Monday, November 9, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் -
குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல் 1


குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்.

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்*
பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்*
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ!*
நின்முகம் கண்ணுளவாகில் நீஇங்கே நோக்கிப்போ.

அன்னை மடியிலேயே அளவளாவிக் கொண்டு, அவள் மருங்கினையும், உதரத்தினையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்த குறும்பன், இப்பொழுது சிறிது வளர்ந்துவிட்டான்.

மாளிகையில் அங்கும் இங்கும் தானே தவழ்ந்து போகிறான். எங்கெல்லாம் வெண்ணெய் இருக்கின்றதென்பதையும்; அப்படியே வெண்ணெய்த் திருடி அகப்பட்டுக் கொண்டாலும் எங்கெல்லாம் சென்று மறைந்துக்கொள்ளலாம் என்பதையும் அறிந்து கொள்கிறான்... :-))

சித்திரை மாத நிலவு வருது, வழி விடு வழிவிடு மேகமே வழி விடு என்பது போல், மாளிகையின் உள்ளே இண்டு இடுக்குகளில் சென்றுவிடுவதால், கண்ணனை, மாளிகையின் பெரிய முற்றத்தின் பரந்த வெளியில் விளையாட விடுகிறாள். அங்கே கண்ணன் தனியாக விளையாடுவதால், குழந்தையுடன் விளையாட வருமாறு வைகாசி நிலவினையும் துணைக்கு அழைக்கின்றாள், தாய்.

பொருள்:

தன்முகத்துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய் -
என்னப்பா இது, ஒரே நகைச்சுவையா இருக்கு... நெற்றிச்சுட்டிக் கூடத் தூங்குமா? அப்படியே தூங்கினாலும் அது எப்படி தவழ்ந்து போகும் ன்னு ரொம்ப ல்லாம் யோசிக்கவே வேணாம். :-))

குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றது.

(தூங்கல் - ஊசல் ஆடுதல், தொங்குதல் என்பது பொதுவான பொருள். தூக்கணங்குருவி - தொங்குகின்ற கூட்டினையுடைய குருவி, தூக்கணக்கயிறு - உறி -- நினைவில் இருக்கின்றதா)

பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் - அவனது காற் சதங்கைகளில் கோர்த்துள்ள பொன்னாலான கிண்கிணிகள் ஒலியெழுப்ப, தேகமெங்கும் புழுதியாகுமாறு மணலில் விளையாடுகின்றான்.

(கிண்கிணி - சதங்கைகளில் தொங்குகின்ற மணிகள்; புழுதி - மண்துகள்; அளைதல் - கலந்திருத்தல்)

என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ! -
என் மகன் கோவிந்தன், புழுதி மணலில், புரண்டு புரண்டு ஆடுகின்ற, விளையாடுகின்ற அழகினை அந்தி நேரத்தின் அழகிய முழு நிலவேஏஏ!

(இளமாமதி - இளமதி + மாமதி இளமதி - மாலைநேரத்தில் இருக்கின்ற நிலவு; அதாவது காலையில் உதயமாகின்ற இளங்கதிர் வீசுகின்ற சூரியனை இளஞ்சூரியன் என்பது போல் மாலையில் சிறிது சிறிதாகத் தன் ப்ளாட்டின ஒளிக்கதிர்களை வீசுகின்ற நிலா - இளநிலா, மதி - நிலா; மாமதி - வட்டமான முழுநிலவு, பௌர்ணமி நிலா)

நின்முகம் கண்ணுளவாகில் நீஇங்கே நோக்கிப்போ - உன் வட்ட முகத்தில் கண்ணிருக்கின்றதென்றால், நீ என் மகன் கோவிந்தன் விளையாடும் இடம் நோக்கிப் போவாயாக.

பதவுரை:

யசோதை அன்னை, குழந்தை கண்ணன் புழுதிமணலில் விளையாடுவதைப் பற்றி பாடுகிறார்:

குட்டிக் கண்ணனின் நெற்றியில் உள்ள சுட்டி வேகமாய் ஆட, விரைந்து மணற்முற்றத்திற்குத் தவழ்ந்து செல்கின்றான்; அங்கே அவன் கால் சதங்கையில் தொங்குகின்ற பொன்னாலான கிண்கிணிகள் மிகுவாய் ஒலி எழுப்ப, அங்கும் இங்கும் அலைந்து, அவன் தேகம் முழுவதும் புழுதியாகும் வண்ணம் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுகின்றான் என்மகன். தன் மகன் தனியே விளையாடுவதைப்பார்த்த யசோதை அன்னை, நிலவினை நோக்கி, ' மாலைப் பொழுதில் ஞாயிறு மயங்கியதும், வெள்ளொளி வீசுகின்ற வெள்ளிநிலவேஏ! இங்கே என்மகன் கோவிந்தன் புழுதி மணலில் ஆடுகின்ற கூத்தினைப் பார். வட்டமான உன் முகத்தில் எங்கேனும் கண் இருக்குமானால், நீ என் மகன் விளையாடுகின்ற இடம் நோக்கிப் போய் அவனுடன் விளையாடுவாயாக', என்று கூறுகிறாள்.

6 comments:

Anonymous said...

புழுதியில் கண்ணன் விளையாடுவது நம்மையும்
சிறு வயதிற்கு கூட்டி செல்கிறது .
வாங்க தமிழ் . வருக வருக !

இந்த krs .. radha எங்க போனாருன்னு தெரியல் . அவர் பதிவில் இருந்து பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.

Radha said...

ஆஹா ! கண்ணன் தவழும் அழகை அருமையாக வடித்திருக்கிறார்.
இந்தப் பாடல் மனப்பாடமாக தெரியும். இப்பொழுது பொருள் புரியும் பொழுது இனிமையாக இருக்கிறது.

தமிழ் said...

srikamalakkanniamman said...

புழுதியில் கண்ணன் விளையாடுவது நம்மையும்
சிறு வயதிற்கு கூட்டி செல்கிறது .
வாங்க தமிழ் . வருக வருக !//

வரவேற்புக்கு மனமார்ந்த நன்றிகள்!! :-)) உண்மையிலேயே, பெரியாழ்வாரோட பாடல்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளன. ஒவ்வொரு வார்த்தைகளும் உணர்வுப்பூர்வமாக வடித்திருக்கிறார். He is great! :-))
--------------------
இந்த krs .. radha எங்க போனாருன்னு தெரியல் . அவர் பதிவில் இருந்து பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.//

இந்த வரிசையிலும் குமரன் ஐயாவும்!! :-) எனக்கும் தெரியல... எங்க இருக்காங்கன்னு...

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு ல கொடுத்தரலாமா இவங்க பெயர.... ;-)

தமிழ் said...

Radha said...

ஆஹா ! கண்ணன் தவழும் அழகை அருமையாக வடித்திருக்கிறார்.
இந்தப் பாடல் மனப்பாடமாக தெரியும். இப்பொழுது பொருள் புரியும் பொழுது இனிமையாக இருக்கிறது.//

வாங்க இராதா ஐயா... :-))

உண்மைதான், அம்மாக்கள் கூட இந்த அளவுக்குத் தங்களோட குழந்தைகள நேசிச்சுருப்பாங்களா ன்னு தெரியாது... :-)

குமரன் (Kumaran) said...

நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ! - என்ன அழகான வரி?! :-)

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ! - என்ன அழகான வரி?! :-)//

உண்மைதான் குமரன் ஐயா. நாலாயிரமே அழகானது! நவமணிகளால் கோர்த்த மாலையைப் போன்றது இந்த பிரபந்தம்! ஒவ்வொரு வரியும் உண்மையிலேயே அழகானவை!