Monday, August 24, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 8

பத்துநாளும் கடந்த இரண்டாநாள்*
எத்திசையும் சயமரம் கோடித்து*
மத்தமாமலை தாங்கிய மைந்தனை*
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே.

பொருள்:

பத்துநாளும் கடந்த இரண்டாநாள் - குழந்தை கண்ணன் பிறந்து பத்துநாள் கடந்துவிட்டது. அதன் பிறகு இரண்டாம் நாளன்று, அதாவது குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாள் ஆயர்பாடியில் நடந்த நிகழ்வுகளை இப்பாடலில் விவரிக்கிறார், பெரியாழ்வார். பன்னிரண்டாம் நாள் ஆயர்பாடியில் என்ன நடந்தது என்றால், குழந்தையை எந்த தீங்கும் அண்டக் கூடாது என்பதற்காக, புனித நீராட்டல் செய்வித்து, பெரியவர்கள் அனைவரும் கூடி வந்து குழந்தையைத் தங்கள் கைகளிலேந்தி, குழந்தைக்கு ஆசி கூறுவர். அந்த நிகழ்வினைத்தான் இந்த பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

எத்திசையும் சயமரம் கோடித்து - ஆயர்பாடியின் எல்லா இடங்களிலும், ஊரில் ஒரு தெரு விடாது, எல்லா இடங்களிலும் ன்னு சொல்வோம் ல்ல அதுதான்... நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்களை நட்டு, வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, வனப்பாய் சுயம்வரம் நடக்கும் இளவரசியின் அரண்மனையைப் போல் அலங்கரித்து, (சயமரம் - சுயம்வரம்; சயம் + மரம் - சயம் - வெற்றி, மரம் - தூண்; சயமரம் - சுயம்வரம்; சயம்வரம் - வெற்றித் தூண்)

மத்தமாமலை தாங்கிய மைந்தனை - மதங்கொண்ட ஆண்யானைகள் பல நிறைந்த கோவர்த்தன மலையைத் தன் விரலால் குடைப் போல் பிடித்து ஆயர்களைக் காத்த வீரமகனை; (மத்த - மதங்கொண்ட; மா - ஆண் யானை; மைந்தன் - மகன், வீரன்)

சிறுகதை:

ஆனாயர் கூடி அமைத்த விழவை* அமரர்தம்
கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் - மாலவன்.

ஆயர்கள் அனைவரும் கூடி, பலவகையான படையல்களிட்டு இந்திரனைச் சிறப்பு செய்யும் இந்திர விழாவினை, கண்ணன், ஆநிரைகள் பசிதீர புல் மேயும் கோவர்த்தன மலைக்குச் செய்யுமாறு ஆயர்களிடம் கூறினான். ஆயர்களும் அவ்வண்ணமே செய்ய, கோபமுற்ற இந்திரன், ஆயர்ப்பாடியில் கல்மழைப் பொழிவித்தான்.

ஏழு நாட்கள் தொடர்ந்து பெய்த கல்மழையிலிருந்து ஆயர்களையும், ஆநிரைகளையும் காக்க, சிறுவனான கண்ணன், கோவர்த்தன மலையையே குடையாய்ப் பிடித்து, அதனடியில் அனைவரையும் நிற்க வைத்து, கல்மழையிலிருந்து காத்தான்.

இறுதியாக, இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான்.


எனக்கு ஒரு சந்தேகம்... ஆயர்களும், ஆநிரைகளும் மலைக்கடியில போய் கல்மழையிலிருந்து தப்பிச்சாங்க... மலைமேல் இருந்தவை என்ன ஆயின??? யாராவது தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்களேன், தயவுசெய்து!! :-))


உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே - பிறந்த குழந்தையை உடனே எங்கும் வெளியில் கொண்டு வர மாட்டனர்; பத்து நாளுக்குப் பிறகு, ஏதேனும் ஒரு நல்ல நாளில், குழந்தைக்கு முறையான புனித நீராட்டல் (புண்ணிய ஸ்நானம்) செய்வித்து, அதனை, எந்த தீங்கும் அண்டாத வண்ணம் பூசை செய்து, அதன் பிறகே குழந்தையை, பிறந்ததிலிருந்து இருந்த அறையை விட்டு, வீட்டின் மற்ற இடங்களுக்குக் கொண்டு வருவர். அதுவரை, பெரும்பாலும் எல்லாரும் குழந்தையைத் தொட மாட்டனர். குழந்தையின் தாயும், தாயையும் சேயையும் பார்த்துக் கொள்ளும் செவிலி ஆகியோர் மட்டுமே குழந்தையைத் தொடுவர்; உத்தானம் செய்த பின்பே, மற்றவர்கள் குழந்தையைக் கையில் தூக்குவர். (உத்தானம் - உத்தாபனம் - குழந்தையைப் பிறந்த அறையினின்று வெளிக்கொணரும் நிகழ்ச்சி; உகந்தனர் - கையில் ஏந்திக் கொண்டனர்)

குழந்தையான கண்ணனுக்கு, புனித நீராட்டல் செய்த்து, அவன் பிறந்திருந்த அறையை விட்டு, அனைவரும் காணும் வண்ணம் வந்ததும், ஆயர் குல ஆண்களும் பெண்களும் அனைவரும் அவனைத் தங்கள் கைகளில் ஏந்தி பெருமகிழ்ச்சி கொண்டனர், ஆயர்கள்.

இதுவரை வந்த பாசுரத்தில் கூட எந்த பாடலிலும், கண்ணனைத் தங்கள் கைகளில் ஏந்தி கொஞ்சியதாக இல்லையே!

பேணிச் சீருடைப் பிள்ளைப் பிறந்தீனில்
காணத்தாம் புகுவார், புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேரில்லைக் காண் -
அப்படின்னு தான் சொல்லிருக்காரு.

ஒரு ஆணாக இருந்தும், குழந்தையைப் பற்றி் எவ்வளவு நுணுக்கமா சொல்லியிருக்காரு பாருங்க. பெரியாழ்வார், பெரிய ஆழ்வார்தான்!!! ஆண்டாள், சரியான நபரிடம் தான் கிடைக்கப்பெற்றாள். இல்லை, இவையெல்லாம் ஆண்டாளால் கொடுக்கப் பெற்றத் தாயுள்ளமோ?? ;-))

பதவுரை:

குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டி சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர். மதங்கொண்ட ஆண்யனைகள் நிறைந்த கோவர்த்தன மலையைத் தாங்கி, ஆயர்களையும், ஆநிரைகளையும் காத்த வீரமகனை, புனிதநீராட்டல் செய்ததும், ஆயர்கள் அனைவரும் குழந்தையான கண்ணனைத் தங்கள் கைகளில் ஏந்தி மகிழ்ந்தனர்.

24 comments:

Raghav said...

//ஒரு ஆணாக இருந்தும், குழந்தையைப் பற்றி் எவ்வளவு நுணுக்கமா சொல்லியிருக்காரு பாருங்க. பெரியாழ்வார், பெரிய ஆழ்வார்தான்!!! ஆண்டாள், சரியான நபரிடம் தான் கிடைக்கப்பெற்றாள். ;-))//

இல்லையா பின்னே? இராமன் பிறக்கும் முன் எப்படித் தன் தந்தையை தேர்ந்தெடுத்தானோ அது போலவே பூமிப் பிராட்டியும்

Raghav said...

//எனக்கு ஒரு சந்தேகம்... ஆயர்களும், ஆநிரைகளும் மலைக்கடியில போய் கல்மழையிலிருந்து தப்பிச்சாங்க... மலைமேல் இருந்தவை என்ன ஆயின??? யாராவது தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்களேன், தயவுசெய்து!! :-))//

அடடா.. நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க :)

ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவிலங்குகள் இருக்க சாத்தியமில்லை..மான் போன்ற விலங்கினங்கள் இருப்பின் அவையும் கீழிறங்கி வந்திருக்க வேண்டும்..

எனக்கொரு சந்தேகம்.. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்று தானே உள்ளது.. கல்மழையா பொழிந்தது ?

Radha said...

raghav said...
//எனக்கொரு சந்தேகம்.. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்று தானே உள்ளது.. கல்மழையா பொழிந்தது ? //
"கல் எடுத்துக் கல்மாரி காத்தாய் ! என்றும்..."
(திருநெடுந்தாண்டகம் - 13)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ்
நம்ம ராதாவுக்கு போட்டியா....

குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))
- திருவாய்மொழி

கல் மழையா? குளிர் மழையா?
ஹிஹி!
ரெண்டுமே தாம்பா!
சாதாரண மழையே குளிரும்!
ஐஸ் கட்டியா கல் மழை பெஞ்சா, இன்னும் தான் குளிரும்! :)

குளிர் கல் மழை!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Raghav said...
//எனக்கு ஒரு சந்தேகம்... ஆயர்களும், ஆநிரைகளும் மலைக்கடியில போய் கல்மழையிலிருந்து தப்பிச்சாங்க... மலைமேல் இருந்தவை என்ன ஆயின??? யாராவது தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்களேன், தயவுசெய்து!! :-))//

யோவ்! என்ன நடக்குது இங்கிட்டு? பதிவு போடறவங்களே கேள்விய கேட்டா எப்படி? இடலிக் கடைக் காரவுங்களே இட்லியைச் சாப்பிட்டா எப்படி? :))

அந்த இட்லிக் கேள்விகளுக்கெல்லாம் ராகவ் ராகவ்-ன்னு ஒருத்தன் இருக்கான்! அவன் வந்து கேப்பான்! அப்பாடா! அவன் பந்தல்-ல்ல இருந்து இங்க ஷிஃப்ட் ஆகணும்-ன்னு நெனச்சது, இம்புட்டு சீக்கிரம் வொர்க் அவுட் ஆகுதே! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவிலங்குகள் இருக்க சாத்தியமில்லை..//

அப்பறம் எதுக்கு கூர் வேல் கொடுந் தொழிலன்? :)
மலைப் பாம்பு உருவில் வந்த அரக்கர்கள்?
யமுனா நதிக் கரையில் கோரமான மிருகங்கள் உண்டு-ன்னு பாட்டு கூட வருதே, மாடு மேய்க்கும் கண்ணா-வில்? :))

ராகவ், ஒழுங்கா பதில் சொல்லுப்பா! அடியேன் ஐயப்பாடுகளை நீக்கி அருளப் பண்ணுமாறு விஞ்ஞாபிக்கிறேன்! :))

தமிழ் said...

வாங்க! வாங்க!:-))

கொஞ்சம் தாமதாமாயிடுச்சு, மன்னிச்சுடுங்க!

தமிழ் said...

இல்லையா பின்னே? இராமன் பிறக்கும் முன் எப்படித் தன் தந்தையை தேர்ந்தெடுத்தானோ அது போலவே பூமிப் பிராட்டியும்//

-----------------

வாங்க இராகவ்! தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாங்க... ;-))

தமிழ் said...

அடடா.. நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க :)//


எல்லாராலயும் எளிமையா செய்ய முடியறது ரெண்டு-

1. கேள்வி கேக்கறது
2. அறிவுரை கூறுவது ;-))

சரி பரவாயில்ல, நீங்களும் இன்னொருமுறை அதே கேள்விய கேளுங்க.... :-))
----------
ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவிலங்குகள் இருக்க சாத்தியமில்லை..மான் போன்ற விலங்கினங்கள் இருப்பின் அவையும் கீழிறங்கி வந்திருக்க வேண்டும்..//

ஆனா, பாடல்ல சொல்லும் போது, ''மதம் கொண்ட ஆண் யானைகள் நிறைந்த கோவர்த்தன மலை'' ன்னு தான சொல்றாரு ஆழ்வார்.
------

எனக்கொரு சந்தேகம்.. //

கேளுங்க, கேளுங்க.... கேட்டுகிட்டே இருங்க...
---------

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்று தானே உள்ளது.. கல்மழையா பொழிந்தது ?//

கேயாரெஸ் சொன்ன மாதிரி, அது ''ஆலங்கட்டி மழை''
சாதாரண குளிர் மழையாக இருந்தா, வெள்ளப்பெருக்கு எடுத்து எல்லாரும் குன்று மேலத்தானப் போய் நிப்பாங்க... ;-))

தமிழ் said...

radha said...
//எனக்கொரு சந்தேகம்.. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் என்று தானே உள்ளது.. கல்மழையா பொழிந்தது ? //
"கல் எடுத்துக் கல்மாரி காத்தாய் ! என்றும்..."
(திருநெடுந்தாண்டகம் - 13)//

வாங்க ''பாசுர புலி'' இராதா அவர்களே... பாசுர பதிலுக்கு மிக்க நன்றி ;-))

தமிழ் said...

@கேயாரெஸ்...

நம்ம ராதாவுக்கு போட்டியா....//

ஹி ஹி ஹி அதானே...
.............

குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))
- திருவாய்மொழி

கல் மழையா? குளிர் மழையா?
ஹிஹி!
ரெண்டுமே தாம்பா!
சாதாரண மழையே குளிரும்!
ஐஸ் கட்டியா கல் மழை பெஞ்சா, இன்னும் தான் குளிரும்! :)//

பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி கேயாரெஸ் ;-))
----------
குளிர் கல் மழை!!//

எஸ்ஸு... ஆலங்கட்டி மழை!!!

தமிழ் said...

@KRS...
யோவ்! என்ன நடக்குது இங்கிட்டு? பதிவு போடறவங்களே கேள்விய கேட்டா எப்படி? இடலிக் கடைக் காரவுங்களே இட்லியைச் சாப்பிட்டா எப்படி? :))//

இட்லிக் கடைக் காரவுங்களுக்கும் பசிக்கும் தானே... ஹி ஹி ஹி...

தமிழ் said...

@KRS...
அந்த இட்லிக் கேள்விகளுக்கெல்லாம் ராகவ் ராகவ்-ன்னு ஒருத்தன் இருக்கான்! அவன் வந்து கேப்பான்! அப்பாடா! அவன் பந்தல்-ல்ல இருந்து இங்க ஷிஃப்ட் ஆகணும்-ன்னு நெனச்சது, இம்புட்டு சீக்கிரம் வொர்க் அவுட் ஆகுதே! :))//

என்னங்க சொல்றீங்க??? ;-))

தமிழ் said...

@KRS...

//ஆநிரைகள் மேய்க்கின்ற மலையாதலால் கட்டாயம் கொடியவிலங்குகள் இருக்க சாத்தியமில்லை..//

அப்பறம் எதுக்கு கூர் வேல் கொடுந் தொழிலன்? :)
மலைப் பாம்பு உருவில் வந்த அரக்கர்கள்?
யமுனா நதிக் கரையில் கோரமான மிருகங்கள் உண்டு-ன்னு பாட்டு கூட வருதே, மாடு மேய்க்கும் கண்ணா-வில்? :))

ராகவ், ஒழுங்கா பதில் சொல்லுப்பா! அடியேன் ஐயப்பாடுகளை நீக்கி அருளப் பண்ணுமாறு விஞ்ஞாபிக்கிறேன்! :))//

ஆநிரைகள் மேய்க்கும் இடங்களிலும் கொடிய விலங்குகள் இருக்கும்...

சமுதாய மிருகம் இருக்கற இடங்கல தவிர மற்ற இடங்கள் ல்ல இருக்கும்...

ஆநிரைகளைப் பிடித்து அடித்து உண்பதற்காகவே, நரி, ஓநாய் போன்றவை எல்லாம் வரும்... ஆநிரை மேய்க்கறவங்க கொஞ்சம் அசந்தாலோ, ஏதாவது ஆடோ மாடோ தனியாப் போய் மேய்ஞ்சாவோ அவ்வளவுதான்.... நரி புடிச்சிட்டுப் போயிடும்... :-))

தமிழ் said...

@KRS...
அப்பறம் எதுக்கு கூர் வேல் கொடுந் தொழிலன்? :)
மலைப் பாம்பு உருவில் வந்த அரக்கர்கள்?
யமுனா நதிக் கரையில் கோரமான மிருகங்கள் உண்டு-ன்னு பாட்டு கூட வருதே, மாடு மேய்க்கும் கண்ணா-வில்? :))

ஆயர்கள் கூர்வேல், கொடுமழு வைத்திருப்பது நரி, ஓநாய், பாம்பு, மலைப்பாம்பு, புலி போன்ற விலங்குகள் கிட்ட இருந்து ஆநிரைகளைக் காப்பற்றவும், உயரமான இடங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தழைகளோ, கொடிகளோ இருந்தால் அவற்றைப் பறிப்பதற்கும் வைத்திருப்பர்..

Radha said...

dear tamizh,
your blog is looking fantastic !!
i am planning to come to your blog regularly...pls address me as radha alone... without any adjectives...puli kilinnu solli enakku kiliya undaakaadheenga. :-)

adiyaargal thiruvadigale saranam !!
aazhwaargal thiruvadigale saranam !!
~
radha

தமிழ் said...

dear tamizh,
your blog is looking fantastic !!
i am planning to come to your blog regularly...pls address me as radha alone... without any adjectives...puli kilinnu solli enakku kiliya undaakaadheenga. :-)

adiyaargal thiruvadigale saranam !!
aazhwaargal thiruvadigale saranam !!
~
radha//

ரொம்ப நன்றிங்க இராதா...

இந்த வலைப்பூவே முழுவதும் ஆழ்வார்களுக்குச் சொந்தமானது. ஆழ்வார்கள் பேருள்ளம் கொண்டு, அருளிச் செய்த பாசுரங்களை, அவர்களின் கருணையினால் இங்கு விவரிக்கின்றோம்...

ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!

சரிங்க இராதா,
உங்கள அப்படியே கூப்பிடறேன்... புலி, கிளின்னு ல்லாம் கூப்படல... ;-))

''பாசுரப் புயல்'' னு மட்டும் கூப்புட்டுக்கறேன்.... ;-))

நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்பது, தமிழ் அமிழ்தால் நிறைந்த ஆன்மீகக் கடல்... நாங்க இப்பத்தான் கரையிலயே கால் வெச்சுருக்கோம்.... ஆனா நீங்க... கடலையே கரைத்துக் குடித்திருக்கின்றீர்கள்!! ஆழ்வார்களின் பேரருள் நிறைந்த தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்கிறோம்!!

ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!
அடியவர்கள் திருவடிகளே சரணம்!!
ஓம் நமோ நாராயணாய!!

நாடி நாடி நரசிங்கா! said...

குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))
- திருவாய்மொழி
கல் மழையா? குளிர் மழையா?

Periyalwar 7-4-10 - ---- தீ மழை engiraare!!!!

நாடி நாடி நரசிங்கா! said...

குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))
- திருவாய்மொழி
கல் மழையா? குளிர் மழையா?

7-4-10 - ---- தீ மழை engiraare!!!!

சாரீ not பெரியாழ்வார்
நம்மாழ்வார் - 7-4-10

தமிழ் said...

Rajesh Narayanan said...

குன்றம் ஏந்திக் "குளிர் மழை" காத்தவன்! :)))
- திருவாய்மொழி
கல் மழையா? குளிர் மழையா?

7-4-10 - ---- தீ மழை engiraare!!!!

சாரீ not பெரியாழ்வார்
நம்மாழ்வார் - 7-4-10//

மேய்நிரை கீழ்புக மாபுரள* சுனை
வாய்நிறைநீர் பிளிறிச் சொரிய* இன
ஆநிரை பாடி அங்கேயொடுங்க* அப்பன்
(தீமழை) காத்துக் குன்றமெடுத்தானே.

-திருவாய்மொழி 7 - 4 - 10

பெரும் மழை வீசியதால், கண்ணன் கோவர்த்தன மலையைப் பெயர்த்தெடுத்து, மக்களும் மாக்களும் மலைகீழ் ஒதுங்கி, அவர்களுக்குத் தீமை விளைவித்த அந்த புயல் மழையிலிருந்து காத்தான் இறைவன்!

அதாவது, தீ என்னும் சொல் இங்கு (தீமை) என்னும் பொருளைத் தருகிறது. :-))

நாடி நாடி நரசிங்கா! said...

நல்ல விளக்கம் நன்றி நன்றி நன்றி

குமரன் (Kumaran) said...

பாடல் விளக்கமும் பின்னூட்ட விளக்கங்களும் படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

தமிழ் said...

Rajesh Narayanan said...

நல்ல விளக்கம் நன்றி நன்றி நன்றி//

தொடர்ந்து வரவும்!!

U WELCOME ன்னா தமிழ்ல்ல இதுதானே... ;-))

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

பாடல் விளக்கமும் பின்னூட்ட விளக்கங்களும் படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி.//

வருகைக்கு மிக்க நன்றி குமரன். தொடர்ந்து வருகைத்தர வேண்டுகிறோம்.