Wednesday, September 16, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 1



பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே
(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
பாடல் - 1

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்

வட்டு நடுவே வளர்கின்ற* மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்*
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க* என்
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.
(~ நுனையில் - நுனியில்)


பதவுரை:

வட்டு நடுவே வளர்கின்ற* மாணிக்க - வட்டுவின் நடுவில் வளர்கின்ற மாணிக்க மொட்டு (வட்டு -  பந்து, உருண்ட, திரட்சி, round; வட்டுக்கருப்பட்டி - கருப்பட்டி வெல்ல உருண்டை, jaggery ball;)
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்* - மாணிக்க மொட்டுவின் நுனியில் (நவரத்தினங்கள், நவமணிகள்: 

கோமேதகம் - Hessonite,

முத்து - Pearl,                 பவளம் - Coral,

வைரம் - Diamond,         வைடூரியம் - Lapis Lazuli; Cat’s Eye,

மரகதம் - Emerald,         மாணிக்கம் - Ruby,

நீலம் - Blue Sapphire,     புட்பராகம் - Yellow Sapphire; Topaz.)


சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க* என் - சிறு சிறு துளிகளாய்த் துளிக்கத் துளிக்க (சொட்டு - துளி)
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான். - என் மகன் வந்து என்னைப் பின்புறமாக வந்து அணைத்துக் கொள்வான், கோவிந்தன் என்னை அணைத்துக் கொள்வான்.   (குட்டன் - சிறுவன்; புறம் புல்குதல் - பின்புறமாக கட்டித் தழுவுதல்)

இங்கு புறம் புல்குவான் என்பதை, அணைத்துக் கொண்டான் என்று இறந்த காலத்தைக் குறிக்கிறதா அல்லது அணைத்துக் கொள்வான் என்று எதிர்காலத்தைக் குறிப்பதாய் வருகிறதா என்று குழப்பம் வரலாம். குழந்தைத் தன் தாயை ஒரு முறை மட்டும் அணைத்துக் கொள்வதில்லை. அதாவது, தன்னை எப்படியெல்லாம் முன்பு அணைத்துக் கொண்டானோ, அதுபோல இனிமேலும் என்னை வந்து என் குழந்தை அணைத்துக் கொள்வான் என்று உரைப்பது போல் புறம்புல்குவான் என்கிறார் பெரியாழ்வார்.

பொருளுரை:

இப்பாசுரத்தில் குழந்தை கண்ணனின் திருவுறுப்பை நேரடியாகக் குறிப்பிடாமல், உவமானப் பொருள்களை மட்டும் கூறி  பொருளைக் குறிப்பால் உணரவைக்கிறார். 

உருண்டு திரண்ட வட்டு (பந்து) நடுவில் வளர்கின்ற மாணிக்க(திருவுறுப்பு) மொட்டின் நுனியில், முளைக்கின்ற முத்தைப் போல் சிறு சிறுத் துளிகளாய் சிறுநீர் (முத்துத் துளிகள்) துளிகள், துளிக்கத்துளிக்க ஓடி வந்து என் பிள்ளை என்னை அணைத்துக் கொள்வான். கோவிந்தன் என்னை அணைத்துக் கொள்வான். 

No comments: