Wednesday, September 9, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை

பாடல் - 10

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகைமூட*
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட*
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க* அன்று
அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ.
(அருமறை - ஆர்மறை என்று பாடம்)




பதவுரை:

மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட* - இம்மண்ணில் என்றும் நிலைபெற்ற, உயர்ந்த வேதங்கள் நான்கும் முற்றிலும் மறைந்திட (மன்னிய - நிலைபெற்ற, உயர்வான; நான்மறை - நான்கு மறை; முற்றும் - முழுவதும் )

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகைமூட* - வேதங்கள் நான்கும் மறைந்துவிட்டமையால் அடர்ந்து, செறிந்த பேரிருள் சூழ்ந்து உலகை மூட (துன்னிய - நெருங்கிய )

பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க* அன்று - இவ்வுலகில் பேரிருள் சூழ்ந்தபின் அவ்விருளை நீக்குவதற்காக அன்று (பின்னிவ்வுலகினில் - பின் இவ்வுலகினில், பேரிருள் - அடர்ந்த இருள்; நீங்க - விலக்க, அன்று - அன்றைய நாளில்)

அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ. (அருமறை - ஆர்மறை என்று பாடம்) - அன்னமாய் திருவவதாரம் புரிந்தவனே அச்சோவச்சோ! வேதங்களை மீட்டு, இவ்வுலகிற்கு ஒளியை அளித்தவனே அச்சோவச்சோ (அன்னமதானானே - அன்னம் அது ஆனானே - அன்னமாகத் திருவவதாரம் புரிந்தவனே; அருமறை - அரிதான வேதம்)

பொருளுரை:

உயர்ந்த வேதங்கள் நான்கும் மறைந்திட்டமையால், அடர்ந்த பேரிருள் எங்கும் சூழ்ந்து இவ்வுலகை மூட, பின்னர், இந்த உலகின் இருளை அகற்றி ஞான ஒளியைத தருவதற்காக அன்று அன்னமாகத் திருவவதாரம் புரிந்தவனே அணைத்துக் கொள்ள வருவாயாக! அரிய வேதங்களை மீட்டு அகிலத்திற்கு ஒளியைத் தந்தவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!



No comments: