! என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை! ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே! - திருக்குறுங்குடி வாமனா! திருவெள்ளறையின் செந்தாமரைக்கண்ணா! திருமாலிருஞ்சோலை அழகா! திருக்கண்ணபுரத்தமுதா! என் துயரம் களையமாட்டாயா? என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! ஏழுலகினுக்கும் இறைவா! ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

பொழிப்புரை:

பாலகன் கண்ணனைத் தங்கள் மடிமேல் இருத்தி, சிறுமியரும், பெண்களும் தங்கள் இல்லத்திற்கு அவனை அழைத்துச் சென்று, அவனுக்கு விருப்பமானவற்றை அளித்து, அவனுடன் விளையாடி மகிழும் காட்சியைக் காண்பவர்கள் தங்கள் கண்கள் குளிர கண்டு மகிழ்கின்றனர்; கற்றவர்களோ சொல்வதற்கு வார்த்தையின்றி அவன் மழலைச் சொல்லின் மயக்கத்தில் தடுமாறி நிற்கின்றனர். அத்தகைய ஒரு பேரானந்தத்தை உன்னைப் பெற்ற எனக்கும் அருள்வாயாக! பேரருளாளா! திருக்குறுங்குடி வாமனா! திருவெள்ளறையின் செந்தாமரைக்கண்ணா! திருமாலிருஞ்சோலை அழகா! திருக்கண்ணபுரத்தமுதா! என் துயரம் களையமாட்டாயா? என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! ஏழுலகினுக்கும் இறைவா! ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

6 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

அருமை
மிக்க நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஓ....மீளத் துவங்கியாச்சா? இதுக்குத் தான் முகில் சூழணும்-ங்கிறது! அப்ப தானே பாசுர மழை கொட்டும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!//

இதெல்லாம் என்னென்ன தலங்கள்? அத்தனையும் ஒரே பாசுரத்தில் ஆழ்வார் பாடுகிறாரா?

தமிழ் said...

அக்காரக்கனி – In Lover said...

அருமை
மிக்க நன்றி//

நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

தமிழ் said...

//மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!//

இதெல்லாம் என்னென்ன தலங்கள்? அத்தனையும் ஒரே பாசுரத்தில் ஆழ்வார் பாடுகிறாரா?//

வாங்க கேயாரெஸ்,

பாடல் இன்னும் படிக்கலையா... பதிவப் படிச்சுட்டு வாங்கோ... :-)

குறுங் குடியாய் - திருக்குறுங்குடி - வாமனன்
வெள்ளறையாய்- திருவெள்ளறை - செந்தாமரைக் கண்ணன்
சோலைமலைக் கரசே - திருமாலிருஞ்சோலை - கள்ளழர் கண்ண புரத்தமுதே - திருக்கண்ணபுரம் - நீலமேகப் பெருமாள்(மூலவர்); சௌரிராசப்பெருமாள் (உற்சவர்)

குமரன் (Kumaran) said...

தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் பெரியாழ்வார் பாசுரங்களைப் படிக்கலாம் போலிருக்கே. அருமையான சொற்களையும் சொற்கூட்டுகளையும் புழங்குகிறார் இந்தப் பாசுரத்தில் - ஒக்கலை, தம் இல், தெற்று இவர,....



பெரியாழ்வார் காலத்திலேயே சோலைமலையைச் சூழ்ந்து மதிள் இருந்திருக்கிறது பாருங்கள்; இன்றைக்கும் இடிபாடுகளுடன் மதில் இருக்கிறது.