Thursday, November 19, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 1
குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா!
ஊழிதோ றூழிபல ஆலிலை யதன்மேல்*
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே!

பங்கயநீள் நயனத்து அஞ்சன மேனியனே*

செய்யவள் நின்னகலம் சேம மெனக்கருதிச்

செலவுபொலி மகரக் காது திகழ்ந்திலக*
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.



பொருள்:


செங்கீரைப்பருவம் -
குழந்தையின் ஒரு காலை மடக்கி, மறுகாலை நீட்டி, இரு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடச் சொல்லும் பருவம்.


உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா! ஊழிதோறூழி பல - இவ்வுலகம் தோன்றிய காலத்திற்கு முன்னமிருந்தே, எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது, ஊழிப் பேரழிவின் போது அவற்றையெல்லாம் தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாக்கின்ற பரம்பொருளே!

ஆலிலை அதன் மேல் பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே -
சின்னஞ்சிறிய ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளே.

பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே -
வெண்தாமரை இதழ்களைப் போல் நீண்ட கண்களையுடைய கருமேக தேகங்கொண்டவனே


செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதிச் செலவு பொலி மகரக் காது திகழ்ந்திலக - பொலி மகரக்காது திகழ்ந்திலக, செய்யவள் நின் அகலம் சேமமெனக் கருதிச் செலவு -
நின் சின்னஞ்சிறு காதுகளில், விளக்கமாய் அமைந்து, மிகுவாய் பொலிகின்ற அந்த அழகிய குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம், உன் இதயத் தாமரையில், என்றும் நீக்கமற நிறைந்துள்ள திருமகளை எண்ணிக் கொண்டே அசைந்தாடுவாயாக

ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே -
எங்கள் குலத் தலைவனே, எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக. ஆயர் குலத்தில் தோன்றிய, போர் செய்ய வல்ல காளையைப் போன்றவனே ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக!

பதவுரை:


பரம்பொருளே! எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு, ஊழிப் பேரழிவின் போது அவற்றையெல்லாம் தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாத்து, ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளே! வெண்தாமரை மலரின் இதழ்களைப் போல் நீண்ட கண்களையுடைய கருமேக தேகங்கொண்டவனே! நின் சின்னஞ்சிறு காதுகளில், விளக்கமாய் அமைந்து, மிகுவாய் பொலிகின்ற அந்த அழகிய குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம், உன் இதயத் தாமரையில், என்றும் நீக்கமற நிறைந்துள்ள திருமகளை எண்ணிக் கொண்டே, எங்கள் குலத் தலைவனே, எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக. ஆயர் குலத்தில் தோன்றிய, போர் செய்ய வல்ல காளையைப் போன்றவனே ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக!

2 comments:

Radha said...

செங்கீரை பருவத்திற்கான படம் மிக அருமை. :)

தமிழ் said...

Radha said...

செங்கீரை பருவத்திற்கான படம் மிக அருமை. :)//

மிக்க நன்றி இராதா ஐயா!