Wednesday, September 30, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 2
உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ

பொருள்:

உடையார் கனமணியோடு ஓண்மா துளம்பூ - பெருஞ்செலவம் உடையவர்களிடம் மட்டுமே இருக்கக் கூடிய சிறப்பு வாய்ந்த மணிகளோடு அழகிய மாதுளம்பூவை

கனம் - சிறப்பு
ஒண் - ஒப்பற்ற, சிறந்த

இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு - இடையே கோர்த்த எழில் நிறைந்த அரையில் அணியும் வடத்தை

தெழ்கு - இடுப்பில் அணியும் அணிகலன்

விடையேறு காபாலி ஈசன்விடு தந்தான் - காளையின் மீது ஏறிவரும் காபாலம் என்னும் கூத்தை உடைய சிவன் அனுப்பி இருக்கிறான்

விடை - காளை

காபாலி - சிவன் பிரமனின் (ஐந்தாவது)தலையைக் கொய்து அந்த மண்டை ஒட்டை வைத்துக் கொண்டு ஆடும் கூத்து.

பதிவர் குமரனின் கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து என்ற பதிவிலிருந்து

கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.

உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ - அதனைப் பெற்றுக் கொண்டு அழாதிருப்பாயாக, உலகம் அளந்த பெருமாளே அழாதிருப்பாயாக

பதவுரை:

நீ அழும் குரல் கேட்டு உன் மாப்பிள்ளை பெருஞ்செல்வர்கள் தங்களுக்குப் பெருமை எனப் போற்றும் அரிய மணிகளோடு அழகிய மாதுளம்பூக்களை இடையே கோர்த்த எழில் நிறைந்த அரைஞான் கயிரொன்றை அனுப்பி இருக்கிறான். அதை நான் உனக்குத் தருவேன். அதனைப் பெற்றுக் கொண்டு முன்பு உலகம் அளந்த பெருமாளே அழாதிருப்பாயாக.

22 comments:

Radha said...

பாடல் பொருள் பற்றி ஒரு கேள்வி.
மாதுளம் பூ என்பது ஒரு வகை மணியா? அல்லது வாடிவிடும் ஒருவகை பூவா? இல்லை வேறு ஏதாவது பொருள் உள்ளதா? இரண்டாமது என்றால் மணிகளோடு அதனையும் சேர்த்து செய்யும் அணிகலன் சிலநாட்கள் கழித்து முன்னர் இருந்த எழிலோடு இருக்குமா? இல்லை காபாலி கொடுக்கும் மாதுளம் பூ வாடாத வகையா ?
விதண்டா வாதத்திற்கு மன்னிக்கவும். ;-) இலக்கணம் யாப்பு பத்தி எல்லாம் விவாதிப்பதற்கு போதிய அறிவு இல்லை...அதனால் இப்படி ஒரு வெட்டி கேள்வி. நீங்க தான் யாப்பு இலக்கணம் பத்தி எல்லாம் சென்ற மாத முடிவில் பதிவுகள் வரும்னு சொல்லி ஏமாத்திட்டீங்க. :)

Anonymous said...

சிலநாட்கள் கழித்து முன்னர் இருந்த எழிலோடு இருக்குமா?

பூக்களும் புனிதமாகும் வாடாட புதுமை ஆகும் காக்க வேண்டும் கண்ணா திருவடி சரணங்களே ! சுப்ரபாத பாடல் --- மாமன் கொடுத்த பூ வாடி விடுமா .. கண்ணன் மேல் பட்டவுடன் மேலும் மலரும்
யாப்பு இலக்கணமா அப்படீன்னா!!!!என்னங்க

Radha said...

//யாப்பு இலக்கணமா அப்படீன்னா!!!!என்னங்க//
ராஜேஷ்,
"நல்ல வேளை. பட்டர் அப்படின்னா யாரும் வெண்ணைன்னு சொல்லலை" அப்படின்னு ஒரு பின்னூட்டம் போட்டீங்களே... கேட்டு இருக்க வேண்டிய கேள்வி. :)
"தமிழ் தாயும் இறைவன் தானே"ன்னு தமிழ் அங்கே ஒரு புலம்பல் புலம்பி இருப்பார்...அவருக்காக ஒரு கேள்வி கேட்டு வைத்தேன். :)
~
ராதா

முகவை மைந்தன் said...

//மாதுளம் பூ என்பது ஒரு வகை மணியா? அல்லது வாடிவிடும் ஒருவகை பூவா?//

மணிகளுக்கு உடல் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை உண்டு. மாதுளம்பூ சூட்டைக் குறைக்கும். அதனால் தான் அதனை இடுப்பில் அணிவிக்கிறார் தாயுமான பெரியாழ்வார். மணிகள் அணிவித்தால் குழந்தைக்கு முதுகில் உறுத்தாதோன்னும் தோணுது.

வாடும் மலர்கள்னு வைச்சுக்கிட்டாலும் நாளுக்கொரு இடைக்கொடி அனுப்ப வழியில்லாதவனா காபாலக் கூத்தாடி :-)

//நீங்க தான் யாப்பு இலக்கணம் பத்தி எல்லாம் சென்ற மாத முடிவில் பதிவுகள் வரும்னு சொல்லி ஏமாத்திட்டீங்க. :)//

எழுதணும் ராதா. முறையாகத் தமிழ்ப் படிக்காத குறையை போக்கத் தான் இந்த முயற்சி. இயன்ற விரைவில் இலக்கணம் கற்று எழுதுகிறோம். பாடல்களில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதாக இல்லை. அதுதான் உண்மை.

முகவை மைந்தன் said...

கலவை, தமிழ் தட்டச்சு கைவருகிறது போல. வாழ்த்துகள்.

இங்க போனா இன்னும் சிறப்பா தட்டச்சப் பழகலாம். http://tamil99.org/tamil99/

முகவை மைந்தன் said...

ராதா, கலவை, வருகைக்கு நன்றி!

முகவை மைந்தன் said...

//விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்//

ஒரு சின்ன இலக்கணக் குறிப்பு. இந்த வரியை விடையேறு காபாலி ஈசன்விடு தந்தான் அப்படின்னு எழுதுனா வெண்டளை அடுத்த அடியில் தொடரும். ஆனா இப்படிச் சீர்களை மாத்தி எழுதலாமான்னு தயக்கமா இருந்துச்சு. அறிஞர் குழுமம் ஒன்றில் கேட்டேன். வெண்டளைக்காக மாற்றி எழுதுவதும் தவறில்லை, மாற்றாதிருந்தாலும் கலித்தாழிசையில் அடிகளுக்கிடையே வெண்டளைத் தொடர்ச்சி தேவையில்லை என்பதால் அதுவும் தவறில்லைன்னு சொன்னாங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அழும் குரல் கேட்டு உன் மாமன்//

ஒரு சின்ன திருத்தம்:
கபாலி கண்ணனுக்கு மாமன் அல்ல! :)
கண்ணன் தான் முருகனுக்கு மாமன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு//

அட, மாதுளம் பூவை எதுக்கு மணியோடு கோர்த்து அரை ஞாண் கயிறு கட்டணும்? மணி பொடி மணி தான்! குழந்தைக்கு உறுத்தாது! அப்போ எதுக்கு மாதுளம் பூ?

கண்ணன் குழந்தை ஆண் குழந்தை! ஹிஹி! மறைப்பா ஆலிலையை வெள்ளி-ல தொங்க விடுவாங்க அரைஞாக் கொடியில! :)

ஆனா அனுப்புறது ஈசன்! கபாலி! பாவம் அவரு எங்கே போவாரு தங்கம் வெள்ளிக்கு? அவருக்கே தோலாடையும், சங்குமணியும் தான்! :)

ஆனாலும் அன்பு நெறைய இருக்குல்ல? அதான் மறைக்கும் அளவுக்கு அளவுள்ள, அதே போல், மாதுளம் பூவைக் கோர்த்து ஆசையா அனுப்பி வைக்கறாரு! மாதுளம் பூ படத்தை இந்தா பாருங்க! வெளங்கும்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உடையார் கனமணியோடு//

மணிகள் பொருந்திய அரைஞாண் கயிறு மட்டும் காசு அதிகம் இல்லையா-ன்னு எல்லாம் கேட்கப்பிடாது! :)

மணியை அவரு மனைவி ராஜகுமாரி மீனாச்சி அனுப்பி வைக்க,
அதில் தன் பங்குக்கு மாதுளம் பூவை வச்சி அனுப்பறாரு எங்கள் ஈசன்!

பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைக்கும் பழமொழி ஞாபகத்துக்கு வரணுமே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மணிகளோடு அதனையும் சேர்த்து செய்யும் அணிகலன் சிலநாட்கள் கழித்து முன்னர் இருந்த எழிலோடு இருக்குமா? இல்லை காபாலி கொடுக்கும் மாதுளம் பூ வாடாத வகையா ?//

ஹிஹி!
இந்த ஒரு பூ மட்டும் வாடவே வாடாது! எப்பமே வாசமா இருக்கும்!

அது என்னா பூ? :)

நாடீர் நாள்தோறும் "வாடா மலர்" கொண்டு
பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே!

என்ற நம்மாழ்வார் பாட்டைத் தான் இப்போ துணைக்கு அழைக்கணும், இதுக்குப் பதில் பெற!
அது என்ன "வாடா மலர்"? தேவலோகப் பாரிஜாதமா? அதுக்கு எங்கிருந்து போவாங்க எளிய மக்கள்? என்ன நம்மாழ்வார் இப்படிப் பாடிப்புட்டாரே? :)

மேயான் வேங்கடம் "காயா மலர்" வண்ணன்
பேயார் முலையுண்ட வாயான் மாதவனே!

அவன் தான் காயா மலர்! அவன் அன்பு தான் வாடாத மலர்! அது தான் வாடவே வாடாது! அது அன்-பூ!
அதைத் தான் ஈசன் கண்ணபிரானுக்கு அனுப்பி வைக்கிறான்! :)

Radha said...

//பாடல்களில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதாக இல்லை. அதுதான் உண்மை.//
:)

//விடையேறு காபாலி ஈசன்விடு தந்தான் அப்படின்னு எழுதுனா வெண்டளை அடுத்த அடியில் தொடரும்...//
ஒன்னும் புரியலே...ஆனால் உங்கள் ஆர்வம் என்னையும் தொற்றி நானும் யாப்பிலக்கணம் படிக்க ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். :)

முகவை மைந்தன் said...

//கபாலி கண்ணனுக்கு மாமன் அல்ல! :)
கண்ணன் தான் முருகனுக்கு மாமன்! :)//

ஆமாம் ரவி. தவறாகக் குறிப்பிட்டு விட்டேன். குழந்தை என்றதுமே மாமனின் நினைவு வந்து விட்டது. அவர்கள் இருவரும் மாப்பிள்ளை உறவு முறை!

முகவை மைந்தன் said...

//ஒன்னும் புரியலே...ஆனால் உங்கள் ஆர்வம் என்னையும் தொற்றி நானும் யாப்பிலக்கணம் படிக்க ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். :)//

எளிது தான் ராதா. அகரம் அமுதா எளிமையாக எழுத்து, அசை, தளை பத்தி துவக்கப் பாடங்கள்ல இங்கன http://venbaaeluthalaamvaanga.blogspot.com தந்திருக்காரு. இதை மட்டும் புரிஞ்சிக்கிட்டாலே பாடல்களை ஒரு படி அணுக்கமாக சுவைக்கலாம்.

Anonymous said...

//கபாலி கண்ணனுக்கு மாமன் அல்ல! :)
கண்ணன் தான் முருகனுக்கு மாமன்! :)//

பெருமாளின் தங்கை சக்தி .. சக்தியின் கணவர் ஈசன்
அப்படிஎன்றால் பெருமாளின் தங்கை கணவர் ஈசன் பெருமாளுக்கு மாமன் தானே
தங்கை சக்தியின் மகன் முருகன்
முருகனுக்கு மாமன் பெருமாள்

Anonymous said...

முகவை மைந்தன் said...
கலவை, தமிழ் தட்டச்சு கைவருகிறது போல. வாழ்த்துகள்

தட்டச்சு எல்லாம் இல்லீங்க -- கூகிள் மொழி மாற்றம்தான் காரணம்

Anonymous said...

எங்கப்பா வீராவேசமா புறப்பட்ட புலியை காணோம்
புலி பதுங்கி விட்டதா
(புலி means தமிழ்)

தமிழ் said...

//எங்கப்பா வீராவேசமா புறப்பட்ட புலியை காணோம்
புலி பதுங்கி விட்டதா//

புலிக்கு ரெஸ்ட்! முகவைகிட்ட சொல்லி, உங்களை எல்லாம் கவனிக்க சொல்லி இருக்கேன் :)))

பாயும் நேரம் வெகு விரைவில்!

குமரன் (Kumaran) said...

தங்கை கணவரை மாமா என்றா சொல்வார்கள்? மாப்பிள்ளை என்று அழைப்பதைத் தான் எங்கள் பக்கம் பார்த்திருக்கிறேன். அக்கா கணவரைத் தான் மாமா என்பார்கள்.

அழும் குழந்தைகள் அழுகை நிறுத்த வேண்டுமென்றால் 'பாரு பூச்சாண்டி வர்றான்'ன்னு சொல்லி பயமுறுத்துவாங்க; பூச்சாண்டின்னா திருநீறு பூசிய ஆண்டியான சிவபெருமான்னு ஒருத்தர் பொருள் சொல்லியிருக்கார். அது போல காபாலி ஈசன் வர்றான்; கண்ணா அழாதே அழாதேன்னு பெரியாழ்வார் சொல்றது போல இருக்கு. :-)

Anonymous said...

தங்கை கணவரை மாமா என்றா சொல்வார்கள்? மாப்பிள்ளை என்று அழைப்பதைத் தான் எங்கள் பக்கம் பார்த்திருக்கிறேன். அக்கா கணவரைத் தான் மாமா என்பார்கள். :)))

ஹி ஹி எங்க தங்கச்சி கணவரை மாமா தாம்பா சொல்றேன்
சரி பெருமாளும் ஈசனும் ஒன்னுதான்

தமிழ் said...

எங்கப்பா வீராவேசமா புறப்பட்ட புலியை காணோம்
புலி பதுங்கி விட்டதா
(புலி means தமிழ்)//

நான் புலி எல்லாம் இல்லீங்க! சாதாரண ஒரு புள்ளப்பூச்சியப்பாத்து இப்படியெல்லாம் கேக்கப்படாது... :-)

தமிழ் மொழி எப்பொழுதுமே புலிதாங்க... பதுங்காத புலி!! நாம பதுக்காம இருந்தா சரி... ;-))

மூன்றாம் திருமொழியும், நான்காம் திருமொழியும் முகவை மைந்தன் எழுதுறத சொல்லிருக்காரு...

Skull drawings in ganesh said...

இது ஒரு கேள்வியல்ல பல கேள்விகள்