Tuesday, November 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல் 4

சக்கரக்கையன் தடங்கண்ணால் மலரவிழித்து*
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண்*
தக்கதறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே*
மக்கட்பெறாத மலடனல்லையேல்வா கண்டாய்.

பொருள்:

குட்டிக்கண்ணன், தள்ளி நின்று தன் தாயிடம் மேகங்களினின்று கண்ணாமூச்சி ஆடுகின்ற நிலவினைக் காட்டிக் காட்டி அழைத்துப் பார்த்தான். அப்பவும் நிலவு தன்னிடத்து வராததால், இப்போது தாயின் இடுப்பிலே ஏறி நின்று பிடிவாதமாய் நிலவினைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.



சக்கரக்கையன் தடங்கண்ணால் மலரவிழித்து -
உன்னினும் பொலிவுடைய, வடிவான சுதர்சன சக்கரத்தைக் கொண்டிருப்பவன் என் மகன்; தன் பெரிய அழகிய கண்கள் விரிய உன்னையே பார்த்து

ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண் -
வேங்கட மாமலை மேல் வீற்றிருப்பவன், இப்போது என் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, என் தாவாயைத் திருப்பித் திருப்பி, உன்னையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகின்றதைப் பார் சந்திரனே! (ஒக்கலை - இடுப்பு)

தக்கதறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே -
இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லையா சந்திரா! பிடிவாதம் செய்யாமல் இறங்கி வந்து இந்த கார்மேகத்துடன் விளையாடுவாயாக (சலம் - பிடிவாதம்)

மக்கட்பெறாத மலடனல்லையேல் வா கண்டாய் -
ஒரு மழலையின் விருப்பம் உனக்குப் புரியவில்லையா? மக்கட் செல்வம் வாய்க்கப் பெறாத மலடனல்லவே நீ. ஆகவே, உடனடியாக நீ இங்கே, இவ்விடத்தில் வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக.

பதவுரை:


யசோதை அன்னை, 'தன் இறைவனான கண்ணன், சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பவன்; அவன், என் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, தன்னுடைய பெரிய அழகிய கண்களை விரிய விரித்து, உன்னையே சுட்டிக்காட்டுகிறான் பார். மக்களைப் பெற்ற உனக்கு இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லையா? பிடிவாதம் செய்யாமல், உடனடியாக வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக வெண்ணிலவே!,' என்று நிலவினை கண்ணனுடன் விளையாட விளிக்கின்றாள்.

6 comments:

Anonymous said...

அச்சோ என்னங்க இது!
யசோதை இப்படியெல்லாம் பாசம் காட்டினாங்களா!!
ஒரு தாயாகவே மாறி இருக்கிறார் பெரியாழ்வார்.
நம்மையும் தாயாகவே மாற்றி விட்டார்.
பெரியாழ்வார்தான் யசோதையா பிறந்திருப்பாரோ!!!!!

இவ்வளவு அன்பானதா தாயுள்ளம்!!!
அமிர்தம் .

Radha said...

//சலம் - பிடிவாதம்;//
புதிய வார்த்தை அறிந்து கொண்டேன்.
நன்றி.
//சக்கரக்கையன்//
கண்ணன் கைகளில் சங்கு சக்கர ரேகைகள் இருக்கும் என்று படித்துள்ளேன். சக்கரக்கையன் என்பது சக்கர ரேகை பதிந்துள்ள கரத்தினை குறிக்கும் என்றும் உரை சொல்கின்றனர்.(இதற்கு முன்பே ஒரு பாசுரத்தில் சொல்ல நினைத்து மறந்து விட்டேன்.)

தமிழ் said...

srikamalakkanniamman said...

அச்சோ என்னங்க இது!
யசோதை இப்படியெல்லாம் பாசம் காட்டினாங்களா!!
ஒரு தாயாகவே மாறி இருக்கிறார் பெரியாழ்வார்.
நம்மையும் தாயாகவே மாற்றி விட்டார்.
பெரியாழ்வார்தான் யசோதையா பிறந்திருப்பாரோ!!!!!

இவ்வளவு அன்பானதா தாயுள்ளம்!!!
அமிர்தம் .//

யசோதைதான் பெரியாழ்வாராகப் பிறந்திருக்க வாய்ப்புகள் உண்டு :-))

பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடல்களிலேயே நம்மைத் தாயாக மாற்றிவிட்டார்... :-)

தமிழ் said...

Radha said...

//சலம் - பிடிவாதம்;//
புதிய வார்த்தை அறிந்து கொண்டேன்.
நன்றி.
//சக்கரக்கையன்//
கண்ணன் கைகளில் சங்கு சக்கர ரேகைகள் இருக்கும் என்று படித்துள்ளேன். சக்கரக்கையன் என்பது சக்கர ரேகை பதிந்துள்ள கரத்தினை குறிக்கும் என்றும் உரை சொல்கின்றனர்.(இதற்கு முன்பே ஒரு பாசுரத்தில் சொல்ல நினைத்து மறந்து விட்டேன்.

ஆர்வத்திற்கு மிகுந்த நன்றி இராதா ஐயா!

நீங்கள் சொல்ல நினைத்தது 1 - 2 - 12 ஆம் பாடலாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற.... ... நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய என்று வரும் அல்லவா. :-))

குமரன் (Kumaran) said...

மக்கள் பெறாத மலடன் அல்லையேல்?! வாவ். என்ன ஒரு கொக்கி?! அருமை.

சலம் என்றால் சினம், பொய்மை, ஏமாற்றுதல், வஞ்சனை போன்ற பொருட்களும் உண்டு. இங்கே பிடிவாதம் பொருத்தம் என்று தமிழ் எண்ணினார் போலும்.

குமரன் (Kumaran) said...
This comment has been removed by the author.