Tuesday, September 8, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் - 9

கண்ட கடலும் மலையும் உலகேழும்*
முண்டத்துக் காற்றா முகில்வண்ணாவோ! என்று*
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள*
மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ.





பதவுரை:

கண்ட கடலும் மலையும் உலகேழும்* - கண்ணில் தென்பட்ட அலைகடல் முதல் வானுயர்ந்த மலைகள் உட்பட ஏழு உலகும் (கண்ட - கண்ணில் தென்பட்ட)

முண்டத்துக் காற்றா முகில்வண்ணாவோ! என்று* - என் கையில் உள்ள இந்த பிரம்மக் கபாலத்திற்குப் போதவில்லையே முகில் வண்ணனே நாராயணா! ஓ! என்று  (முண்டத்துக்கு - கபாலத்திற்கு முண்டம்~தலை; ஆற்றா - ஆற்றவில்லை, போதவில்லை; முகில்வண்ணா, ஓ! என்று - ஓ! முகில் வண்ணா என்று அழைக்கிறார் சிவபெருமான்)

இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள* - சடைமுடியில் மாலையணிந்த ஈசன் இரந்துக் கேட்க (இண்டை - மாலை, பூமாலை; ஈசன் - சிவபெருமான்; இரக் கொள்ள - யாசிக்க, பிச்சைக் கேட்க )



மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ. - சிவபெருமானின் கையிலிருந்த பிரம்ம கபாலத்தை நிறைத்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! தன் திருமார்பில் ஸ்ரீவத்சம் என்று அழைக்கப்படும் திருமகளின் அடையாளமான மருவினை உடையவனே அச்சோவச்சோ!  (மண்டை நிறைத்தானே - சிவபெருமான் கையில் திருவோடாயிருந்த பிரம்மகபாலத்தை நிறைத்த மகாவிஷ்ணு; மார்வில் - மார்பில்; மறுவனே - மறு, மச்சமுடையவனே )

பொருளுரை:

! முகில்வண்ணா! அண்டமுழுவதும் கண்ணில் தென்பட்ட இடமெங்கும், ஆழ்கடலும் வானளாவிய மலைகளும் அனைத்து உலகங்களும் என் கையில் திருவோடாய் உள்ள இந்த பிரம்ம கபாலத்திற்குப் போதவில்லையே என்று இரந்து கேட்ட சிவபெருமானின் கையிலிருந்த பிரம்ம கபாலத்தை நிறைத்தவனே என்னை அனணைத்துக் கொள்ள வருவாயாக! தன் திருமார்பில்  திருமகளின் வடிவமான ஸ்ரீவத்சம் என்னும் மறுவினை உடையவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!

No comments: